சென்னை போன்ற பெரு நகரங்களில் Swiggy, Zomato போன்ற உணவு டெலிவரி சேவை செய்யும் நிறுவனங்கள் 24 மணி நேர உணவு டெலிவரி சேவையை வழங்கி வருகின்றன. இந்த நிறுவனங்களில், உணவு டெலிவரி செய்யும் வேலையில், ஆயிரக்கணக்கான ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ஊழியர்கள் மழை, வெயில் போன்ற கடினமான சூழல்களில் கூட டெலிவரி செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்த டெலிவரி ஊழியர்களில் 10 சதவீதம் பேர் பெண்களாக இருக்கும் நிலையில், இந்த ஊழியர்களுக்கு குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே உள்ளது
இந்நிலையில், இந்த ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு சென்னையின் முக்கிய சாலைகளில்,ஏசி ஓய்வறையை அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அதன்படி 600 சதுரஅடி பரப்பளவில் அமையவுள்ள இந்த ஓய்வறையில், 20 அடி நீளம் 10 அடி அகலத்தில் கழிவறை, குடிநீர், செல்போன் சார்ஜ் செய்யும் வசதிகள் இருக்கும் என்றும், 25 பேர் வரை ஒரே நேரத்தில் பயன்படுத்த முடியும் என்று கூறப்பட்டுள்ளது. அதோடு 20 இரு சக்கர வாகனங்கள் வரை பார்க்கிங் செய்யும் முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக இந்த இணையவழி தொழிலாளர்களுக்கான ஓய்வுக்கூடம் சோதனை அடிப்படையில், அண்ணா நகரில் திறக்கப்பட்டது. இதற்கு நல்ல வரவேற்பு இருந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்டமாக தியாகராய நகரில் உள்ள பாண்டி பஜாரில் இணையவழி தொழிலாளர்களுக்கான ஓய்வுக்கூடம் விரைவில் திறக்கப்படவுள்ளது.
ஏசி மற்றும் மொபைல் ஜார்ஜிங் வசதி உடன், 25 பேர் அமரக்கூடிய வகையில் 20 அடி நீளம் 10 அடி அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. டெலிவரிக்கு இடையில் ஓய்வு எடுக்கக் கூடிய வகையில் பாதுகாப்பாக சுகாதாரமான முறையில் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு அடுத்து வேளச்சேரி, மதுரவாயில், அம்பத்தூர் ஆகிய இடங்களிலும் அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது