காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த டிசம்பர் 14 ஆம் தேதி காலமானார். இதைத்தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக சட்டப்பேரவைச் செயலகம் அறிவித்தது.
அதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 5 ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8 ஆம் தேதியும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. மேலும் இதற்காக தேர்தல் பிரச்சாரம் பிப்ரவரி 3-ம் தேதி முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டது.
பின்னர் ஈரோடு கிழக்கு தொகுதியில் இந்த முறை திமுக போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டதோடு, தி.மு.க சார்பில் அக்கட்சியின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் வி.சி.சந்திரகுமார் போட்டியிடுவார் என தி.மு.க தலைமை கழகம் அறிவித்தது.
எதிர்க்கட்சிகள் இந்த தேர்தலை புறக்கணித்த நிலையில், சில சிறிய கட்சிகள் மட்டுமே இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர். தி.மு.க வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் தொகுதி முழுக்க அனைத்து மக்களையும் சந்தித்து வாக்கு சேகரித்தார். இந்த நிலையில் தேர்தல் ஆணையம் அறிவித்த படி இன்று மாலை 6 மணிக்கு தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து தேர்தல் விதிமுறைப்படி தொகுதியை சேராதவர்கள் வெளியேறவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.