தமிழ்நாடு

சென்னை மாணவி பாலியல் வழக்கு : குற்றவாளி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை - நீதிமன்றம் தீர்ப்பு!

சென்னை மாணவி பாலியல் வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாணவி பாலியல் வழக்கு : குற்றவாளி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை - நீதிமன்றம் தீர்ப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக பல்கலைக்கழக மாணவி ஒருவர் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் டிசம்பர் 24 ஆம் தேதி புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில், விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், ஞானசேகரன் என்பவரை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 24 தேதி கைது செய்தனர். பின்னர் கோட்டூர்புரம் காவல்துறை விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என கோரி தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் கடந்த டிசம்பர் 28ம் தேதி 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.

இதையடுத்து, கடந்த 2025 ஜனவரி மாதம் 5ம் தேதி ஞானசேகரனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை பெருநகர காவல் ஆணையர் உத்தரவிட்டிருந்தார்.

இவ்வழக்கை விசாரித்த சிறப்பு புலானாய்வு குழு, கடந்த பிப்ரவரி மாதம் 24 ம் தேதி சென்னை சைதாப்பேட்டை 9 ஆவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஞானசேகரனுக்கு எதிராக சுமார் 100 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதில் ஞானசேகரன் ஒருவர் மீது மட்டுமே குற்றம்சாட்டப்பட்டு இருந்தது.பின்னர் இந்த வழக்கின் விசாரணையை சென்னை மகளிர் நீதிமன்றத்திற்கு கடந்த மார்ச் 7 ஆம் தேதி மாற்றப்பட்டது.

இந்நிலையில் தனக்கு எதிராக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தவறானது எனவும் ஆதாரங்கள் இல்லாமல் தனக்கு எதிராக குற்றச்சாட்டுகளை காவல்துறை கூறியுள்ளதால், வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என ஞானசேகரன் தரப்பில் தாக்கல் செய்த மனுவை மகளிர் நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி தள்ளுபடி செய்து அன்றைய தினமே குற்றச்சாட்டு பதிவு செய்தது.

இதனையடுத்து சென்னை மகளிர் நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் 23ம் தேதி முதல் சாட்சிகள் விசாரணை தொடங்கியது. தினந்தோறும் சாட்சி விசாரணை நடத்தப்பட்டது. வழக்கில் காவல் துறை தரப்பில் 29 சாட்சிகள் நேரில் ஆஜராகி நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தனர். காவல்துறை தரப்பில் சுமார் 75 சான்று ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யபட்டது.

கடந்த 20 ஆம் தேதி வழக்கின், அனைத்து சாட்சி விசாரணை மற்றும் குறுக்கு விசாரணைகளும் நிறைவடைந்த பின்னர் இரு தரப்பினரும் இறுதி வாதங்களை முன்வைத்தவர். இரு தரப்பு இறுதி வாதங்கள் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கில் மே 28 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை மகளிர் நீதிமன்ற அறிவித்திருந்தது.

அதன்படி, இந்த வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என மே.28 ஆம் தேதி சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி தீர்ப்பு வழங்கினார். பின்னர் தண்டனை விவரம் ஜூன் 02 ம் தேதி வழங்கப்படும் என கூறி ஒத்திவைத்தார்.

இந்நிலையில் இன்று குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகளுக்கு குறையாத ஆயுள் தண்டனையும், ரூ.90 ஆயிரம் அபராதமும் விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்டு, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்த தமிழ்நாடு காவல்துறைக்கு நீதிபதி ராஜலட்சுமி பாராட்டு தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories