
என்ன சி.எம்.சார்... சவுண்டயே காணோம்?
சூலூரில் ஒரு சிறுமி என்ன கதிக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இதைப் பார்த்த பிறகும் முதலமைச்சர் விஜய்க்கு சூடு, சொரணை வரவில்லையா? உடனே போயிருக்க வேண்டாமா? அந்தக் குடும்பத்தையும் சென்னைக்கு வரச் சொல்லித்தான் பார்க்கப் போகிறாரா?
தி.மு.க. ஆட்சியின் போது என்னவெல்லாம் பேசினார் விஜய்?”நீங்க ஒழுங்கா ஆட்சி நடத்தி இருந்தால் பெண்கள் பாதுகாப்பு ஒழுங்கா இருந்திருக்கும். சட்டம் ஒழுங்கு ஒழுங்கா இருந்திருக்கும். பச்சை புள்ளைங்க.. படிக்கிற புள்ளைங்க... சின்னப் பொண்ணுங்க... வீட்டுல இருக்கிற பொண்ணுங்க... வேலைக்கு போகிற பொண்ணுங்க... இதுங்க எல்லாருக்கும் நடக்கிற கொடுமைகளை சொல்ல முடியாது சார்”என்று சொன்னீர்களே விஜய்? இப்போது என்ன நடக்கிறது உங்களது ஆட்சியில்?
கொடுமைகள், கொடுமைகள். கொலைகள், கொலைகள். கொள்ளைகள், கொள்ளைகள். பாலியல் வன்முறைகள், இதுதான் நடக்கிறது. 12 நாளில் நூற்றுக்கணக்கான சம்பவங்கள். உள்துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் விஜய் அதை வைத்து என்ன செய்து கொண்டு இருக்கிறார். உள்துறை என்றால் என்ன என்றாவது தெரியுமா அவருக்கு?
சூலூரில் வேதனையோடு பேசும் ஒரு பெண் சொல்கிறார். "முதலமைச்சர் விஜய் ஆக்ஷன் எடுக்கனும். உங்களை ஆக்ஷன் ஹீரோன்னு நினைச்சுதான் வோட்டுப் போட்டோம்”என்கிறார். அவரைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. விஜய் படத்தில் காட்டும் ஆக்ஷனைப் பார்த்து அதே போலத்தான் நிஜத்தில் இருப்பார் என்று நினைத்து வோட்டுப் போட்டிருக்கிறார் அந்தப் பெண். இப்படித்தான் பலரும் வாக்களித்துள்ளார்கள்.
தீ பற்றி எரியும் இடத்துக்குள் விஜய் போவார். மாட்டிக் கொண்டிருக்கும் அந்த ஒற்றைக் குழந்தையைத் தூக்கி வருவார். தன் மீது பற்றிய தீயைத் தட்டி விடுவார்... என்று இந்த நாட்டு மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். இன்று தமிழ்நாடு என்ற மாநிலமே குற்றச் சம்பவங்கள் கோலோச்சும் மாநிலமாக மாறிக் கொண்டிருக்கிறது.
‘இதோ நான் பொறுப்பேற்றுக் கொண்டேன்... டைம் ஸ்டார்ட் நவ்' என்றார் விஜய். குற்றவாளிகளின் கூடாரமாக ஆகி வருகிறது தமிழ்நாடு.

தி.மு.க. ஆட்சியின் போது மைக்கைப் பார்த்ததும் கத்திக் கொண்டு இருந்தாரே விஜய்? அந்த விஜய் எங்கே போனார்?"சின்னப் பொண்ணு, டாய்லெட் வசதி இல்லாம காட்டுப் பக்கம் போயி ஒதுங்கினாங்க. என்ன ஆச்சு? உலகத்தை விட்டே போயிட்டாங்க. அதுக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க? இந்தப் புள்ளைய உங்களால திருப்பித் தர முடியுமா?”இப்படிக் கேட்டவர் விஜய். அவர் கேட்ட கேள்வியைத்தான் நாடு இப்போது அவரைப் பார்த்துக் கேட்டுக் கொண்டு இருக்கிறது.
'இன்ஸ்ட்ராகிராம்' திறந்தாலே முதலமைச்சர் விஜய்யை பார்த்து பெண்களும், இளைஞர்களும் இப்போது கேள்வி கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள். நாக்கைப் பிடுங்குவது மாதிரி கேட்கிறார்கள். ஆனால் அவர் தனது நாக்கை சுருட்டிக் கொண்டு விட்டார்.
'குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை' என்று இப்போது எக்ஸ் தளத்தில் பதிவு போடுகிறார் முதலமைச்சர் விஜய். ஆனால் அவரது உள்துறை என்ன செய்துள்ளது தெரியுமா? அந்தக் குற்றவாளிகளைக் காப்பாற்ற முயற்சித்துள்ளது.
'சிறுமியைக் கண்டுபிடித்துவிட்டோம். உயிரோட தான் இருக்காங்க' என்று முதலில் அந்தக் குடும்பத்துக்குச் சொல்லி இருக்கிறார்கள். பிறகு தான் உயிரோடு இல்லை என்று சொல்லி இருக்கிறார்கள். இதற்கு முதலமைச்சர் விஜய் என்ன சொல்லப் போகிறார்?
‘கடைக்குப் போகிறேன்' என்று (21 ஆம் தேதி) அனுப்பி வைக்கப்பட்ட சிறுமி அவர். காணவில்லை. அரைமணி நேரத்தில் அந்தக் குடும்பத்தினர் தேடுதலைத் தொடங்கி காவல்துறைக்கு புகார் கொடுக்கிறார்கள். 22 ஆம் தேதி இரவு கண்ணம்பாளையம் குளக்கரையோரம் உள்ள முட்புதரில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அருகில் இருந்த தென்னந்தோப்பில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளார் சிறுமி. இதை அறிந்து ஆத்திரம் அடைந்த உறவினர்கள் சிங்காநல்லூர் மருத்துவமனை முன்பும், காவல் நிலையம் முன்பும் முற்றுகைப் போராட்டம் நடத்தினார்கள். சாலை மறியல் செய்தார்கள். சிறுமியின் உடலை வாங்க மாட்டோம் என்று பெற்றோரும் உறவினரும் சொன்னார்கள். இப்படி பொதுவெளியில் வெளிச்சம் ஆனபிறகு தான் காவல் துறை செயல்பட்டுள்ளது. குற்றவாளிகள் கைது செய்யப்பட்டார்கள். இந்தக் குற்றவாளிகளும் சிறுமியைத் தேடுவது போல நாடகம் ஆடி இருக்கிறார்கள். பின்னர்தான் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
'சிறுமி உயிரோடு இருக்கிறார்' என்று பெற்றோரிடம் சொன்னது யார்? அந்த போலீஸ் அதிகாரி யார்? அவர் மீது ஆக்ஷன் விஜய் நடவடிக்கை எடுப்பாரா? விஜய் தொடங்கினாரே சிங்கப் படை. என்ன ஆனது? என்ன செய்து கொண்டு இருக்கிறது? சிதைத்துக் கொலை செய்யப்பட்டு இருப்பவர் நான்காம் வகுப்பு படிக்கும் பத்து வயதுச் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பிறகு கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இதற்கு பொறுப்பேற்க வேண்டியது உள்துறையைக் கையில் வைத்திருக்கும் விஜய் பொறுப்பு அல்லவா?
தனது எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இத்தகைய குற்றச் சம்பவம் நடந்து, கொடூரமாய் ஒரு குழந்தை கொல்லப்பட்டது என்ற குற்ற உணர்ச்சியே இல்லாமல் காவல் துறை அதிகாரிகள் பேட்டி கொடுத்துள்ளார்கள். ஆட்சியாளர்கள் மீது இவர்களுக்கு எந்த பயமும் இல்லை என்பதைத்தான் அவர்களது அலட்சியமான பேட்டி காட்டுகிறது. பேட்டிக்கு முன்னதாக போலீஸ் அதிகாரிகள் குலுங்கி குலுக்கி வெடிச்சிரிப்பு சிரித்துக் கொண்டு இருந்த காட்சிகளை 'நியூஸ் தமிழ்' தொலைக்காட்சி ஒளிபரப்பியது. விஜய் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்பது இதுதானா?
விஜய் கேட்ட கேள்விதான் இப்போதும் நினைவுக்கு வருகிறது...
“நீங்க எதுக்குங்க சார்?
உங்க ஆட்சி எதுக்குங்க சார்?
உங்களுக்கு சி.எம்.பதவி எதுக்குங்க சார்?”






