ஆந்திர மாநிலம், திருமலை திருப்பதி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதன் விவரம் வருமாறு:-
சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், மேச்சேரி கிராமம், தாசனூரைச் சேர்ந்த மல்லிகா (வயது 55) க/பெ. கிருஷ்ணன் நேற்று ஆந்திர மாநிலம், திருமலை திருப்பதி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய சென்றிருந்தபோது, அங்கு சொர்க்கவாசல் திறப்பிற்காக வழங்கப்பட்ட இலவச தரிசனத்திற்கான நுழைவுச்சீட்டை வாங்கும்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்தத் துயரமான செய்தியை அறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் உடனடியாகத் தெரிவித்துக் கொண்டதுடன், உயிரிழந்த மல்லிகா அவர்களின் உடலை அவரது சொந்த ஊருக்குக் கொண்டு வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு அரசு சார்பில் மேற்கொள்ள உத்தரவிட்டார்.
மேலும், இச்சம்பவத்தில் உயிரிழந்த மல்லிகா குடும்பத்தினருக்கு இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார்.