தமிழ்நாடு

“ஓட்டு கேட்க மட்டும் வருகிறார் மோடி.. தமிழ்நாட்டு மக்கள் ஏமாற மாட்டார்கள்” : முதலமைச்சர் அதிரடி பேச்சு!

தமிழ்நாட்டு உரிமைகளுக்காகவும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும் பாடுபட்டுக் கொண்டிருக்கும் நமது திராவிட மாடல் அரசின் பக்கம்தான் தமிழ்நாட்டு மக்கள் என்றைக்கும் உறுதுணையாக நிற்பார்கள்!

“ஓட்டு கேட்க மட்டும் வருகிறார் மோடி.. தமிழ்நாட்டு மக்கள் ஏமாற மாட்டார்கள்” : முதலமைச்சர் அதிரடி பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மயிலாடுதுறையில் நடைபெற்ற அரசு விழாவில், மயிலாடுதுறை மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் திறப்பு விழா, மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

பின்னர் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை பின்வருமாறு :- “மண் மணத்துடன் நெல் மணமும் கலந்து வீசும் வண்டல் நிலமும், அழகும், வரலாற்றுச் சிறப்பும் கொண்ட டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் அரசு நலத்திட்டங்கள் வழங்கக்கூடிய விழா மற்றும் மயிலாடுதுறை புதிய மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தின் திறப்பு விழா ஆகியவற்றில் கலந்து கொள்ளக்கூடிய ஒரு சிறப்பான பேருபெற்றமைக்கு நான் மகிழ்ச்சியடைகிறேன்! பெருமைப்படுகிறேன்!

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் கீழத்தஞ்சைக்கு உட்பட்ட இந்த மூன்று மாவட்டங்களில் மயிலாடுதுறை காவிரி பாசனத்தால் வேளாண்மை செழிப்புடன் இருக்கின்ற மாவட்டம்! புகழ்பெற்ற பழமையான திருக்கோயில்கள் பல நிறைந்திருக்கின்ற மாவட்டம்! முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் அமைக்கப்பட்ட பூம்புகார் எழுநிலை மாடத்தையும், சிற்பக் கலைக்கூடத்தையும் கொண்ட மாவட்டம் இந்த மயிலாடுதுறை மாவட்டம்!

மொழிப்போர் தியாகி சாரங்கபாணி, தமிழில் புதினத்தை எழுதிய முன்சீப் வேதநாயகம், இந்தியா விடுதலை பெற்ற நாளில், புதுடெல்லியில், நாதசுரம் வாசித்த திருவாவடுதுறை டி.என்.ராஜரத்தினம் ஆகியோரது மாவட்டம்.

அதுமட்டுமல்லாமல், தியாக மங்கை தில்லையாடி வள்ளியம்மை - சுயமரியாதைச் சுடரொளி மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் ஆகியோரின் மாவட்டம்! அதனால்தான், சாரங்கபாணி மேம்பாலம், தில்லையாடி வள்ளியம்மை நினைவு இல்லம் ஏற்படுத்திய முத்தமிழறிஞர் கலைஞர் வழியில், மூவலூர் மூதாட்டியாருக்கு சிலை அமைத்து, அவரது பெயரில் புதுமைப் பெண் திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது நம்முடைய திராவிட மாடல் அரசு!

அதுமட்டுமல்ல, முன்சீப் வேதநாயகம் அவர்களுக்கு மணிமண்டபம் அமைக்கும் பணி, தமிழிசை மூவர் மணிமண்டபம் போட்டித் தேர்வு மாணவர்களுக்கு ஏற்ப புனரமைக்கும் பணி போன்றவை நடைபெற்று வருகிறது.

இப்படி இந்த மாவட்டத்தின் சிறப்புகளை அடுக்கிக்கொண்டே போகலாம். அதன் தொடர்ச்சியாக, நாகை மாவட்டத்தில் இருந்து புது மாவட்டமாக உதயமான இந்த மயிலாடுதுறைக்கு, நாம் ஆட்சிக்கு வந்தவுடன் நிதி ஒதுக்கி, நிர்வாக ஒப்புதல் வழங்கி, ஒன்றரை ஆண்டுக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைத் திறந்து வைப்பதில் கூடுதல் பெருமை. புது மாவட்டங்கள் அறிவிப்பது பெரிது இல்லை, அதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கித் தருவதுதான் மிகமிக முக்கியமானது.

தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், மாவட்டத்திற்கான உள்கட்டமைப்பு வசதிகள் தி.மு.க ஆட்சியில் தான் உருவாக்கப்பட்டவை. அதன் தொடர்ச்சியைத் தான், உங்கள் அரசான, நமது அரசான இந்த திராவிட மாடல் அரசும் இதை செய்திருக்கிறது. அதற்கு எடுத்துகாட்டு தான் இன்றைய விழா!

இன்றைய நிகழ்ச்சியில், மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு, 655 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகள் மக்கள் பயன்பாட்டிற்காக அளிக்கப்பட்டிருக்கிறது. மொத்தம் 12 ஆயிரத்து 653 பயனாளிகளுக்கு, 143 கோடியே 46 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட இருக்கிறது. அதுமட்டுமல்ல, அறிவிப்புகளை அரசாணைகளாக மாற்றும் அரசு இந்த அரசு! அரசாணைகள் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்யும் அரசு இந்த அரசு!

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு மற்றும் பட்டுக்கோட்டை வருவாய் வட்டங்களை சீரமைத்து, திருவோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் 7 கோடியே 56 இலட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்படும் என்று 2022-2023-ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையின்போது சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.

அந்த அடிப்படையில், 27.02.2024 அன்று அரசாணை வெளியிடப்பட்டு, இங்கே வருவதற்கு முன்னால், நேற்றைய முன்தினம் அரசிதழிலும் அது வெளியிடப்பட்டு, தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவோணத்தை தலைமையிடமாகக் கொண்டு, ஒரு புதிய வருவாய் வட்டம் இன்று முதல் செயலாக்கத்திற்கு வருகிறது என்று மகிழ்ச்சியுடன் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

அடுத்து, இன்னும் ஒரு மிக முக்கியமான திட்டத்தையும் இங்கே தொடங்கி வைத்திருக்கிறேன். “நத்தம் இணையவழி பட்டா மாறுதல் திட்டம்” என்று இதற்குப் பெயர். கிராமப்புற மக்கள், அவர்களுடைய நத்தம் வீட்டுமனைக்கு பட்டா வாங்குவதில் சில சிரமங்களை சந்தித்து வருவதாக தெரிய வந்தது. அதை எளிமையாக்குவதுதான் இந்த புரட்சிகரமான திட்டம்!

தமிழ்நாடு வருவாய்த்துறை வரலாற்றிலேயே, கிராமப்புற நத்தம் பட்டாவை கணினி மூலமாக வழங்குவது இதுதான் முதல்முறை! காணி நிலம் வேண்டும் என்று மகாகவி பாரதியார் பாடினார். அதைக் கணினி மூலமாக உறுதி செய்கின்ற திட்டம் இது!

முதல்கட்டமாக, 75 இலட்சத்து 33 ஆயிரத்து 102 பட்டாதாரர்கள் இந்த இணையவழி சேவை மூலமாக பயன்பெற போகிறார்கள் என்று மகிழ்ச்சியுடன் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அதுமட்டுமல்லாமல், இந்த விழாவில் இன்னும் சில அறிவுப்புகளை வெளியிடுவதில் கூடுதல் மகிழ்ச்சி அடைகிறேன். 150-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்து, சிறப்பாக செயல்பட்டு வருகின்ற மயிலாடுதுறை நகராட்சிக்கு, 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய நகராட்சி கட்டடம் கட்டப்படும்.

அதேபோல, வேளாண் பெருங்குடி மக்களுடைய நீண்டகால கோரிக்கைகளை ஏற்று, சீர்காழி வட்டம் பெருந்தோட்டம் கிராமத்தில் செல்லனாற்றின் குறுக்கிலும், சென்னம்பட்டினம் கிராமத்தில் முல்லையாற்றின் குறுக்கிலும், தரங்கம்பாடி வட்டம் சந்திரப்பாடி கிராமத்தில் நண்டலாற்றின் குறுக்கிலும், உப்பு நீர் புகுவதை தடுக்கின்ற வகையில், கடைமடை நீர் ஒழுங்கிகள் 94 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.

அத்துடன் குத்தாலம் வட்டத்தில் வாணாதி ராஜபுரம் மற்றும் அரையபுரம் வாய்க்கால் பாசன உழவர்கள் பயன்பெறுகின்ற வகையில், கடலங்குடி கிராமத்தில் 2 கோடியே 40 இலட்ச ரூபாய் செலவில் புதிய படுக்கை அணை அமைக்கப்படும். இந்த மாவட்டங்களைச் சேர்ந்த மீனவ மக்களின் கோரிக்கைகளை ஏற்று, அவர்களுக்காகவும் சில அறிவிப்புகளை வெளியிட விரும்புகிறேன்.

மயிலாடுதுறை மாவட்டம் வாணகிரி மீன் இறங்குதளம் 30 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும். நாகை மாவட்டம் செருதூர் வெள்ளையாறு முகத்துவாரத்தில் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கரை பாதுகாப்புச் சுவர் அமைக்கப்படும். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில், 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மீன் இறங்குதளம் அமைக்கப்படும். அடுத்து, பூம்புகார் பகுதி மீனவர்கள் பயன்பெறும் வகையில், 2 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உலர்மீன் தயாரிக்கும் குழுமம் அமைக்கப்படும்.

மென்பொருளுடன் ஒருங்கிணைந்த கற்றல் மேலாண்மை அமைப்பு திட்டத்தின்கீழ் திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மூன்று மாவட்டங்களில் இருக்கின்ற 12 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் மூன்று பலவகை தொழில்நுட்ப கல்லூரிகளுக்கு 1642 மேசை கணிணிகள் மற்றும் கணினிசார் உபகரணங்கள் வழங்கப்படும்.

அதேபோல, மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒரு சிறப்பான நூலகம் அமைக்கப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவித்திருந்தோம். அந்த அறிவிப்பை செயல்படுத்த “பார்க் அவென்யூ” பகுதியில் நிலம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. அங்கு 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு சிறப்பான நூலகம் விரைவில் கட்டி முடிக்கப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

“ஓட்டு கேட்க மட்டும் வருகிறார் மோடி.. தமிழ்நாட்டு மக்கள் ஏமாற மாட்டார்கள்” : முதலமைச்சர் அதிரடி பேச்சு!

எல்லோருக்கும் எல்லாம் என்று சொல்லவேண்டும் என்றால், இப்படி, எல்லோருக்கும் எல்லா வாய்ப்புகளும் கிடைக்கின்ற வகையில்தான் திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகிறோம். அதனால்தான், தி.மு.க. அரசு, நம்முடைய அரசு என்ற அடிப்படை உணர்வு இங்கே இருக்கின்ற உங்கள் ஒவ்வொருவர் மனதிலேயும் ஏன், தமிழ்நாட்டில் இருக்கின்ற ஒவ்வொருவருடைய மனதிலும் அது உருவாகியிருக்கிறது!

தாய்மார்கள் இங்கே வந்திருக்கிறீர்கள். இன்று நம் தமிழ்நாட்டில், ஒரு கோடியே 15 இலட்சத்து 16 ஆயிரத்து 292 மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை கிடைக்கிறது. அதுமட்டுமல்லாமல், "விடியல் பயணத் திட்டம்" மூலமாக 445 கோடி முறை பயணித்து மாதந்தோறும் 888 ரூபாய் வரை நமது சகோதரிகள் சேமிக்கிறார்கள்.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் நாள்தோறும் 16 இலட்சம் குழந்தைகள் வயிறார சாப்பிட்டு, வளமான தலைமுறையாய் உருவாகிக்கொண்டு இருக்கிறார்கள். மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் "புதுமைப்பெண்" திட்டம் மூலமாக 4 இலட்சத்து 81 ஆயிரத்து 75 மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் போய்ச் சேருகிறது.

இரண்டே ஆண்டுகளில், ‘நான் முதல்வன்’ திட்டம் மூலமாக 28 இலட்சம் இளைஞர்கள் திறன் பயிற்சி பெற்றிருக்கிறார்கள்.

‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டம் மூலமாக 24 லட்சத்து 86 ஆயிரம் பள்ளிக் குழந்தைகள் பயனடைந்திருக்கிறார்கள். 2 இலட்சம் உழவர்களுக்கு புதிய இலவச மின் இணைப்பு பெற்றிருக்கிறார்கள். உயர்த்தப்பட்ட ஓய்வூதியத்தில் 30 இலட்சம் முதியோரும், 5 லட்சம் மாற்றுத்திறனாளிகளும் மாதந்தோறும் பயனடைந்து கொண்டு வருகிறார்கள்.

‘நம்மைக் காக்கும் 48’ திட்டம் மூலமாக 2 இலட்சம் பேர் பயனடைந்திருக்கிறார்கள். “முதல்வரின் முகவரி திட்டம்” மூலமாக 19 இலட்சத்து 69 ஆயிரம் பேர் பயனடைந்திருக்கிறார்கள். ‘மக்களுடன் முதல்வர்’ திட்டம் மூலமாக, 3 இலட்சத்து 40 ஆயிரம் மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டிருக்கிறது. வேளாண் பெருங்குடி மக்கள் நிறைந்த இந்த மயிலாடுதுறை மாவட்டத்தில், 2021 முதல் 2024 வரை பெய்த கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட 1 இலட்சத்து 3 ஆயிரத்து 614 ஹெக்டேர் நிலங்களுக்கு 96 கோடியே 40 இலட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டிருக்கிறது. இது மூலமாக 1 இலட்சத்து 26 ஆயிரத்து 400 உழவர்கள் பயனடைந்திருக்கிறார்கள்.

“ஓட்டு கேட்க மட்டும் வருகிறார் மோடி.. தமிழ்நாட்டு மக்கள் ஏமாற மாட்டார்கள்” : முதலமைச்சர் அதிரடி பேச்சு!

"மக்களைத் தேடி மருத்துவம்" திட்டத்தால் ஒரு கோடி பேர் பயனடைந்திருக்கிறார்கள். இப்படி, தமிழ்நாட்டில் வாழுகின்ற ஒவ்வொரு குடும்பமும் பயனடைகின்ற வகையில், பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி மக்களின் மனச்சாட்சியாக செயல்படுகிறது, நம்முடைய திராவிட மாடல் அரசு!

இந்தத் திட்டங்களுடைய பயன்கள் எல்லாம் உரிய மக்களுக்குப் போய்ச் சேர்ந்திருக்கிறதா என்று உறுதி செய்வதற்கு, ஒரு புது திட்டத்தை வருகின்ற ஆறாம் தேதி சென்னையில் தொடங்கி வைக்கப் போகிறேன். அந்தத் திட்டத்தின் பெயர் என்ன தெரியுமா? ‘நீங்கள் நலமா?’ இந்த நீங்கள் நலமா? திட்டத்தின் மூலமாக, முதலமைச்சரான நான் உட்பட அமைச்சர் பெருமக்கள், தலைமைச் செயலாளர், அனைத்துத் துறைச் செயலாளர்கள், துறைத் தலைவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் என பொதுமக்களான உங்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு, கருத்துக்களை கேட்கப் போகிறோம்.

உங்கள் கருத்துக்களின் அடிப்படையில், நம்முடைய அரசின் திட்டங்கள் மேலும் செம்மைப்படுத்தப்படும். முதற்கட்டமாக, நலத்திட்டங்கள் பற்றியும் அடுத்த கட்டமாக, அரசுத் துறைகளால் வழங்கப்படுகின்ற சேவைகள் பற்றியும் கருத்துக்கள் பெற்று அதன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இப்படி ஒவ்வொரு நாளும், மக்கள் பயன் அடையக்கூடிய வகையில் பார்த்துப் பார்த்து திட்டங்களை உருவாக்கிக்கொண்டு வருகிறோம். அதுவும் எந்த சூழ்நிலையில்? நிதி நெருக்கடி அதிகமாக இருக்கின்ற சூழ்நிலையிலும், எந்த மக்கள்நலப் பணிகளையும், திட்டங்களையும் நாம் நிறுத்தவில்லை. ஏனென்றால், மக்கள் தொண்டு ஒன்றுதான் நம்முடைய ஆட்சியின் நோக்கம். தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தாலும், இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினும் ஒரு ‘டெல்டாகாரன்’ என்ற உணர்வுடன் இந்த விழாவில் நான் திட்டப்பணிகளை தொடங்கி வைத்திருக்கிறேன்.

நாங்க தேர்தலுக்காக – தேர்தல் நேரத்தில் மட்டும் வந்து முகத்தைக் காட்டுகிறவர்கள் நாங்கள் இல்லை. அப்படி வருகிறவர்கள் யாரென்று நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரியவேண்டும் என்று அவசியமில்ல. உங்களுக்கே தெரியும். இப்போது, தேர்தல் தேதி அறிவிக்கப் போகிறார்கள். அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வரத் தொடங்கி இருக்கிறார் நம்முடைய பாரதப் பிரதமர் அவர்கள். வரட்டும். அதை வேண்டாம் என்று நாம் சொல்லவில்லை. தமிழ்நாட்டுக்கு நன்மை செய்துவிட்டு, நாம் வைக்கின்ற மிக மிக நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொண்டு வரட்டும்.

“ஓட்டு கேட்க மட்டும் வருகிறார் மோடி.. தமிழ்நாட்டு மக்கள் ஏமாற மாட்டார்கள்” : முதலமைச்சர் அதிரடி பேச்சு!

அப்படி இல்லாமல், தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணமும், ஓட்டும் மட்டும் போதும் என்று வருகிறார்கள்! நாம் கேட்பது என்ன? சமீபத்தில், இரண்டு மிகப்பெரிய இயற்கை பேரிடர்களை எதிர்கொண்டோம்.

அப்போது ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய 37 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரண நிதி கேட்டோம். அதை கொடுத்துவிட்டு தமிழ்நாட்டுக்குப் பிரதமர் வந்தாரா? இல்லை! ஒரு ரூபாய் கூட, ஒரு சல்லிகாசு கூட இன்னும் கொடுக்கவில்லை!

தமிழ்நாட்டு மக்களுக்கு நிதி உதவி செய்ய மாட்டார்களாம். ஆனால், தங்களுடைய பதவி நாற்காலியை காப்பாற்றிக் கொள்வதற்கு மட்டும் ஆதரவு கேட்டு வருகிறார்களாம். தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் இவர்களை பார்த்து நிச்சயம் ஏமாற மாட்டார்கள் என்று அழுத்தந்திருத்தமாக நான் சொல்ல விரும்புகிறேன்.

தமிழ்நாட்டு உரிமைகளுக்காகவும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும் பாடுபட்டுக் கொண்டிருக்கும் நமது திராவிட மாடல் அரசின் பக்கம்தான் தமிழ்நாட்டு மக்கள் என்றைக்கும் உறுதுணையாக நிற்பார்கள்! நிற்பார்கள்! நிற்பார்கள்! என்று கூறி விடைபெறுகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories