சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு இடையிலான மின்சார ரயில்கள் இன்று முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் மறு அறிவிப்பு வரும் வரை கால அட்டவணை மாற்றம் செய்து இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பினை தொடர்ந்து, மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் இன்று முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் பயணிகள் நலன் கருதி இவ்வழித்தடத்தில் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன், கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது தாம்பரம் முதல் பிராட்வே வரை கூடுதலாக 10 பேருந்துகளும், தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை 5 பேருந்துகளும், கூடுவாஞ்சேரி முதல் தியாகராயநகர் வரை 5 பேருந்துகளும் என மொத்தம் 20 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகளின் தேவைக்கேற்ப மேலும் சில கூடுதல் பேருந்துகளும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்களை நியமித்து, இப்பேருந்துகளின் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.