தமிழ்நாடு

எண்ணற்ற மக்களுக்கு கண்ணொளி பாய்ச்சிய பத்ரிநாத் மறைவு மருத்துவத்துறைக்கே பேரிழப்பு: முதலமைச்சர் இரங்கல்!

புகழ்பெற்ற கண் மருத்துவர் எஸ்.எஸ். பத்ரிநாத் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

எண்ணற்ற மக்களுக்கு கண்ணொளி பாய்ச்சிய பத்ரிநாத்  மறைவு மருத்துவத்துறைக்கே பேரிழப்பு: முதலமைச்சர் இரங்கல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சங்கர நேத்ராலயா மருத்துவமனை நிறுவனர் புகழ்பெற்ற கண் மருத்துவர் எஸ்.எஸ். பத்ரிநாத் அவர்களின் மறைவையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

சங்கர நேத்ராலயா மருத்துவமனை நிறுவனரும் புகழ்பெற்ற கண் மருத்துவருமான எஸ்.எஸ். பத்ரிநாத் அவர்கள் மறைந்தார் என்றறிந்து வேதனையடைந்தேன்.

அமெரிக்காவில் உயர்படிப்புகளை முடித்து, இந்தியாவில் குறைந்த செலவில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற சேவை நோக்குடன் பத்ரிநாத் தொடங்கிய சங்கர நேத்ராலயா மருத்துவமனை பல்கிப் பெருகி இன்று நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்குச் சிகிச்சை அளித்து வருகிறது. இத்தகைய சேவைக்காக இந்திய அரசால் வழங்கப்படும் 'பத்மபூஷன்' விருதினையும் மருத்துவர் பத்ரிநாத் அவர்கள் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சங்கர நேத்ராலயா மூலம் பத்ரிநாத் அவர்கள் ஆற்றி வரும் பணிகளைப் பற்றி அறிந்த புகழ்பெற்ற வழக்கறிஞர் நானி பல்கிவாலா அவர்கள் பெரும் நிதியுதவியை அந்த மருத்துவமனைக்கு அளித்ததுடன், பின்னர் தனது சொத்துகள் அனைத்தையும் சங்கர நேத்ராலயாவுக்கு எழுதி வைத்தார் என்பதன் மூலம் இத்துறையில் பத்ரிநாத் அவர்கள் பெற்றிருந்த முக்கியத்துவத்தை அறியலாம். எண்ணற்ற மக்களுக்குக் கண்ணொளி பாய்ச்சிய பத்ரிநாத் அவர்களது மறைவு மருத்துவத்துறைக்கே பேரிழப்பு.

எஸ்.எஸ். பத்ரிநாத் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் மருத்துவத் துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதேபோல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் இரங்கல் தெரிவித்துள்ளார். இவரது சமூகவலைதளத்தில், "இந்தியாவின் மிக முக்கிய கண் மருத்துவமனைகளுள் ஒன்றான சங்கர நேத்ராலயா மருத்துவமனையின் நிறுவனரும், அதன் தலைவருமான மருத்துவர் பத்ரிநாத் அவர்கள் மறைவுக்கு என் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

தொண்டுள்ளத்துடன் ஏழை - எளிய மக்களுக்கு கண் சிகிச்சை அளித்து அவர்களது வாழ்வில் ஒளியேற்றிய மருத்துவர் பத்ரிநாத்தின் இழப்பு மருத்துவத்துறைக்கு பேரிழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு என் ஆறுதலை தெரிவித்து கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories