.jpg?auto=format%2Ccompress)
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் திருமணத்திற்காக பெண் தேடி வந்துள்ளார். இந்த சூழலில் கடந்த 6-7 மாதங்களுக்கு முன்னர் ஆன்லைன் செயலி மூலம் ஈரோடு பகுதியை சேர்ந்த சந்தியா என்ற பெண் ஒருவர் அறிமுகமாகியுள்ளார். இருவரும் நண்பர்களாக பழகிய நிலையில், அது காதலாக மாறியுள்ளது. இப்படி இருவரும் பேசி வந்த சமயத்தில், தமிழ் செல்வி என்பவரை, அந்த வாலிபருக்கு அறிமுகப்படுத்தி வைத்துள்ளார் சந்தியா.
இந்த சூழலில் தனது வீட்டில் தனக்கு பெண் பார்ப்பதாகவும், உடனே தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறும் சந்தியா அந்த வாலிபரிடம் வறுபுறுத்தி வந்துள்ளார். இதையடுத்து இந்த திருமணத்துக்கு வாலிபரின் குடும்பமும் சம்மதிக்கவே கடந்த ஜூன் மாதம், பழநி அருகே உள்ள ஒரு கோயிலில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த திருமணத்திற்காக சந்தியாவுக்கு, அந்த வாலிபர் குடும்பத்தில் இருந்து 12 பவுன் நகையை போட்டுள்ளனர். திருமணம் முடிந்த பிறகு அனைவரும் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்த நிலையில், சில மாதங்கள் கழித்து, சந்தியா மீது குடும்பத்தாருக்கு சந்தேகம் வந்துள்ளது.
இதனால் அந்த வாலிபர் அவரது அடையாள அட்டைகள் உள்ளிட்ட உடைமைகளை சோதனை செய்துள்ளார். அப்போது அவரது அடையாள அட்டை ஒன்றில், சென்னையைச் சேர்ந்த நபர் ஒருவரது பெயர் கணவர் பெயரில் இடம்பெற்றிருந்தது கண்டறியப்பட்டது. மேலும் அதில் சந்தியாவுக்கு வயது அதிகமாக இருப்பதும் தெரியவந்தது.
இந்த சம்பவத்தை கண்டு அதிர்ச்சியடைந்த அந்த நபர், இதுகுறித்து சந்தியாவிடம் கேட்டபோது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் குடும்பத்தாரையும் மிரட்டியுள்ளனர். இதனால் வேறு வழியின்றி, சமாதானம் பேசுவதாக கூறி, சந்தியாவை தாராபுரத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கே போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் சந்தியா வயது 30-ஐ கடந்து உள்ளதும், அவருக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே திருமணமாகி குழந்தை இருப்பதும், திருமணம் ஆகாத ஆண்களை குறிவைத்து மோசடியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. மேலும் ஆண்களை திருமணம் செய்து அவர்களுடன் சில மாதங்கள் வாழ்ந்துவிட்டு, பின்னர் தகராறு செய்துவிட்டு நகை மற்றும் பணத்தை எடுத்துக்கொண்டு வெளியே சென்று தலைமறைவாகிவிடுவதையே வாடிக்கையாக வைத்துள்ளதும் தெரியவந்தது.
சந்தியாவின் இந்த மோசடிக்கு தமிழ் செல்வியும் உடந்தையாக இருந்துள்ளார். தற்போது பிடிபட்டுள்ள சந்தியாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுபோல் ஆன்லைன் செயலி மூலம் காதலித்து திருமணம் செய்பவர்கள் உஷாராக இருக்குமாறு பலரும் அறிவுறுத்தி வருகின்றனர்.








