திராவிட நாயகன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் தமிழ்நாடு மிகப்பெரிய தொழில் வளர்ச்சியை அடைந்து வருகிறது. மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தியில், தமிழ்நாடு 100 பில்லியன் டாலர் இலக்கை நோக்கி பயணித்து வருகிறது என அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தெரிவித்துள்ளார்.
இது குறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தொழில்துறை அமைச்சர் டி .ஆர். பி ராஜா, "திராவிட நாயகன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் தமிழ்நாடு மிகப்பெரிய தொழில் வளர்ச்சியை அடைந்துள்ளது.மின்னணு துறை வளர்ச்சியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு மிகப்பெரிய வளர்ச்சியை எட்டியுள்ளது.
14.6 பில்லியன் அமெரிக்கா டாலர் இந்திய ரூபாய் மதிப்பில் ஒன்னே கால் லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு மின்னணு உதிரிபாகங்கள் தயாரிப்பு தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ளது. 100 பில்லியன் டாலர் இலக்கை நோக்கி தமிழ்நாடு பயணிக்கிறது. ஃபோன் கேமரா டிஸ்ப்ளே, எஸ். எம். டி கம்பொணன்ஸ், ஃபிட்னஸ் ரிங் பேண்ட் ஆகிய தயாரிப்புகள் இதில் முக்கிய இடம் பெறும்.
உலகம் எதை நோக்கி செல்கிறது என்பதை அறிந்து அதை நோக்கி தமிழ்நாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைத்து செல்கிறார். இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாடு மின்னணு உதிரிபாக சிறப்பு திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று வெளியிட்டுள்ளார். இந்தியாவின் மின்னணு பொருட்கள் உற்பத்தியில் 41.23% தமிழ்நாட்டில் இருந்து தயாரிக்கப்படுகிறது.மின் வாகன உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
அனைத்து மின்னணு பொருட்களுக்கும் தயாரிக்க தேவைப்படும் மின்னணு உதிரி பாகங்கள் தமிழ்நாட்டில் தயாரிக்கபட உள்ளது. தமிழ்நாட்டில் செய்யப்படும் ஒரு பொருளின் தரம் வேறு எங்கும் தயாரிக்க முடியாது. அதற்கு தேவையான உட்கட்டமைப்பு, மனிதவளம் எல்லாம் தமிழ்நாட்டில் தான் உள்ளது. ஃபோர்ட் நிறுவனம் மீண்டும் திறக்கப்பட உள்ளது அதற்கான முதல் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. ஒன்றிய அரசு நிதி கொடுக்கவில்லை என்றாலும் தமிழ்நாடு வளர்ச்சி பாதையில் செல்கிறது" என தெரிவித்துள்ளார்.