ஆண்டுதோறும் பொங்கல் விழாவின்போது தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு உலக புகழ்பெற்ற மதுரை, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 8 மணி அளவில் ஜல்லிக்கட்டுப் போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் 1,100 காளைகள், 900 வீரர்கள் பங்கேற்கின்றனர். மேலும் சுமார் 2,100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த போட்டியை காண பல்வேறு பகுதிகளில் இருந்தும் பார்வையாளர்கள் வருகை தந்துள்ளனர். மேலும் வெளிநாடு சுற்றுலா பயணிகளும் போட்டியை மிகவும் ஆர்வத்துடன் கண்டு களித்து வருகின்றனர்.
இந்த போட்டியில் வெற்றி பெறும் சிறந்த காளைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சார்பில் ஒரு டிராக்டரும், சிறந்த மாடுபிடி வீரருக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சார்பில் ஒரு காரும் பரிசாக வழங்கப்படவுள்ளது. மேலும் இருசக்கர வாகனம், ஆட்டோ, சைக்கிள், தங்கக்காசு உள்ளிட்டவைகளும் பரிசாக வழங்கப்படவுள்ளது.