தமிழ்நாடு

அப்பாவி விவசாயிகளுக்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை : போலிஸ் விசாரணை - சேலத்தில் நடந்தது என்ன?

சேலத்தில் சாதி பெயரை குறிப்பிட்டு அப்பாவி விவசாயிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அப்பாவி விவசாயிகளுக்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை : போலிஸ் விசாரணை - சேலத்தில் நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சேலம் மாவட்டம் அப்பம்ம சமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட காரமடை திட்டு பகுதியை சேர்ந்த விவசாயிகள் கண்ணையன் மற்றும் கிருஷ்ணன். இவர்களுக்கு அப்பகுதியில் சுமார் ஆறரை ஏக்கரில் விளைநிலம் அமைந்துள்ளது. இவர்களின் நிலத்தை அபகரிக்கும் நோக்கில் பா.ஜ.கவின் சேலம் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் குணசேகரன் என்பவர் தொடர்ந்து பல்வேறு அச்சுறுத்தல்களையும் கொலை மிரட்டல்களையும் விடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக காவல் நிலையத்திலும் நீதிமன்றத்திலும் வழக்குகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் விவசாயிகளுக்கு சில மாதங்களுக்கு முன்பு அமலாக்கத்துறையில் இருந்து சம்மன் ஒன்று வந்தது. விவசாயிகள் இருவரின் சாதி பெயரை குறிப்பிட்டு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனில் சட்டவிரோத பணம் பரிமாற்றம் சட்டத்தின் கீழ் விசாரணை செய்ய வேண்டும் என்றும் நேரில் ஆஜராகவில்லை என்றால், சட்டவிரோத பணம் பரிமாற்றம் சட்டத்தின் கீழ் இருவருக்கும் சொந்தமான ஆறரை ஏக்கர் நிலத்தை ஜப்தி செய்வோம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து சம்பந்தப்பட்ட விவசாயிகள் இருவரும் வழக்கறிஞர் பிரவீனா என்பவரின் உதவியுடன், சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகினர். படிக்கத்தெரியாத, வயதான விவசாயிகளுக்கு உதவியாகச்சென்ற வக்கறிஞர் பிரவீனாவை அமலாக்கத்துறை அலுவலகத்திற்குள் அனுமதிக்காமல், அப்பாவி விவசாயிகள் இருவரையும் உள்ளே அழைத்துச்சென்று விசாரணை என்ற பெயரில் மிரட்டல் விடுத்துள்ளனர். உணவிற்கே வழியில்லாத தங்களுக்கு சொத்து அதிக அளவில் இருப்பதாகவும், பணம் வைத்துள்ளதாகவும் கூறி அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்தியது வேடிக்கையாக இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

அப்பாவி விவசாயிகளுக்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை : போலிஸ் விசாரணை - சேலத்தில் நடந்தது என்ன?

இது குறித்து பேசிய வயக்கறிஞர் பிரவீனா, " சேலத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகி குணசேகரன், அப்பாவி விவசாயிகளுக்குச் சொந்தமான விளைநிலத்தை தனக்கு விற்பனை செய்ய வேண்டும் என்று மிரட்டி வரும் நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளதால், பா.ஜ.கவின் முக்கிய பிரமுகர்கள் அமலாக்கத்துறை அதிகாரிகளின் பின்னணியில் இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது." என தெரிவித்துள்ளார்.

மேலும், விவசாயிகளுக்கு சம்மன் அனுப்பிய, அமலாக்கத்துறை உதவி இயக்குநர் ரித்தேஷ்குமார் மற்றும் அதிகாரிகள் பிரபா, சந்திரன் உள்ளிட்டோர் மீது சட்டப்படி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் சார்பில் வழக்கறிஞர் பிரவீனா சென்னை நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் மீது விசாரணை நடத்த டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, நுங்கம்பாக்கம் போலீசார், ஏழை மற்றும் படிக்க தெரியாத விவசாயிகளான கண்ணையன் மற்றும் கிருஷ்ணன் ஆகியோருக்கு, எந்த அடிப்படையில் ‘சட்டவிரோத பணம் பரிமாற்றம் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது? விவசாயிக்கு ஜாதி பெயரை குறிப்பிட்டு ஏன் சம்மன் அனுப்ப வேண்டும் என்பது குறித்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

ஆதாரங்கள் அடிப்படையில் ED அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். ஓரிரு நாளில் விவசாயிகளுக்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை அதிகாரிகளை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி சம்மன் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

அப்பாவி விவசாயிகளுக்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை : போலிஸ் விசாரணை - சேலத்தில் நடந்தது என்ன?

விவசாய நிலத்திற்கும் அமலாக்கத்துறைக்கும் சம்பந்தமே இல்லாத நிலையில், படிக்கத்தெரியாத, ஏழை விவசாயிகளுக்கு சட்டவிரோத பண பரிமாற்றச்சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது வேடிக்கையாக இருப்பதைத் தாண்டி, இதன் பின்னணியில் மிகப்பெரிய அரசியல் தலையீடு இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

எதிர்க்கட்சிகளை மிரட்டுவதற்கு அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி வரும் பாஜக, தற்போது தங்களது கட்சி நிர்வாகிகளுக்கு எதிராக செயல்படும் ஏழை எளிய மக்களையும் மிரட்டத் தொடங்கிவிட்டதாக அரசியல் தலைவர்களும், சமூக ஆர்வலர்ளும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அமலாக்கத்துறை தற்போது, பாஜகவின் அடியாட்களாகவே மாறிவிட்டதாகவும் விமர்சனம் எழுந்துள்ளது.

banner

Related Stories

Related Stories