தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சிப் பணிகள் எவ்வித தொய்வுமின்றி அரசால் நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்கள் மூலம் முறையாக செயல்பட்டு வருகின்றன என அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் 2019-இல் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டு 28 மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக்காலம் 05.01.2025 அன்று முடிவடைந்ததை அடுத்து இந்த ஊரக உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அலுவலர்கள் அரசால் நியமனம் செய்யப்பட்டனர். அவ்வாறு நியமிக்கப்பட்ட தனி அலுவலர்கள் அனைவரும் முறையே 06.01.2025 அன்றே பொறுப்பேற்றனர்.
ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு கிராம ஊராட்சிகளின் செயல் அலுவலராக செயல்பட்டுவந்த கிராம ஊராட்சி தலைவர்கள் மேற்கொண்ட பணிகளை அந்தந்த கிராம ஊராட்சியின் தனி அலுவலரான வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திறம்பட மேற்கொண்டு வருகின்றனர்.
அந்தந்த ஊராட்சியின் ஊராட்சி செயலர் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நிலை அலுவலர்களுடன் பொதுமக்களின் அடிப்படை தேவை சார்ந்த புகார்கள் மற்றும் குறைகள் மீது உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல் கிராம ஊராட்சியின் நிதி பரிவர்த்தனைகளை எளிதாக மேற்கொள்வதற்காக நடைமுறைப்படுத்தப்பட்ட TN PASS தமிழ்நாடு எளிமைப்படுத்தப்பட்ட ஊராட்சி கணக்குகள் திட்டத்தில் தனி அலுவலர்கள் கையாளுவதற்கான மாற்றங்கள் முழுவதும் மேற்கொண்டு, தற்போது ஊராட்சி சார்ந்த நிதி பரிவர்த்தனைகளை அந்தந்த மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மூலம் முதல் நிலை ஒப்புதல் வழங்கி. வட்டார வளர்ச்சி அலுவலர் இறுதி ஒப்புதல் அளித்து அனைத்து நிதி பரிவர்த்தனைகளும் எவ்வித தொய்வின்றி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.தனி அலுவலர்கள் அனைவரும் கடந்த ஜனவரி 6-ம் தேதியே பொறுப்பேற்றனர்" என்று கூறப்பட்டுள்ளது.