மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக வருகை தந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மே 31 மாலை, நடைபயணம் மேற்கொண்டு பெருந்திரளான பொதுமக்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டு, மதுரை முதல் மேயர் எஸ். முத்து அவர்களின் புதுப்பிக்கப்பட்ட சிலையை திறந்துவைத்த பிறகு, சுற்றுலா மாளிகைக்கு செல்லும் வழியில் பந்தல்குடி வாய்க்காலை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
கடந்த ஆண்டு மழை வெள்ளத்தின்போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பந்தல்குடி வாய்க்கால், பி.பி. குளம் வாய்க்கால், அனுப்பானடி வாய்க்கால் ஆகியவற்றில் 1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தூர் வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
பந்தல்குடி வாய்க்காலை ஆய்வு செய்து தூர் வாரும் பணிகளை மேற்கொள்ளவும், சுற்றுசுவர்களை கட்டும் பணிகளை மேற்கொள்ளவும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு அறிவுறுத்தினார்.
மாநகராட்சியின் சார்பில் தூர் வாரும் பணிகளுக்கு 23 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், நீர்வளத் துறையின் சார்பில் தடுப்புச்சுவர் கட்டுவதற்கு 63 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் பணிகளை மேற்கொள்வதற்கு முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளது என்பதை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்தார். முதலமைச்சர் அவர்கள், விரைந்து அதற்கான அரசாணையை பெற்று உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அறிவுறுத்தினார்.