சென்னையில் அதிகரித்து வரும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு, பெரிய அளவிலான பேருந்துகள் செல்ல முடியாத வழித்தடங்களில் மாநகர் போக்குவரத்து கழகம் சார்பில் மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து சென்னை புறநகர் பகுதிகளில் தனியார் சார்பில் மினி பேருந்துகள் இயக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதன் காரணமாக தனியார் மினி பேருந்துகள் தொடங்குவது குறித்து கருத்து கேட்பு கூட்டம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உள்துறை செயலாளர் தலைமை நடைபெற்றது. பல்வேறு சங்கத்தினர் அதில் கலந்து கொண்டனர்.
இந்த கருத்து கேட்ப அடிப்படையில் சில மாற்றங்கள் செய்து முதலமைச்சரின் ஒப்புதல் பெறப்பெற்று புதிய கொள்கை அறிவிக்கப்பட்டு புதிய வழித்தடங்களும் வரும். அதேபோல் மினி பேருந்துகள் ஓட்டுகின்ற ஓட்டுநர்களின் கோரிக்கையும் ஏற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், பிப்ரவரி மாதம் முதல் சென்னை புறநகர் பகுதிகளில் தனியார் மினி பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை அனுமதி வழங்கியுள்ளது. சென்னை புறநகர் பகுதிகளான சோழிங்கநல்லூர், ஆலந்தூர், அம்பத்தூர், வளசரவாக்கம், மணலி உள்ளிட்ட பகுதிகளில் மினி பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னையில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில் கூடுதல் சேவைக்காக தனியார் பேருந்துகளுக்கு போக்குவரத்துத் துறை அனுமதி வழங்கி உள்ளது.