இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் இலங்கைக்குச் சென்று 200 ஆண்டுகள் (1823 - 2023) ஆவதை நினைவுகூரும் வகையிலும், அவர்கள் இலங்கைக்கு ஆற்றிய சேவைகளையும், இலங்கையின் பொருளாதாரத்துக்கு வழங்கிய பங்களிப்பைப் பாராட்டியும் நாம் 200' என்ற தலைப்பிலான தேசிய நிகழ்வு கடந்த 3-ம் தேதி நடைபெற்றது.
இலங்கை மத்திய அரசாங்கத்தின் பங்களிப்புடன் இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமானால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொலி வாயிலாக வாழ்த்துரை வழங்கினார். இந்நிலையில், முதலமைச்சரின் காணொளி உரையை ஒளிபரப்ப ஒன்றிய அரசு தடை விதித்துள்ளதாக இந்து நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. இதையடுத்து ஒன்றிய அரசின் இந்த செயலுக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.
"தமிழ்நாட்டு மக்களின் சார்பில் வாழ்த்துரை வழங்கி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அனுப்பிய காணொலி உரையை அந்த விழாவில் ஒளிபரப்ப தடை விதித்ததன் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை சிறுமைப்படுத்துவதற்கு முயன்றுள்ள ஒன்றிய பாஜக அரசின் செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது" என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதேபோல், தி.மு.க செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் “இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் வாழ்த்துச் செய்தி காணொளியை ஒளிபரப்பவிடாமல் செய்தது எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நெரிக்கும் செயலாகும். மலையகத் தமிழர்களின் கோரிக்கையை ஏற்றுத்தான், முதலமைச்சர் வாழ்த்துச் செய்து அனுப்பப்பட்டது." கண்டித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார். அதில், "இலங்கை மலையகத் தமிழர் விழாவில், அவர்கள் கேட்டுக்கொண்டதன் பேரில் முதலமைச்சர் வாழ்த்துச் செய்தியைக் குறித்த நேரத்தில் அனுப்பி வைத்தார்.
ஆனால், அங்கு முதலமைச்சர் காணொலி ஒளிபரப்பு செய்யவில்லை. என்ன காரணத்தினால் அந்த காணொலி அங்கு ஒளிபரப்பு செய்யவில்லை எனத் தெரியவில்லை. ஆனால் அதற்குப் பிறகு முதலமைச்சரின் வாழ்த்து செய்தி பல்வேறு ஊடகங்களின் வாயிலாக வெளிவந்திருக்கிறது" என தெரிவித்துள்ளார்.