Fengjal புயல் காரணமாக ரெட் அலர்ட் உள்ள சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய ஏழு மாவட்டங்களில் நாளை(1.12. 2024) 500 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
அதன் விவரம் வருமாறு:-
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவுபடி Fenjal புயல் காரணமாக ரெட் அலர்ட் உள்ள சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 7 மாவட்டங்களில் 500 மருத்துவ முகாம்கள் நாளை(1.12. 2024) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடத்தப்படும்.
இதில் சென்னையில் 200 மருத்துவ முகாம்களும் மற்றும் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம்,கள்ளக்குறிச்சி,கடலூர் ஆகிய ஆறு மாவட்டங்களில் தலா 50 மருத்துவ முகாம்கள் என ஆக மொத்தம் 500 மருத்துவ முகாம்கள் நாளை நடத்தப்படும். இந்த மருத்துவ முகாம்கள் தேவைக்கேற்ப எண்ணிக்கை அதிகரிக்க மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது .
நாளை நடக்கும் மருத்துவ முகாம்களில் காய்ச்சல் - சளி பரிசோதனை , இரத்த கொதிப்பு , நீரழிவு நோய்க்கான பரிசோதனை போன்ற அடிப்படை பரிசோதனைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காய்ச்சல் சளி மருந்துகள் ,ரத்த கொதிப்பு - நீரிழிவு நோய்க்கான மருந்துகள், உப்பு - சர்க்கரை (ORS) கரைசல், நிலவேம்பு குடிநீர், சேற்றுப்புண் மருந்து போன்ற அத்தியாவசிய மருந்துகள் தேவைக்கு அதிகமாக கையிருப்பில் வைத்துக்கொள்ள மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் இருப்பிடங்களுக்கு அருகே அமைக்கப்பட உள்ள இந்த மருத்துவ முகாம்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் அறிவிப்பின் வாயிலாக கேட்டு கொண்டுள்ளார்.