அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி சென்னை சத்தியமூர்த்திபவனில் அவரதி திருஉருவப்படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகை மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து அண்ணல் அம்பேத்கரின் பேரன் ஆனந்த் டெல்டும்டே உள்ளிட்டோர் கலந்து கொண்டு அண்ணல் அம்பேத்கரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை, "புரட்சியாளர் அம்பேத்கரின் நினைவேந்தலில் முதலமைச்சர் வரலாற்று சிறப்புமிக்க திட்டத்தை தமிழ்நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்திருக்கின்றார். எல்லோருக்கும் எல்லாம் என்று சொன்னாலும் ஒரு சிலர் மட்டும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக கவனிக்கப்படாமல் இருந்தனர்.
ஆண்டாண்டு காலமாக விஷவாயுத்தாக்கி மனிதர்களை மனிதர்களின் கழிவுகளை தூய்மைப்படுத்தும் தூய்மை பணியாளர்கள் இறக்கும் அவலத்தை நாம் பார்த்திருக்கின்றோம்.ஸ்ரீபெரும்புதூரில் சத்யம் ரிசார்ட் இடம் ஒரு கம்பெனியில் விடுதி இருக்கின்றது. அங்கு கழிவு நீர் தொட்டியின் விசவாயு தாக்கி மூன்று பேர் இறந்தனர்.
முதலமைச்சரின் முயற்சியால் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இயந்திரங்களை வழங்க வேண்டும், வெளிநாடுகளில் இருப்பது போன்ற கருவிகள் நமது நாட்டில் இருக்கும் வேண்டும் என முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்துச் சென்றோம்.
ஏப்ரல் 14 அம்பேத்கரின் பிறந்தநாளில் திட்டம் தீட்டப்பட்டு டிசம்பர் 6 அம்பேத்கர் நினைவு நாளான இன்று இதற்காக திட்டம் செயல்படுத்தப்பட்டு 100 நவீன கழிவுநீர் அகற்றும் வாகனங்களுக்கான சாவிகளை தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கியுள்ளார். இதற்காக முதலமைச்சருக்கு எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
இந்தியாவில் எவ்வளவு பெரிய திட்டம் கொண்டு வந்தாலும் தமிழ்நாட்டில் இன்று நடைபெற வெளிப்படுத்தப்பட்டுள்ள திட்டம்தான் உலக அளவில் பேசப்படக்கூடிய திட்டம். தூய்மை பணியாளர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி மனித கழிவுகளை யாரும் கையால் அள்ளக்கூடாது என்ற உயரிய நோக்கத்துடன் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளார்"என தெரிவித்தார்.