திருப்பூர் மாவட்டம், அவிநாசி செல்லாண்டியம்மன் கோயில் வீதி பகுதியை சேர்ந்தவர் நவீன்குமார். இவர் பா.ஜ.க கட்சியில் முன்னாள் நகரச் செயலாளராக இருந்துள்ளார். இவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, அவிநாசி சூளைபகுதியில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின் அடுக்குமாடி கூடியிருப்பில் வீடு வாங்கி தறுவதாக 20க்கும் மேற்பட்டோரிடம் பணம் வாங்கியுள்ளார்.
ஆனால், அவர் சொன்னபடி யாருக்கும் வீடு வாங்கி கொடுக்கவில்லை. இதில் பாதிக்கப்பட்ட ஆனந்தி என்ற பெண், தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார். ஆனால் நவீன்குமார் பணத்தை தராமல் ஏமாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு ஆனந்தி, நவீன்குமாரிடம் மீண்டும் பணத்தை திருப்பிக்கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் பெண் என்றும் பாராமல் ஆனந்தியை தகாத வார்த்தைகளால் திட்டி, அவர் மீது காரை கொண்டு மோதியுள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் ஆனந்தியை ஏமாற்றியதுபோல் 20க்கும் மேற்பட்டவர்களிடம் வீடு வாங்கி தருவதாக ரூ.7 லட்சம் வரை ஏமாற்றியது தெரியவந்தது. இதையடுத்து போலிஸார் பா.ஜ.க. முன்னாள் நகர செயலாளர் நவீன்குமாரை கைது செய்து அவிநாசி கிளைச் சிறையில் அடைத்தனர்.