சென்னை புரசைவாக்கத்தில் கழக அயலக அணி சார்பில், முத்தமிழ் அறிஞரின் செம்மொழி நாளை முன்னிட்டு 'கல்விக்கு உதவுதல் கழகப் பணி கலைஞர் போல் யார் பிறப்பார் இனி' என்ற தலைப்பில் மாணவ மாணவியருக்கு கல்வி உதவித் தொகை மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி எழும்பூரில் நடைபெற்றது.
இதில் அமைச்சர்கள் சேகர்பாபு, கோவி செழியன், நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, நடிகர் விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவ மாணவியர்களுக்கு கல்வி உதவித் தொகையும், கல்வி உபகரணங்களையும் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜயகுமார், "பட்டுக்கோட்டையில் நான் படிக்கும்போது ராஜாஜி முதலமைச்சராக இருந்தார். அப்போது அவர் குலக்கல்வி திட்டத்தை கொண்டுவந்தார். இந்த குலக்கல்வி திட்டத்தினால் நான் எனது படிப்பை 8 ஆம் வகுப்போடு முடித்துக் கொண்டேன்.
ஆனால் இன்று அப்படி இல்லை. ’காலை உணவு திட்டம்’, ’புதுமைப் பெண்’, ’தமிழ்ப்புதல்வன்’ போன்ற திட்டங்களை கொண்டு வந்து மாணவர்களின் கல்விக்காக இரவு, பகல் பாராமல் உழைத்து வருகிறார் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மாணவச் செல்வங்கள் எல்லோரும் நன்றாக படித்து நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும், பிறந்த வீட்டிற்கும் தாய் தந்தைக்கும் பெருமை சேர்க்க வேண்டும்.
முதலமைச்சருக்கு உறுதுணையாக இருந்து, இந்து அறநிலையத்துறையை சிறப்பாக வழிநடத்தி வருகிறார் அமைச்சர் சேகர்பாபு. தினந்தோறும் ஆயிரம் பேருக்கு உணவு அளித்து வருகிறார். இந்த மனது யாருக்கும் வராது. சேகர்பாபுவைபோல் மற்ற அமைச்சர்களும் தங்களது துறைகளில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.” என தெரிவித்துள்ளார்.