ஒன்றிய பா.ஜ.க அரசு, எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து அரசியல் செய்து வருகிறது. இதனால் ஆளுநர்கள் மாநில அரசுகளின் முடிவுகளில் திட்டமிட்டே தலையிட்டு, திட்டங்களுக்கு முட்டுக்கட்டைகளை ஏற்படுத்தி வருகிறார்கள்.
அதிலும் குறிப்பாக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர்கள் இழுத்தடித்து வருகிறார்கள். மாநில அரசுகளின் ஜனநாய உரிமைகளில் ஆளுநர்கள் குறுக்கீடு செய்து வருகிறார்கள்.
அப்படிதான் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியும், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல், காழ்புணர்ச்சியுடன் நடந்து கொண்டு வருகிறார். ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் ஆளுநர் ஆர்.என்.ரவி, குடியரசு தலைவருக்கு அனுப்பிவைத்த 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்துள்ளது உச்சநீதிமன்றம். மேலும் மசோதா மீது ஒரு மாதத்துக்குள் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும், மசோதாவை நிறுத்தி வைப்பதாக இருந்தால் மூன்று மாதத்துக்குள் அரசுக்குத் தெரிவிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் ஆளுநர்களுக்கு அறிவுரைகளை வழங்கியுள்ளது.
இந்த தீர்ப்பை அடுத்து ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலக வேண்டும் என அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், ல் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக சென்னை முழுவதும் ’Get out RN Ravi’ என்ற போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.