நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஏழை மக்களுக்கு மோடி அரசு துரோகம் செய்வதாக மக்களவையில் தி.மு.க MP கே. ஈஸ்வரசாமி காட்டமாக பேசியுள்ளார்.
அவையில் பேசிய கே.ஈஸ்வரசாமி MP," நாடு முழுவதும் வறுமைக்கோட்டிற்குகீழ் உள்ளவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை குறித்து ஒன்றிய அரசு கவலையில்லாமல் இருக்கிறது. கடந்த இரண்டாண்டுகளில் இவ்வெண்ணிக்கை பலமடங்கு அதிகரிப்பதன் காரணங்களை என்ன?. மேலும் அம்மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த திட்டங்கள் வகுத்து உடனடியாக செயல்படுத்த வேண்டும்” என வலியுறுத்தினர்.
பின்னர் தி.மு.க எம்.பி டி.மலையரசன் பேசும் போது, பிரதமரின் மீன்வளத்திட்டம் செயல்படுகிறதா? என கேள்வி எழுப்பினார். அப்போது பேசிய அவர், ”இதுவரை தமிழ்நாட்டில் இத்திட்டத்தின்கீழ் தொடங்கப்பட்ட செயல்திட்டங்கள் குறித்த விவரங்களை உடனைடியாக வழங்க வேண்டும். அதில் மீன் உற்பத்தி மற்றும் மீன்பிடி உட்கட்டமைப்பிற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் செலவிடப்பட்ட நிதியின் விவரங்களும் இத்திட்டத்தின்கீழ் பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப உதவி வகையில் பயனடைந்த மீனவர்கள், மீன் பண்ணை உரிமையாளர்கள் மற்றும் பெண்கள் சுய உதவிக்குழுக்கள் குறித்த எண்ணிக்கை விவரங்களையும் வெளியிட வேண்டும்.
அதோடு மழைக்காலங்களில் மீன்களை பதப்படுத்தும் கட்டமைப்புக்காக இதுவரை மேற்கொண்டுள்ள பணிகள் யாவை என்றும் ஏற்றுமதி வசதிகள் மற்றும் மீனவர் சமூகத்தின் வாழ்க்கை நிலையை மேம்படுத்தவும் இத்திட்டத்தில் ஏதேனும் செயல்திட்டத்திங்கள் உள்ளனவா?" எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.