தமிழ்நாடு சட்டப்பேரவை கடந்த மார்ச் 14-ம் தேதி தொடங்கி, நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு துறைகள் மீதான கேள்விகளுக்கு அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்தும், புதிய அறிவிப்புகள் வெளியிட்டும் வருகின்றனர்.
அந்த வகையில் இன்று நடைபெற்ற கூட்டத்தொடரில் ‘சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி’ தொடர்பாக உறுப்பினரின் கேள்விக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார். அந்த பதில் வருமாறு :
இங்கு காங்கிரஸ் உறுப்பினர் சந்திரசேகர் அவர்கள் உரையாற்றுகிபோது, சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி உயர்வைப் பற்றிப் பேசியிருக்கிறார். அவர் மட்டுமல்ல; பலரும் இதுகுறித்து என்னிடத்தில் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்; மனுக்கள் மூலமாகவும் என்னிடத்தில் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியைப் பொறுத்தவரையில், தமிழ்நாட்டில் அதிக நிதி ஒதுக்கீடு செய்கிறோம் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, ஒரு தொகுதிக்கு ஆண்டுதோறும் 3 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, மக்கள் நலப் பணிகளெல்லாம் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.
ஆனால், அதே நேரத்தில் ஜி.எஸ்.டி. வரி அறிமுகப்படுத்தப்பட்ட பின்பு, இந்தத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மேற்கொள்ளப்படும் பணிகளின் மீது விதிக்கப்படும்
18 சதவீத வரித் தொகையும் இந்த நிதியிலிருந்தே கட்டப்படுவதால், தொகுதி நிதியிலிருந்து மேற்கொள்ளப்படும் பணிகள் பாதிக்கப்படுவதாக பல்வேறு சட்டமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.
இதையெல்லாம் கருத்திலேகொண்டு, இதுகுறித்து ஆராய்ந்து, வரி செலுத்துவதால் தொகுதி மேம்பாட்டுப் பணிகள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில், இந்த 18 சதவீத வரித் தொகையை தமிழ்நாடு அரசே ஏற்கும் என்பதை உறுப்பினர்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.