ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு வரும் பிப்.5-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு தேர்தலில் களம் காணும் கட்சியினர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் நாம் தமிழர் கட்சியினரும், தங்கள் வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி அண்மையில் பிரசாரத்தில் ஈடுபட்ட சீமான், “நான் வெடிகுண்டு வைத்திருக்கிறேன். வீசினால், உன்னை புதைத்த இடத்தில் புல் கூட முளைக்காது” என்று பேசினார்.
சீமானின் பேச்சு வன்முறையை தூண்டும் விதத்தில் இருந்ததால் கண்டனங்கள் குவிந்தது. இந்த சூழலில் தற்போது சரக்கு வாகன ஓட்டியிடம் வழி விட கோரி தாக்கிய நாம் தமிழர் கட்சியினரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி பிரசாரத்தில் நாம் தமிழர் கட்சியினர் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் சரக்கு வாகன ஓட்டுநர் நாகராஜ் என்பவர் மூலப்பட்ரையிலிருந்து மேட்டூர் சாலை வழியாக வந்தார். அந்த நேரத்தில் நாம் தமிழர் கட்சியின் பிரச்சாரம் செய்ய சென்ற வாகனத்திற்கு வழி விட முடியாதபடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இருந்தது.
இதனை அறியாத நாம் தமிழர் கட்சியினர், முன்னால் சென்ற சரக்கு வாகன ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து இந்த வாக்குவாதம் முற்றவே அது கைகலப்பாக மாறியதில், ஓட்டுநரை தாக்கியதோடு வாகனத்தின் கண்ணாடியை உடைத்து தகராறில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட வாகன ஓட்டுநர் நாகராஜ், ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, காவல் நிலையத்தில் புகார்.அளித்தார்.
அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சரக்கு வாகனம் மற்றும் ஓட்டுனர் மீது தாக்குதல் நடத்திய நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்களான ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த ஆதிநாராயணன் மற்றும் அரியலூரை சேர்ந்த புகழேந்தி ஆகிய இருவரையும் கைது செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இவர்கள் ஓட்டி வந்த வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.