பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு, நாள்தோறும் 5,900 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டு வருகிறது.பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் தூய்மையாகவும், சுகாதாரமாகவும் திகழ்ந்திடும் வகையில் அனைத்து போக்குவரத்து மற்றும் உட்புறச் சாலைகள், பேருந்து நிறுத்தங்கள், பூங்காக்கள், மயானபூமிகள், மேம்பாலங்கள், மேம்பாலங்களின் கீழ் உள்ள பகுதிகள் மற்றும் சுரங்கப்பாதைகளில் தீவிரத் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, குப்பைகள், கட்டடக் கழிவுகள், சுவரொட்டிகள் மற்றும் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பதாகைகள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, முதற்கட்டமாக பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட தண்டையார்பேட்டை, இராயபுரம், திரு.வி.க. நகர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மற்றும் அடையாறு ஆகிய 7 மண்டலங்கள் முழுவதும் சாலைகள் மற்றும் தெருக்களில் உள்ள கட்டட மற்றும் இடிபாட்டுக் கழிவுகளை அகற்றும் வகையில் தீவிரமாக கட்டடக் கழிவுகளை அகற்றும் தூய்மைப் பணியானது மேயர் திருமதி பிரியா அவர்களால் 07.01.2025 அன்று தொடங்கி வைக்கப்பட்டது.
அதனடிப்படையில், 07.01.2025 முதல் 16.01.2025 வரை தண்டையார்பேட்டை, இராயபுரம், திரு.வி.க. நகர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மற்றும் அடையாறு ஆகிய 7 மண்டலங்களிலும், இரண்டாம் கட்டமாக 17.01.2025 முதல் திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர், பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய 8 மண்டலங்கள் உட்பட அனைத்து 15 மண்டலங்களிலும் தீவிரமாக கட்டட மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.
இதன் மூலம் பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 07.01.2025 முதல் 28.01.2025 வரை 16,370.02 மெட்ரிக் டன் கட்டட மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்தக் கழிவுகள் அந்தந்த மண்டலங்களில் நிர்ணயிக்கப்பட்ட இடங்களில் சேகரித்து வைக்கப்பட்டு, பின்னர் பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும், கட்டடக் கழிவுகளை அகற்றும் தீவிரத் தூய்மைப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது