சென்னை கொரட்டூரில் உள்ள தனியார் மண்டபத்தில் திமுக சார்பில் முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு, திமுக மாமன்ற உறுப்பினர் மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் நாகவல்லி பிரபாகரன் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சாமுவேல், சென்னை மேயர் பிரியா உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் போது 15 கருணை இல்லங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
நலத்திட்ட உதவிகளை வழங்கிய பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி பேசியதாவது :-
"பழனியில் அமைச்சர் சேகர்பாபு முருகன் பக்தர் மாநாடை சிறப்பாக நடத்தி முடித்தார். தமிழகத்தில் ராமா ராமா என்று சொல்லிப் பார்த்தார்கள் அது எடுபடவில்லை. தமிழ் கடவுள் முருகன் பெயரை சொல்லியாவது மாற்று வேடத்தில் வரலாம் என உள்ளே வருகின்றனர் பாஜக, ஆர்.எஸ்.எஸ்.
ஆனால் தமிழ்நாட்டு மக்கள் ஒன்றும் ஏமாளிகள் இல்லை. ஆன்மீகத்துக்கு எதிரான அரசியலுக்கு தமிழ்நாடு களமல்ல. தமிழ்நாட்டை திராவிட மாடல் நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்திக் கொண்டிருக்கின்றார். அதற்கு போட்டியாக யார் நடத்தினாலும் அவருக்கு இணையாகது. தமிழ்நாட்டு மக்களை முருகன் பெயரை சொல்லி ஏமாற்ற முடியாது." என்றார்.
=> தொடர்ந்து சமீபத்தில் பாஜக நிர்வாகிகள் கைதானது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர்...
நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே வைத்து வரும் குற்றச்சாட்டு, இந்தியாவில் கிரிமினல்களை அதிகமாக சேர்க்கும் கட்சி பாஜக என்பதுதான். பாஜகவில் இருப்பவர்கள் அதிகமானோர் குற்றவாளிகள்தான். எவ்வளவு பேர் இருக்கிறார்கள், எந்தெந்த மாநிலத்தில் இருக்கிறார்கள் உள்ளிட்டவைகளை ஆதாரத்துடன் நாங்கள் தெரிவித்து இருந்தோம்.
கிரிமினல் குற்றவாளிக்கு அடைக்கலம் தரும் கட்சி பாஜக. ஆனால் கட்சியில் கிரிமினல்கள் இருக்கிறார்கள் என தெரிந்தால் உடனே அவர்களை வெளியேற்றும் கட்சிதான் திமுக." என்றார்.
=> தொடர்ந்து தமிழகத்தில் அதிக குற்றங்கள் நடைபெறுகிறது என எடப்பாடி பழனிசாமி விமர்சனத்திற்கு பதில் அளித்த அமைச்சர்...
"'பூனை கண்ணை மூடி கொண்டால் இருண்டு விடும்' என்று சொல்வார்கள். அதுபோல எடப்பாடி பழனிசாமிக்கு எதைப் பார்த்தாலும் பாதுகாப்பு இல்லை என சொல்வதே வழக்கமாக போய்விட்டது. அவர் காலையில் எழுந்த உடனே பாதுகாப்பு இல்லை என சொல்வதும் கூச்சலிடுவதும் அவருடைய தினசரி பணியாகி விடுகிறது.
கீழடி நாகரிகத்தை உலகத்திற்கு கொண்டு சேர்த்தவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவர் மட்டும் முயற்சி எடுக்காமல் இருந்திருந்தால், கீழடி நாகரிகம் இருக்கிறது என்பதே தெரியாமல் போயிருக்கும். அதற்கு முழு முயற்சி எடுத்த அரசு திமுக அரசுதான். மற்றவர்கள் எதை சொன்னாலும் தமிழ்நாட்டு மக்கள் நம்ப மாட்டார்கள். தொன்மையான நாகரிகத்தை உலகத்திற்கு எடுத்துக்காட்டுவது முதலமைச்சர் விட வேற யாரும் இல்லை.
எடப்பாடி பழனிசாமி விவசாயி இல்லை. தோளில் கலப்பை வைத்தவர்கள் எல்லாம் விவசாயிகள் இல்லை. அவர் எந்த களத்தில் இறங்கி விவசாயம் செய்தார். எடப்பாடி பழனிசாமி ஒரு போலி விவசாயி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்வதில் ஒரு தவறும் இல்லை." என்றார்.