தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று கேள்வி நேரத்தின் போது, அரசு ஊழியர்களின் நீண்டநாள் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக அரசின் நிலைப்பாடு என்ன? என அதிமுக உறுப்பினர் மரகதம் குமரவேல் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்து பேசிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு ,”அரசு ஊழியர்கள் நலனில் அக்கறை கொண்டிருக்கும் முதலமைச்சரின் ஒப்புதலைப் பெற்று நிதிநிலை அறிக்கையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அரசு ஊழியர்களுடைய நலனில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகுந்த அக்கறையுடன் இருக்கிறார். அந்த வகையில் ஊழியர்களுடைய கோரிக்கைகள் அரசு மிகுந்த கவனத்தோடு பரிசிலீத்து வருகிறது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை பொறுத்தவரை அரசு ஒரு குழுவை நியமித்துள்ளது. ஐஏஎஸ் அதிகாரி ககன்தீப் சிங் பேடி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவுக்கான கால வரையறைகள் தரப்பட்டிருக்கிறது. அந்த குழுவை பொறுத்தவரை பல்வேறு அரசு ஊழியர் சங்கங்கள், ஆசிரியர்கள் சங்கங்கள் பல கருத்துகளை தெரிவித்துள்ளனர். அதனை முதலமைச்சரிடம் கலந்து பேசி கோரிக்கைகளை அரசு மிகுந்த கவனத்தில் எடுத்து கொண்டு உள்ளது. அவர்கள் கேட்டிருக்க கூடிய கோரிக்கைகளை குழுவிடம் விவாதித்து உரிய நேரத்தில் சரியான முடிவை அரசு மேற்கொள்ளும்” என தெரிவித்துள்ளார்.