இராமேஸ்வரத்திலிருந்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், 17 மீனவர்கள் எல்லை தாண்டியதாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்குமாறு கோரியும், மீனவர்கள் மீது தாக்குதல்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்கவும் உரிய தூதரக நடவடிக்கைகளை எடுக்குமாறும் வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அவர்களுக்கு இன்று (24-12-2024) கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 17 மீனவர்கள் IND-TN-10-MM-206 மற்றும் IND-TN-10-MM-543 ஆகிய பதிவெண்கள் கொண்ட இரண்டு இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகுகளுடன் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், இலங்கைக் கடற்படையினரால் 24.12.2024 அன்று சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அக்கடிதத்தில், 20.12.2024 அன்று இலங்கையைச் சேர்ந்த அடையாளம் தெரியாத ஆறு நபர்களால், நாகப்பட்டினம் மாவட்டம், கோடியக்கரை கிராமத்தைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட இருவேறு சம்பவங்களையும் மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்களின் கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், இந்த மூர்க்கத்தனமான தாக்குதலில், இரண்டு நாட்டுப் படகுகளில் பயணித்த ஆறு மீனவர்களில், மூன்று மீனவர்கள் காயமடைந்துள்ளனர் என்றும், இந்தத் தாக்குதலின்போது, மீனவர்களது மீன்பிடிப் படகுகளில் இருந்த GPS கருவிகள், VHF கருவிகள், மீன்பிடி வலை, கையடக்கத் தொலைபேசி மற்றும் அவர்கள் பிடித்த மீன்களும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதுபோன்று அடிக்கடி நடக்கும் கைது மற்றும் தாக்குதல் சம்பவங்கள், பாரம்பரிய கடற்பரப்பில் மீன்பிடிக்கும் தொழிலை மட்டுமே நம்பியிருக்கும் மீனவர்களின் வாழ்க்கையில் நிச்சயமற்ற தன்மையையும், ஆபத்தையும் ஏற்படுத்துவதாக கவலையோடு குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் அவர்கள், 2024 ஆம் ஆண்டில் மட்டும் 530 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, 71 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அண்மைக்காலமாக நடைபெற்று வரும் இத்தகைய சம்பவங்களும், தாக்குதல்களும் மீன்பிடித் தொழிலை மட்டுமே நம்பி வாழும் மீனவ மக்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளதாகக் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
எனவே, இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்கவும், எதிர்காலத்தில் தமிழக மீனவர்கள் மீது இதுபோன்ற தாக்குதல்கள் நடைபெறாமல் இருக்கவும் உரிய தூதரக நடவடிக்கைகளை எடுக்குமாறும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அவர்களை தனது கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.