தமிழ்நாடு

பெட்ரோல் குண்டு வீசிய விவகாரம் : பொய்யை அடுக்கிய ஆளுநர் மாளிகை.. உண்மையை அம்பலப்படுத்திய காவல்துறை !

பெட்ரோல் குண்டு வீசிய விவகாரம் : பொய்யை அடுக்கிய ஆளுநர் மாளிகை.. உண்மையை அம்பலப்படுத்திய காவல்துறை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சென்னை ராஜ்பவனில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகை நுழைவாயில் முன்பு கடந்த 25-ம் தேதி (நேற்று) 2 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது. இந்த விவகாரத்தில் அங்கு பணியில் இருந்த காவலர்கள் பெட்ரோல் குண்டு வீசிய வினோத் என்ற கருக்கா வினோத்தை மடக்கி பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த சூழலில் குற்றவாளி தப்பியோடிவிட்டதாகவும், தமிழ்நாடு காவல்துறை இதுகுறித்து எந்த ஒரு வழக்கும் பதியவில்லை என்றும் போலியான குற்றச்சாட்டை ஆளுநர் மாளிகை முன்வைத்தது. மேலும் குற்றவாளி மீது காவல்துறை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் போலியான குற்றசாட்டை முன்வைத்துள்ளது ஆளுநர் மாளிகை.

அதேபோல் கடந்த ஏப்ரல் 19, 2022 அன்று மயிலாடுதுறை சென்ற போது ஆளுநரின் வாகனம் தாக்கப்பட்டது என்றும், இது சம்பந்தமாக காவல்துறையில் புகார் தெரிவிக்கப்பட்டும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை என்றும் குற்றச்சாட்டை ஆளுநர் மாளிகை தெரிவித்தது. இந்த நிலையில், அவையனைத்தும் உண்மைக்கு புறம்பானது என்று தமிழ்நாடு காவல்துறை பகிரங்கமாக தெரிவித்துள்ளது.

பெட்ரோல் குண்டு வீசிய விவகாரம் : பொய்யை அடுக்கிய ஆளுநர் மாளிகை.. உண்மையை அம்பலப்படுத்திய காவல்துறை !

இதுகுறித்து டி.ஜி.பி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு பின்வருமாறு :

“25.10.2023 அன்று மதியம் 3 மணியளவில், கருக்கா வினோத் (42 வயது – E-3 தேனாம்பேட்டை காவல் நிலையத்தின் வழக்கமான குற்றவாளி) என்பவர் சர்தார் படேல் சாலை வழியாக ஆளுநர் மாளிகை அருகே தனியாக பாதசாரி போன்று நடந்து வந்தார். அவர் பெட்ரோல் நிரம்பிய நான்கு பாட்டில்களைக் கொண்டுவந்து, அவற்றை ஆளுநர் மாளிகை அமைந்துள்ள சர்தார் படேல் சாலையின் எதிர்ப்புறத்தில் இருந்து எறிய முற்பட்டபோது, ஆளுநர் மாளிகை வெளிப்புறத்தில் பாதுகாப்புப் பணியிலிருந்த தமிழ்நாடு காவல்துறை போலீசாரால் தடுக்கப்பட்டார்.

கைது செய்யப்படுவதற்கு பயந்து, சம்பவ இடத்திற்கு எதிரே சற்று தூரத்திலிருந்து இரண்டு பாட்டில்களை வீசினார். அவை ஆளுநர் மாளிகையின் அருகே சர்தார் படேல் சாலையில் வைக்கப்பட்டிருந்த தடுப்பரண்களுக்கு அருகே விழுந்தது. பின்னர், அவர் ஆளுநர் மாளிகையின் பிரதான வாயிலிலிருந்து சுமார் 30 மீட்டர் தூரத்தில், பாதுகாப்பு போலீசாரால் உடனடியாக கைதுசெய்யப்பட்டு, காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். இச்சம்பவத்தால், பொருட்களுக்கோ அல்லது எந்த நபருக்கோ எவ்வித சேதமோ, காயமோ ஏற்படவில்லை.

கண்காணிப்புக் கேமரா பதிவுகளை ஆராய்ந்ததில், மேற்படி நபர் தேனாம்பேட்டையிலிருந்து, சம்பவ இடம் வரை தனியாகவே வந்துள்ளார் எனத் தெரிய வந்துள்ளது. முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு, 25.10.2023 அன்று J-3 கிண்டி காவல் நிலையத்தில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது மேற்படி எதிரி, IV-வது பெருநகர குற்றவியல் நடுவர் அவர்கள் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, 09.11.2023 வரை நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

பெட்ரோல் குண்டு வீசிய விவகாரம் : பொய்யை அடுக்கிய ஆளுநர் மாளிகை.. உண்மையை அம்பலப்படுத்திய காவல்துறை !

மேற்படி வினோத் ஏற்கனவே பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார். வினோத் மற்றும் அவரது கூட்டாளிகள் சௌத் போக் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் 12.08.2015 அன்று பெட்ரோல் நிரம்பிய பாட்டில்களை வீசியுள்ளனர். அதேபோல் 13.07.2017 அன்று வினோத் மற்றும் அவரது கூட்டாளிகள் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் மண்ணெண்ணெய் நிரம்பிய பாட்டில்களை வீச முற்பட்ட போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்படி வினோத் மீது 14 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

ஆளுநர் அவர்களுக்கு எதிராக பகிரங்க மிரட்டல், அவதூறுப் பேச்சு மற்றும் தாக்குதல் போன்ற பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாகவும், அவை தொடர்பாக காவல்துறையினர் நியாயமான முறையில் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யவில்லை எனவும், மேலும் அச்சம்பவங்கள் தொடர்பாக எவ்வித மேல் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குறிப்பிட்டு, 25.10.2023 அன்று மருத்துவர் T.செங்கோட்டையன் (ஆளுநரின் துணைச் செயலாளர்) புகார் அளித்துள்ளார்.

25.10.2023 அன்று நடந்த சம்பவம் ஒரு தனிப்பட்ட நபரால் ஆளுநர் மாளிகைக்கு வெளியே சர்தார் படேல் சாலையில் செய்யப்பட்ட செயலாகும். இந்த நிகழ்வில் புகாரில் தெரிவிக்கப்பட்டது போல் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களால் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது எனவும், அவர்கள் அத்துமீறி ஆளுநர் மாளிகையினுள் நுழைய முற்பட்டு ஆளுநர் மாளிகை வாயிற்காப்பாளர்களால் (Sentry) தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்கள் எனவும், மேலும் அங்கு வீசப்பட்ட பெட்ரோல் குண்டு வெடித்தது என்றும் சொல்வது அனைத்தும் உண்மைக்கு முற்றிலும் புறம்பானது. அதேபோல் ஏப்ரல் 19, 2022 அன்று மயிலாடுதுறை சென்ற போது ஆளுநரின் வாகனம் தாக்கப்பட்டது என்றும், இது சம்பந்தமாக காவல்துறையில் புகார் தெரிவிக்கப்பட்டும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை என்பதும் உண்மைக்கு புறம்பானது.

பெட்ரோல் குண்டு வீசிய விவகாரம் : பொய்யை அடுக்கிய ஆளுநர் மாளிகை.. உண்மையை அம்பலப்படுத்திய காவல்துறை !

ஆளுநரின் வாகனம் மற்றும் கான்வாய் அப்பகுதியை கடந்து சென்றபின்னர் அங்கு கூடியிருந்தவர்களில் சிலர் கருப்புக்கொடிகளை சாலையில் வீசினர். அக்கொடிகள் ஆளுநரின் வாகனம் மற்றும் கான்வாய் முழுமையாக சென்றபின் பின்னால் வந்த வாகனங்கள் மீது விழுந்தன. இச்சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு 73 பேர் கைது செய்யப்பட்டனர். மேற்படி வழக்கு புலன் விசாரணையில் உள்ளது. மேற்படி சம்பவங்கள் அனைத்திற்கும் காணொளி ஆதாரங்கள் உள்ளன.

மேலும், ஆளுநரின் கான்வாய் மீது கற்கள் மற்றும் கட்டைகள் வீசப்பட்டன என்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகும். மேலே குறிப்பிட்டுள்ளது போன்று எந்தவித சம்பவங்களும் நடைபெறவில்லை.

ஆளுநர் மாளிகையின் பாதுகாப்பிற்காக சர்தார் படேல் சாலையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த சென்னை பெருநகர காவல்துறையின் பாதுகாப்புக் காவலர்கள் விழிப்புடன் இருந்த காரணத்தினாலும், பலத்த காவல் பாதுகாப்பு செய்யப்பட்டிருந்ததாலும், உடனடியாகக் குற்றவாளி கைதுசெய்யப்பட்டார். மேற்படி வழக்கில் முழுமையான விசாரணை மேற்கொள்ளப்படும்.

ஏற்கனவே, கண்காணிப்பு கேமரா பதிவுகள் முழுமையாக சேகரிக்கப்பட்டுள்ளன. மேற்படி வழக்கில் முழுமையான நியாயமான விசாரணை மேற்கொள்ளப்படும். மேதகு ஆளுநர் அவர்களுக்கும் மற்றும் அவரது மாளிகைக்கும் தமிழ்நாடு காவல் துறையினரால் உரிய பாதுகாப்பு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.”

இதன்மூலம் ஆளுநர் மாளிகை தமிழ்நாட்டில் வேண்டுமென்றே போலியான விஷயங்களை பரப்புவது அம்பலமாகியுள்ளது. இந்த செயலுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தற்போது கண்டனங்கள் குவிந்து வருகிறது.

banner

Related Stories

Related Stories