திருநெல்வேலி மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று திருநெல்வேலி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மேலும், திருநெல்வேலி மாநகராட்சியில் மொத்தம் ரூ.66 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து இன்று அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பங்கேற்பதற்காக வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சாலையில் திரண்டு இருந்த பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்களும் முதலமைச்சருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
அப்போது, இந்த அரசு உங்ளுக்கு பிடிச்சு இருக்கா?’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவிகளிடம் கேட்டார். அப்போது மாணவிகள், ’நான் முதல்வன்’, ’புதுமைப்பெண்’ என கல்விக்காக இந்த அரசு செய்துள்ள திட்டங்களை பட்டியலிட்டு, ’இந்த அரசை எங்களுக்கு பிடிச்சு இருக்கு’ என மகிழ்ச்சியுடன் கூறினர்.
அதேபோல், ” ’தமிழ்ப்புதல்வன்’ திட்டம் என்னைப் போன்ற மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. பணம் இப்போது எங்களுக்கு தடையாக இல்லை. கல்வியை எங்களால் தொடர முடிகிறது. ” என இந்த திட்டத்தால் பயனடைந்த மாணவன், முதலமைச்சரிடம் நெகிழ்ச்சியுடன் கூறினார்.