தமிழ்நாடு

“மாதவிடாய் தீட்டு இல்லை”: விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 5000 மாணவிகள் உலக சாதனை - குவியும் பாராட்டு!

மாதவிடாய் தீட்டு இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில், ஐந்தாயிரம் மாணவிகள் இணைந்து நடத்திய உலக சாதனை முயற்சியாக ரத்தப் போக்கை சித்தரிக்கும் வகையில் மாதவிடாய் சின்னம் அமைத்து மாணவிகள் அசத்தினர்.

“மாதவிடாய் தீட்டு இல்லை”: விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 5000 மாணவிகள் உலக சாதனை - குவியும் பாராட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நெல்லை, பேட்டை ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி மற்றும் அக்னி சிறகுகள் என்ற அமைப்பு இணைந்து பெண்களின் மாதவிடாய் நிகழ்வு குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கல்லூரி மாணவிகளை கொண்டு மாதவிடாய் சின்னம் வடிவமைக்கும் உலக சாதனை முயற்சி நடைபெற்றது.

மாதவிடாயின்போது, பெண்கள் உடலில் இருந்து கழிவுகள் இரத்தப்போக்காக வெளியேறும், மாதத்திற்கு மூன்று நாட்கள் நடைபெறும் மாதவிடாய் நிகழ்வின் போது, பெண்கள் வயிற்று வலி, உடல் சோர்வு, பசியின்மை போன்ற பல்வேறு இடர்பாடுகளை சந்திப்பார்கள்.

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை மாதவிடாய் நேரத்தில், பெண்களை வீட்டை விட்டு வெளியே வராமல் நான்கு சுவற்றுக்குள் அடைத்து வைத்திருப்பார்கள். குறிப்பாக, கிராமப்புறங்களில் மாதவிடாய் என்பது பெரும் தீட்டாகவே பார்க்கப்பட்டது. அந்த சமயங்களில், பெண்கள் வெளியே வரக்கூடாது, யாரையும் பார்க்க கூடாது என பெற்றோர்களே கடும் நிபந்தனைகளை விதிப்பார்கள்.

எனவே மாதவிடாய், பெண்களின் முன்னேற்றத்துக்கு பெரும் தடையாக இருந்தது. ஆனால், காலப்போக்கில் மாதவிடாய் என்ற தடையை உடைத்து, பெண்கள் வீட்டை விட்டு வெளியேறி, உலக அளவில் பல்வேறு சாதனைகளை புரிந்து வருகின்றனர். குறிப்பாக விண்ணிற்கு செயற்கைக்கோள் அனுப்பும் அளவுக்கு, பெண்கள் அனைத்து துறைகளிலும் முன்னேறி வருகின்றனர்.

“மாதவிடாய் தீட்டு இல்லை”: விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 5000 மாணவிகள் உலக சாதனை - குவியும் பாராட்டு!

இருப்பினும் இன்னும் சில கிராமங்களில் மாதவிடாய் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததால், பல பெண்கள் பல்வேறு அவமானங்களை சந்தித்து வருகிறனர். எனவே அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலையே இன்று ராணி அண்ணா கல்லூரியில் இந்த உலக சாதனை முயற்சி நிகழ்த்தப்பட்டது.

இதையொட்டி சுமார் 5 ஆயிரம் மாணவிகள் கல்லூரியின் மைதானத்தில் ஒன்று திரண்டு மாதவிடாயின் போது ஏற்படும் ரத்தப் போக்கை சித்தரிக்கும் வகையில் குழுவாக அமர்ந்தனர். மாநகராட்சி மேயர் சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்த உலக சாதனை முயற்சிக்கான நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் .

இது குறித்து மாணவிகள் கூறும்போது, அந்த காலத்தில் மாதவிடாய் என்றாலே தீட்டு என்பார்கள். பெண்களை வீட்டுக்குள் அடைத்து வைப்பார்கள். ஆனால், தற்போது மாதவிடாய் தீட்டல்ல என்பதை நிரூபித்து பெண்கள் பல்வேறு சாதனைகளை புரிந்து வருகின்றனர். பெண்கள் மத்தியில் மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இன்று இந்த உலக சாதனை முயற்சியை நாங்கள் செய்துள்ளோம் என பெருமையோடு தெரிவித்தனர்.

கோவிலுக்கு போகாதே, பூஜை அறைக்கு வராதே, ஓரமாக இரு என இன்றும் ஒரு சில இடங்களில் பெண்களுக்கு ஏகப்பட்ட கட்டுபாடுகள், மாதவிடாய் தீட்டு இல்லை என்று ஒவ்வொரு வீட்டிலும் சொல்ல இது ஒரு நல்ல முன்னெடுப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories