சென்னை செனாய் நகரில் உள்ள தனியார் கன்வென்சன் சென்டரில் 2,500 பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 100 பேருக்கு பட்டாக்களை வழங்கி வாழ்த்தினார்.
இந்த நிகழ்வில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், , மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதிமாறன், கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கபாண்டியன்,மற்றும் சென்னை மாவட்ட சட்டமன்ற உறுப்பினர், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா,துணை மேயர் மகேஷ் பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, “பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒருமையாக பேசியது, அவர்களுடைய தரம். பெரிதாக ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. பிரச்னையை திசை திருப்ப முயற்சிக்கிறார்கள். கேட்கக்கூடிய நிதியை வாங்கி தர துப்பில்லை. இவர்கள் சவால் விடுகிறார்கள்.
தமிழ்நாட்டு மக்கள் இவர்களை Go Back Modi என்று சொல்லிவிட்டார்கள். 2018-ம் ஆண்டு திருட்டுத்தனமாக சுவரை உடைத்துக் கொண்டு மோடி வந்தார். மக்களை சந்திக்க பயந்தார். கருப்புக்கொடி காட்டினார்கள். பலூன் பறக்கவிடப்பட்டது. அதெல்லாம் அவர்களுக்கு ஞாபகம் இருக்கும். இந்த நிதி தொடர்பான பிரச்சினையை திசை திருப்ப பார்க்கிறார்கள். போஸ்ட் ஒட்டுவதெல்லாம் ஒரு சாதனையா? நான் வீட்டில் தான் இருப்பேன் வரட்டும்.
அண்ணா அறிவாலயம் குறித்து அண்ணாமலை ஏதோ கூறினாரே, முடிந்தால் அண்ணா சாலை பக்கமாவது வரட்டும். பிரச்சினையை உதயநிதிக்கும் பாஜக மாநில தலைவருக்கும் என்று மாற்றா முயற்சிக்கிறார்கள். நிதியை பெற்று தர முயற்சி செய்ய சொல்லுங்கள்.
தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்கள் வாரணாசியில் இரயில் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு கிரிக்கெட் போட்டி நடந்து கொண்டிருக்கிறது. தென் மண்டலத்தைச் சேர்ந்த ஆறு விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். அரை இறுதியில் வெற்றி வாய்ப்பை இழந்ததன் காரணமாக இன்று ஊருக்கு திரும்ப ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது.
ஆனால் கும்பமேளா காரணமாக கூட்ட நெரிசினால் அவர்களால் வர முடியவில்லை. கும்பமேளாவுக்கு சென்று வட மாநிலத்தில் தவித்த செய்தி தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம். சரியான நடவடிக்கையை அந்த மாநில அரசும் எடுக்கவில்லை, ஒன்றிய பாஜக அரசும் எடுக்கவில்லை. கூட்ட நெரிசலை எவ்வாறு கையாள்வது என்பது கூட தெரியவில்லை.
தமிழ்நாடு வீரர்களுக்கு ரயில் கிடைக்கவில்லை என்ற தகவல் கிடைத்தவுடன் முதலமைச்சரின் அறிவுறத்தலின்படி உடனடியாக விளையாட்டுத்துறை அதிகாரிகள் தொடர்பு கொண்டு அழைத்து வருவதற்கு முழு முயற்சியும் மேற்கொண்டார்கள்.
வீரர்களை அழைத்து வருவதற்கு உடனடியாக விமான டிக்கெட் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பிற செலவிற்கு 15 ஆயிரம் ரூபாயும் வங்கி கணக்கில் போடப்பட்டுள்ளது. மதியம் பெங்களூரு வந்து இரவு 9 மணிக்கு சென்னைக்கு விளையாட்டு வீரர்கள் பாதுகாப்பு வருவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.” என்றார்.