“சீமான் பேச்சை அண்ணாமலையும், தமிழிசையும் வரவேற்கிறார்கள் என்றால் யாருடைய ஜெராக்ஸ் காப்பி சீமான் என்பது புரிகிறது. இது பெரியார் மண், அண்ணா மண், கலைஞர் மண் இது ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் நிச்சயம் நிரூபிக்கும்.” என அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
பட்டுக்கோட்டை அருகே செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கோவி. செழியன்,”நான் திராவிடன். இது திராவிட பூமி. பெரியார் என்ற மனிதர் இல்லை என்றால் நான் மனிதர் இல்லை என்று சீமானும் பேசியது உண்டு. ஆனால் இன்றைக்கு கைக்கூலியாக மாறி பெரியார் கொள்கைக்கு எதிராக பேசி திரிகிறார் சீமான்.தமிழ்நாட்டில் புறக்கணிக்கப்பட வேண்டியர் அவர்.
எந்த ஆயுதத்தை எடுத்து அவர் விளையாடுகிறார் என்று அவர் அறியாமல் விளையாடுகிறார். தந்தை பெரியார் என்பவர் பெரிய எரிமலை. ஒரு பூகம்பம். தமிழகத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டு ஒரு வளர்ச்சியை தேடித்தந்தவர் தந்தை பெரியார்.
சீமானின் பேச்சை அண்ணாமலை,தமிழிசை போன்றவர்கள் வரவேற்கிறார்கள்.இதை பார்க்கும் போது, யாருடைய ஜெராக்ஸ் காப்பி சீமான் என்பது அவரது பேச்சிலிருந்து புரிகிறது. அதை நாங்கள் பெரிதுபடுத்த விரும்பவில்லை.
பெரியார் என்ற மாமலையை தொட்ட யாரும் தமிழ்நாட்டில் நிலைத்து நின்றதில்லை. இது பெரியார் மண், அண்ணாமண், கலைஞர் மண் என்பதை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் நிச்சயம் நிரூபிக்கும்” என தெரிவித்துள்ளார்.