நமது சுற்றுப்புறத்தை தூய்மையாக்க அல்லும் பகலுமாக உழைத்து வரும் தூய்மை பணியாளர்களின் துன்பங்களை நீக்கி அவர்களின் வாழ்க்கையை பாதுகாக்கும் வகையில் தூய்மை பணியாளர்களை தொழில் முனைவோராக மாற்ற தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில் மனித கழிவுகளை மனிதனே அகற்றும் அவல நிலையினை மாற்ற தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக சென்னை பெருநகரில் உள்ள கழிவுநீர் அகற்றும் கட்டமைப்புகளின் இயக்குதல் மற்றும் பராமரித்தல் பணிகளை சென்னை குடிநீர் வாரியம் தொடர்ந்து இயந்திரமயமாக்கப்பட்டு வருகிறது.
அதோடு தூய்மை பணியாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த தமிழ்நாடு அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளின் விளைவாக, 7 ஆண்டுகளுக்கு சென்னை குடிநீர் வாரிய கழிவுநீரை அகற்றும் பணிகளுக்கான ரூ.524 கோடி மதிப்புள்ள ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்டத்தில் தேர்வான 213 தூய்மை பணியாளர்களுக்கு நவீன கழிவுநீர் அகற்றும் ஊர்திக்கான கடன் உதவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மார்ச் மாதம் வழங்கினார். மேலும் சென்னை குடிநீர் வாரியத்தில் இத்திட்டத்தின் வாயிலாக பணியாளர்களுக்கு மாதம் ஒன்றுக்கு குறைந்தபட்ச வருமானமாக தலா ரூ.50,000/- என 7 ஆண்டுகளுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது...
இதன் மூலம் தூய்மை பணியாளர்கள் குடும்பத்தினருக்கு நிரந்தர வருமானம் உறுதி செய்யப்பட்டு அவர்களுடைய வாழ்வதாரத்தையும், சமுதாய கொளரவத்தையும் மேம்படுத்த இந்த சிறப்பு திட்டம் வழிவகுத்துள்ளது. மேலும் தொழில்முனைவோராக தேர்ந்தெடுக்கப்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு கழிவுநீர் குழாய்களை இயந்திரங்கள் மூலம் பராமரிக்கும் பயிற்சி வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளான இன்று தூய்மை பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் உன்னதத் திட்டத்தின் கீழ் 100 நவீன கழிவுநீர் அகற்றும் வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார். முதலமைச்சரின் இந்த திட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.