”தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறும் விஜய் பீகார், ஒடிசா உள்ளிட்ட மற்ற மாநிலங்களுக்கு சென்று பாருங்கள். இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடுதான்.” என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி,” அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த சம்பவத்தை அடுத்து இந்த அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து குற்றவாளியை கைது செய்துள்ளது. யாரையும் காப்பாற்ற வேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது.
அ.தி.மு.க இன்று போராட்டம் நடத்துவது எல்லாம் வீண் வேஷம். நாங்கள் இருக்கிறோம் என்று காண்பித்து கொள்வதற்காக இப்படி கபட நாடகம் நடத்துகிறார்கள். தங்கள் மீது உள்ள குற்றச்சாட்டுகளை மறந்து விட்டு திமுக அரசு மீது பழி சுமத்த பார்க்கிறார்கள்.அ.தி.மு.க ஆட்சி காலம் எப்படி இருந்தது என்பதற்கு பொள்ளாச்சி சம்பவம் ஒன்று போதும்.
அண்ணா பல்கலைக்கழக வழக்கை சிபிஐக்கு மாற்ற தேவை இல்லை என்று நீதிமன்றமே கூறிவிட்டது. மூன்று துணை ஆணையர்களை நியமித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக வழக்கில் எஃப் ஐ ஆர் கசிந்த விவகாரம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. எஃப் ஐ ஆர் கசிந்தது யார் மூலமாக இருந்தாலும் நியமிக்கப்பட்ட மூன்று பேர் கொண்ட குழு விசாரித்து நடவடிக்கை எடுக்கும்.
இந்த ஆட்சியில் தான் பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். பெண்கள் வெளியே வருகிறார்கள். தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறும் விஜய் பீகார், ஒடிசா உள்ளிட்ட மற்ற மாநிலங்களுக்கு சென்று பாருங்கள். இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடுதான்” என தெரிவித்துள்ளார்.