தமிழ்நாடு

“வேற்றுமையை விதைக்கும் சக்திகளை வேரோடு சாய்ப்போம்..” : சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் ஆற்றிய முழு உரை!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து ஆற்றிய சுதந்திரத் திருநாள் விழாப் பேருரை பின்வருமாறு :-

“வேற்றுமையை விதைக்கும் சக்திகளை வேரோடு சாய்ப்போம்..” : சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் ஆற்றிய முழு உரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இந்தியாவின் 77ஆவது சுதந்திர தினம் நாடெங்கிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்தார்.

அந்த வகையில், சென்னை கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை கோட்டைக்கு சென்றடைந்தவுடன் திறந்தவெளி வாகனத்தில் நின்று முப்படைகளின் உயர் அதிகாரிகள், தமிழ்நாடு காவல்துறை வரவேற்பு அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகக் கோட்டை கொத்தளத்தில் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து ஆற்றிய சுதந்திரத் திருநாள் விழாப் பேருரை பின்வருமாறு :-

77வது ஆண்டினைத் தொடங்கியுள்ளது இந்திய ஒன்றியத்தின் விடுதலை நாள். இந்திய ஒன்றியத்தின் முக்கியமான அங்கம் நம் தமிழ்நாடு. மூத்த மொழியாம் செம்மொழித் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட நம் தமிழ்நாடு, இடைக்காலத்தில் சென்னை மாகாணம், மெட்ராஸ் பிரசிடென்சி, மதராஸ் மாகாணம், மெட்ராஸ் என்று அழைக்கப்பட்டது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி அமைந்த பிறகு - பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் தமிழ் மண்ணின் முதலமைச்சராக ஆன பிறகுதான், 1967-ஆம் ஆண்டு ஜூலை 18-ஆம் நாள் தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டது.

'ஒரே ஒரு சங்கரலிங்கனார்தான் செத்துப் போயிருக்கிறார் என்று நினைப்பீர்களேயானால் தமிழ்நாடு என்ற ஒவ்வொரு எழுத்துக்கும் சேர்த்து ஐந்து உயிர்களைத் தரத் தயாராக இருக்கிறோம்' என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் குரல் கொடுத்தவர் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள்!

“வேற்றுமையை விதைக்கும் சக்திகளை வேரோடு சாய்ப்போம்..” : சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் ஆற்றிய முழு உரை!

'சென்னை மாகாணத்தில் இருந்த பிற மொழி பேசும் எல்லா மாநிலங்களும் தனித்தனியாகப் பிரிந்து போனபிறகு தமிழ்நாட்டுக்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டாமல் ஏன் இருக்க வேண்டும்? அதனைப் பார்த்துக் கொண்டு நான் ஏன் உயிரோடு இருக்க வேண்டும்?' என்று கேட்டவர் தந்தை பெரியார்.

இத்தகைய பார்போற்றும் தமிழ்நாடு மாநிலத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற நான், மூன்றாவது ஆண்டாக இந்திய நாட்டின் தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறேன். 400 ஆண்டுகள் பழமையான இந்த புனித ஜார்ஜ் கோட்டையின் கொத்தளத்தில் மூவண்ணக் கொடியை ஏற்றுவதில் நான் பெருமிதம் கொள்கிறேன். இந்தக் கொடியேற்றும் வாய்ப்பை எனக்கு வழங்கிய தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்கள்!

நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பியாம் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா ஆண்டில் கோட்டையில் நின்று கொடியேற்றும் வாய்ப்பை நான் பெற்றமைக்காகப் பெருமை அடைகிறேன்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலத்தின் முதலமைச்சர்கள் அனைவருக்கும் விடுதலை நாளன்று கொடியேற்றும் உரிமையைப் பெற்றுத் தந்து, மாநில சுயாட்சிக் கொடியைக் காத்த தலைவர்தான் கலைஞர் அவர்கள். அவரது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவது என்பது தமிழை,  தமிழ்நாட்டைக் கொண்டாடுவதாகும்.

விடுதலை வீரர்களைப் போற்றிப் பாராட்டுவதில் திராவிட முன்னேற்றக் கழக அரசு யாருக்கும் சளைத்தது அல்ல. அதற்கு சில எடுத்துக்காட்டுகளை இங்கே எடுத்துரைக்க விரும்புகிறேன்.

  • மாவீரன் பூலித்தேவனுக்கு, நினைவு மண்டபம்!

  • பாஞ்சாலங்குறிச்சியில், வீரபாண்டிய கட்டபொம்மனுக்குக் கோட்டை!

  • மாவீரன் சுந்தரலிங்கம் வாரிசுகளுக்கு வீடு!

  • மகாகவி பாரதியின் வீடு, அரசு இல்லம் ஆனது!

  • பெருந்தலைவர் காமராசருக்கு, மணிமண்டபம்!

  • மூதறிஞர் இராஜாஜிக்கு, நினைவாலயம்!

  • தில்லையாடி வள்ளியம்மாளுக்கு, மணிமண்டபம்!

  • வீரவாஞ்சியின் உறவினருக்கு, நிதி!

  • வ.உ.சி. இழுத்த செக்கு, நினைவுச் சின்னம் ஆனது!

  • விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு, இலவசப் பேருந்து பயணம்!

  • தியாகிகளுக்கு, மணிமண்டபம்!

  • விடுதலைப் பொன்விழா நினைவுச் சின்னம்!

  • விடுதலைப் போராட்ட வீரர் தளி பாளையக்காரர் மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்பர் அவர்களுக்கு நினைவு மண்டபம்

  • தியாகி ஈஸ்வரன் அவர்களுக்கு அரங்கம்

  • தியாகி விஸ்வநாத தாஸ் வாழ்ந்த இல்லம் புதுப்பிப்பு!

  • நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்குச் சிலை!

  • தியாகி கக்கனுக்குச் சிலை!

  • சிப்பாய் கலகத்துக்கு நினைவுத்தூண்!

- இப்படி நாட்டுக்காக உழைத்த தியாகிகளைப் போற்றிய இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம். மொழிப்பற்று, இனப்பற்றுடன் நாட்டுப்பற்றையும் ரத்த உணர்வாகக் கொண்டவர்கள் நாம்.

“வேற்றுமையை விதைக்கும் சக்திகளை வேரோடு சாய்ப்போம்..” : சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் ஆற்றிய முழு உரை!

1962-ஆம் ஆண்டு சீன நாட்டால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டபோது பேரறிஞர் அண்ணா அவர்கள் அதை எதிர்கொள்வதில் பண்டித நேரு அவர்களுக்குத் துணை நின்றார்கள்.

  • 1971-ஆம் ஆண்டு இந்தியாவை பாகிஸ்தான் அச்சுறுத்தியபோது, இந்திய மாநிலங்கள் எல்லாம் 25 கோடி ரூபாய் நிதி திரட்டி, இந்திய பிரதமர் திருமதி. இந்திரா காந்தி அவர்களிடம் அளித்தபோது, அதில் தமிழ்நாட்டின் பங்காக ஆறு கோடி ரூபாய் அளித்தது தலைவர் கலைஞரின் அரசு.

  • 1999-ஆம் ஆண்டு கார்கில் போரின்போது அன்றைய பிரதமர் வாஜ்பாய் அவர்களிடம் மூன்று தவணையாக மொத்தம் 50 கோடி ரூபாயை வழங்கினார் முதலமைச்சர் கலைஞர்.

இன்றைய திராவிட மாடல் அரசும், நம் நாட்டுத் தியாகிகளை மதித்துப் போற்றி வருகிறது.

  • இந்திய விடுதலையின் 75-ஆவது ஆண்டு விழாவைப் பெருவிழாவாக ஆண்டு முழுவதும் கொண்டாடினோம். அதற்கான நினைவுத்தூண் நேப்பியர் பாலம் அருகில் அமைக்கப்பட்டுள்ளது.

  • பாரதியார் நினைவு நாளான செப்டம்பர் 11-ஆம் நாளை ‘மகாகவி நாள்’ என அறிவித்தோம்.

  • அவர் மறைந்த நூற்றாண்டின் நினைவை முன்னிட்டு 14 அறிவிப்பினைச் செய்தோம்.

  • செக்கிழுத்த செம்மல் - கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரைப் பெருமைப்படுத்தும் வகையில் 13 அறிவிப்புகளை வெளியிட்டோம்.

  • அவரது படைப்புகளைத் தொகுத்துப் பாடநூல் கழகத்தின் சார்பில் வெளியிட்டுள்ளோம்.

  • அதுமட்டுமல்ல, அவர் பிறந்த தூத்துக்குடி மாவட்டம், கிள்ளிக்குளத்தில் இயங்கிவரும் அரசு  வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு வ.உ.சிதம்பரனார் அவர்களது பெயர் சூட்டப்படும் என்பதை மிகுந்த மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன். இந்த வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு, இந்த ஆண்டு வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் பனை ஆராய்ச்சி நிலையம் மற்றும்  வாழை ஆராய்ச்சி நிலையம் அமைக்க  தலா 15 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டதையும் இங்கே நினைவுபடுத்த விரும்புகிறேன்.

  • உத்தரப் பிரதேச மாநிலம் காசியில் பாரதியார் வாழ்ந்த வீடு சீரமைக்கப்பட்டது.

  • கிண்டி காந்தி மண்டபத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவச் சிலை அமைக்கப்பட்டது.

  • கிண்டியில் மருது சகோதரர்கள் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

  • விடுதலைப் போராட்ட வீரர்களின் நினைவிடங்களில் ஒலி, ஒளிக் காட்சிகள் அமைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

  • காந்தி மண்டபம், அருங்காட்சியகம், பெருந்தலைவர் காமராசர் மண்டபம், பெரியவர் பக்தவத்சலம் மண்டபம் ஆகியவை மேம்படுத்தப்பட்டுள்ளது. 

  • தனது வாழ்நாளில் 20 முறை தமிழ்நாட்டுக்கு வந்தவர் அண்ணல் காந்தியடிகள் அவர்கள். அரையாடை அணிவது என்ற முடிவை   மதுரை மண்ணில் இருந்துதான் காந்தியடிகள் எடுத்தார்கள். இதன் அடையாளமாகச் சென்னை அருங்காட்சியக வளாகத்தில் காந்தியடிகளின் திருவுருவச் சிலையை அமைத்துள்ளோம். அதனை நான் திறந்து வைத்தேன்.

சொன்னதைச் செய்வதும், சொல்லாமலே செய்வதும் நம்முடைய அரசின் செயல்பாடாக அமைந்துள்ளது.

  • இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் 195 பேருக்கு மாதம்தோறும் தியாகிகளுக்கான நிதி கொடையை தொடர்ந்து வழங்கி வருகிறது தமிழ்நாடு அரசு.

  • கடந்த ஆண்டு தியாகிகளுக்கான ஓய்வூதியம் 18 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரம் ரூபாயாகவும், குடும்ப ஓய்வூதியம் 9 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது.

  • அதேபோல் விடுதலைப் போராட்ட வீரர்களின் வழித்தோன்றல்களுக்கு தொடர்ந்து உதவிகளை செய்து வருகிறது நமது அரசு.

  • விடுதலைப் போராட்ட தியாகிகளின் குடும்ப உறுப்பினர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் மாதாந்திர ஓய்வூதியம் பத்தாயிரம் ரூபாயிலிருந்து, 11 ஆயிரம் ரூபாயாக இனி உயர்த்தி வழங்கப்படும் என்ற புதிய அறிவிப்பை இன்று வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

தமிழ்நாடுதான் விடுதலைப் போராட்டத்துக்கான விதையை முதலில் விதைத்தது. விடுதலை தாகத்தில், விடுதலை வேகத்தில், நாட்டுப்பற்றில் நம் தமிழ் இனம் இந்தியாவில் உள்ள எந்த இனத்திற்கும் எந்தவிதத்திலும் குறைந்தது அல்ல.

1600-ஆம் ஆண்டு கிழக்கிந்தியக் கம்பெனி இங்கு காலூன்றியது என்று சொன்னால், அவர்களது அடக்குமுறைக்கு எதிராக உடனடியாக விடுதலை முழக்கத்தை எழுப்பிய மண் தமிழ்நாடு. 1857 சிப்பாய்க் கலகத்தைத்தான் முதலாவது இந்திய விடுதலைப் போர் என்று சிலர் சொல்கிறார்கள். அதற்கு முன்னால் 1755-ஆம் ஆண்டு தெற்கில் அதுவும் தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் தொடங்கிவிட்டது.

செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் நின்று கொடியை ஏற்றும்போது தமிழனாகப் பெருமைப்படும், உணர்ச்சி வசப்படும் நிலை ஏற்படுவதற்கு இதுதான் காரணம். அடிமைப்படுத்துதல் என்று தொடங்கியதோ, அன்றைய தினமே விடுதலை முழக்கத்தை எழுப்பிய மண் நம்முடைய தமிழ் மண்.

1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் நாள் ஆங்கிலேயே ஆதிக்கத்திலிருந்து நம் நாடு விடுதலை பெற்று, சுதந்திரக் கொடி பறந்தது. ஆனால், அதற்குப் பல ஆண்டுகள் முன்பே, ஆடுவோமே.. பள்ளுப் பாடுவோமே.. ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று ஆடுவோமே என்று தொலைநோக்குடன் பாடியவர் தமிழ்நாடு தந்த மகாகவி பாரதியார்.

ஆங்கிலேயரிடமிருந்து நாம் விடுதலை பெற வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், உத்தமர் காந்தியடிகளின் வழிகாட்டுதலில், 1930-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் நாளை விடுதலை நாளாகக் கொண்டாட வேண்டும், மூவண்ணக் கொடியை ஏற்ற வேண்டும் என நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார் பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள். நாட்டின் பல இடங்களிலும் மூவண்ணக் கொடியை மக்கள் ஏற்றினார்கள்.

“வேற்றுமையை விதைக்கும் சக்திகளை வேரோடு சாய்ப்போம்..” : சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் ஆற்றிய முழு உரை!

அந்த நாளின் பொழுது விடிவதற்கு முன்பாக நள்ளிரவில், இதோ இந்த சென்னை, செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள உயரமான கொடி மரத்தின் மீது ஓர் இளைஞன் ஏறினான். ஆங்கிலேயக் காவலர்கள் தன்னைப் பார்த்து விடக்கூடாது என கவனமாக ஏறினான். அப்போது உயர்நீதிமன்றம் அருகே கலங்கரை விளக்கம் இருந்தது. அதன் ஒளி தன் மீது பட்டு, அடையாளம் காட்டிவிடக்கூடாது என்பதால், எத்தனை மணித்துளிகளுக்கு ஒரு முறை கொடிக்கம்பத்தின் மீது அந்த ஒளி படுகிறது என்பதைக் கணக்கிட்டு, அந்த வெளிச்சம் வரும்போது எல்லாம், கொடிமரத்தின் மறுபுறத்தில் தன்னை மறைத்துக் கொண்டு, கவனமாக ஏறி, உயரத்தில் பறந்த பிரிட்டிஷாரின் யூனியன் ஜாக் கொடியை அகற்றிவிட்டு, மூவண்ணக் கொடியை பறக்கவிட்டான் அந்த இளைஞன். அந்த வீர இளைஞரின் பெயர் பாஷ்யம் என்கிற ஆர்யா.

காலையில் கண்விழித்து பார்த்த வெள்ளைக்கார அதிகாரிகள், தங்கள் கொடிக்கு பதில் மூவண்ணக் கொடி பறப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். சென்னை மக்களோ மகிழ்ச்சி அடைந்தனர். இந்தக் கொடிக் கம்பத்திற்கும் அதில் பறக்கின்ற கொடிக்கும் தியாக வரலாறு உண்டு.

இந்தக் கொடி இந்திய நாட்டைக் காத்த கொடி மட்டுமல்ல, காக்கும் கொடி! காக்கப் போகும் கொடி! இது வெறும் கொடியல்ல, கோடானு கோடி இந்திய மக்களின் மணிமுடி! இந்தியாவின் விடியலுக்கு வித்திட்ட இந்த மூவண்ணக் கொடிதான், எதிர்கால இந்தியாவை உருவாக்கவும், உணர்ச்சியையும், எழுச்சியையும் ஊட்டி வரும் கொடியாகும்.

பரந்து விரிந்த இந்திய நாட்டில் பல்வேறு இனத்தைச் சேர்ந்த மக்கள் வாழ்கிறார்கள். பல்வேறு மொழி பேசும் மக்கள் வாழ்கிறார்கள். பல்வேறு வழிபாட்டு நம்பிக்கை கொண்டவர்கள் வாழ்கிறார்கள். மாநிலத்திற்கு மாநிலம் உடை மாறுபடுகிறது. மாநிலத்திற்கு மாநிலம் உணவு மாறுபடுகிறது. மாநிலத்திற்கு மாநிலம் உணர்வும், உணர்ச்சியும் மாறுபடுகின்றன. பண்பாடும், பழக்க வழக்கங்களும் மாறுபடுகின்றன. இவ்வளவு வேற்றுமை இருந்தாலும் - அந்த வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையாக வாழ்கிறோம். ஒரு குடையின் கீழ் வாழ்கிறோம் என்பார்களே, அதே போல ஒரு கொடியின் கீழ் நாம் வாழ்கிறோம். அதுதான் இந்த மூவண்ணக் கொடி.

மூவண்ணக் கொடியை போற்றுவதன் மூலமாக நாட்டை போற்றுகிறோம், நாட்டு மக்களை வணங்குகிறோம். மூவண்ணக் கொடிக்கு முன்பு, அணி அணியாக அணிவகுத்து நிற்கும் நாட்டு மக்கள் அனைவர்க்கும் எனது அன்பான வணக்கங்கள்!

நாம் அனைவரும் இன்று விடுதலைக் காற்றைச் சுவாசிக்கக் காரணமாக அமைந்த வீரத்தியாகிகள் அனைவருக்கும் வீரவணக்கத்தைச் செலுத்துவோம்! அத்தகைய தியாகிகளை ஈந்த அவர்தம் குடும்பத்தினர் வாழும் திசை நோக்கி வணங்குவோம்!

இந்தியாவின் விடுதலைக்காகப் போராடிய பெருமக்கள் அனைவரும் - விடுதலை பெற்ற இந்திய நாடு எப்படி இருக்க வேண்டும்? இது யாருக்கான இந்தியாவாக அமைய வேண்டும் என்பதைக் கனவு கண்டார்கள்.
ஆகஸ்ட் 15-ஆம் நாள் இந்தியாவே விடுதலை பெற்ற மகிழ்ச்சியில் இருந்த போது, விடுதலைப் போராட்டத்துக்கு தலைமை வகித்த மகாத்மா காந்தி அவர்கள் தலைநகர் டெல்லியில் இருக்காமல், மதவெறிக் கலவரங்கள் நடந்த நவகாளிப் பகுதியில் இருந்தார். அதுவும் பாதுகாப்பான இடத்தில் இருக்காமல் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்கள் வாழும் பகுதியில் போய் தங்கி இருந்தார். தனது அறச்சிந்தனையால், நல்ல உள்ளத்தால் கலவரத்தைக் கட்டுப்படுத்தினார் மகாத்மா காந்தி.

“வேற்றுமையை விதைக்கும் சக்திகளை வேரோடு சாய்ப்போம்..” : சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் ஆற்றிய முழு உரை!

''பஞ்சாபில் 55 ஆயிரம் வீரர்கள் இருந்தாலும், கலவரங்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனால் வங்காளத்தில் ஒற்றை வீரராக இருந்து கலவரத்தைக் கட்டுப்படுத்தி விட்டீர்கள்" என்று அண்ணல் காந்திக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டார் அன்றைய கவர்னர் ஜெனரல் மவுண்ட்பேட்டன்.

கல்கத்தாவை அமைதிப்படுத்திய அண்ணல் காந்தி, அடுத்து டெல்லிக்கு வந்தார். அதே அமைதியை உருவாக்கினார். மதங்களின் பெயரால் மனமாச்சரியங்களின் பெயரால் மக்கள் ஒருவருக்கொருவர் சண்டை போட்டால் அந்த இடத்துக்குச் சென்று அமைதிப்படுத்துவதே தனது முக்கியமான பணி என்று கருதினார் காந்தி.

"பரம ஏழைகளாக இருப்பவர்கள் இது எனது நாடு என்று என்றைக்கு நினைக்கிறார்களோ, எதனுடைய உருவாக்கங்களில் அவர்களது குரல் ஓங்கியிருக்கிறதோ, எந்த ஒரு இந்தியாவில் உயர் வகுப்பினர், தாழ்த்தப் பட்டவர் என மக்களுக்குள் வேறுபாடு இருக்காதோ, எந்த ஒரு நாட்டில் எல்லா வகுப்பினரும் நல்லிணக்கத்துடன் வாழ்வார்களோ, அதுதான் உண்மையான இந்தியா" என்று சொன்னார் அண்ணல் காந்தியடிகள்.

25 வயதில் தூக்கு மேடைக்கு சிரித்துக் கொண்டே சென்ற மாவீரன் பகத்சிங் சொன்னார்... ''பாலுக்கு அழும் குழந்தை, கல்விக்கு ஏங்கும் மாணவன், வேலை தேடும் இளைஞன்... இவைகள் இல்லாத இந்தியாவே விடுதலை இந்தியா'' என்றார் பகத்சிங்.

பிரிட்டிஷ் ஆட்சிக்கு இறுதிக்காலத்தில் சிம்ம சொப்பனமாக இருந்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். அவர் உருவாக்கிய இந்திய தேசிய ராணுவம்தான், இனி அதிக காலம் இந்தியாவை ஆட்சி செய்ய முடியாது என்ற எண்ணத்தை பிரிட்டிஷாருக்கு உருவாக்கியது. “இரத்தத்தைத் தாருங்கள் விடுதலையை வாங்கித் தருகிறேன்” என்று சொல்லி இந்தியன் நேஷனல் ஆர்மியை உருவாக்கியவர் நேதாஜி அவர்கள். “இந்தியாவின் பயணம் என்பது சோசலிசத் திசைவழியில் செல்ல வேண்டும்” என்றார் நேதாஜி.

விடுதலை இந்தியாவுக்கான அரசியலமைப்புச் சட்டத்தை வடித்துக் கொடுத்த புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களும், அனைவருக்கும் பொதுவான இந்தியாவைத்தான் விரும்பினார்.

“வகுப்புகளுக்கு இடையிலான ஏற்றத் தாழ்வையும், பாலினங்களுக்கு இடையிலான ஏற்றத் தாழ்வையும் அப்படியே விட்டுவிட்டுப் பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்த சட்டங்களை உருவாக்கிக் கொண்டே செல்வது என்பது, நம்முடைய அரசியலமைப்புச் சட்டத்தைக் கேலிக்கூத்தாக்கிவிடும். இது சாணக்குவியலுக்கு மேலே மாளிகையைக் கட்டுவதைப் போன்று ஆகிவிடும்" என்று சொன்னவர் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள்.

இதனைத்தான் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரும் வலியுறுத்தினார்கள். ''மனித சமூகத்தில் சுயமரியாதை உணர்ச்சியும், சகோதரத்துவமும் தோன்ற வேண்டும். ஒருவன் உயர்ந்தவன் - ஒருவன் தாழ்ந்தவன் என்ற எண்ணம் அகல வேண்டும். உலகுயிர் அனைத்தும் ஒன்றெனும் எண்ணம் உதிக்க வேண்டும். வகுப்புச் சண்டைகள் மறைய வேண்டும். அனைவருக்கும் அனைத்தும் பொதுவான கூட்டுறவுச் சமதர்மம் உருவாக வேண்டும்" என்பதையே தனது இலக்காகச் சொன்னார் தந்தை பெரியார் அவர்கள்.

இவர்கள் அனைவரும் விரும்பியது சமத்துவ - சகோதரத்துவ - சமதர்ம இந்தியா. இந்தியா என்பது எல்லைகளால் அல்ல, எண்ணங்களால் வடிவமைக்கப்பட வேண்டும். அத்தகைய ஒரு அரசைத்தான் நாங்கள் தமிழ்நாட்டில் நடத்தி வருகிறோம். சமூகநீதி - சமத்துவம் - சுயமரியாதை - மொழிப்பற்று - இன உரிமை - மாநில சுயாட்சி ஆகிய கருத்தியல்களின் அடித்தளத்தில் நிற்கும் இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம். அந்த அடிப்படையில்தான் நமது ஆட்சியும் அமைந்துள்ளது.

கடந்த இரண்டாண்டு காலத்தில் தமிழ்நாடு அடைந்த வளர்ச்சியை நீங்கள் பார்த்தால் ஒரேயொரு துறை வளர்ச்சியாக இல்லாமல் பல்துறை வளர்ச்சியாக அமைந்திருக்கும்.

அதனடிப்படையில்தான், காலம் காலமாக குடும்ப பாரத்தை சுமக்கின்ற பெண்கள், தங்கள் உழைப்பிற்கு எந்த மதிப்பும் இன்றி, இதுதான் தங்களுக்கு விதிக்கப்பட்டது என்று எண்ணியிருந்த நிலையை மாற்றிடும் வகையிலும், ஆணுக்கு இணையாகப் பெண்களுக்கும் உரிமை உண்டு என்பதை உணர்ந்து கொள்ளும் வகையில் மகத்தானத் திட்டத்தை அறிமுகப்படுத்த இருக்கிறோம்.

“வேற்றுமையை விதைக்கும் சக்திகளை வேரோடு சாய்ப்போம்..” : சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் ஆற்றிய முழு உரை!

ஏறத்தாழ ஒரு கோடி மகளிர் மாதம்தோறும் பயனடையும் வகையில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், அடுத்த மாதம் 15-ஆம் நாள் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளன்று தொடங்கப்பட இருக்கிறது.

இந்தச் சமூகத்திற்காக வாழ்நாளெல்லாம் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்குக் கொடுக்கும் அங்கீகாரமாக இதனை வழங்க இருக்கிறோம். இந்தத் திட்டத்தின்கீழ் மகளிர்க்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது.  

'ஒரு நாட்டின் முன்னேற்றத்தை அந்நாட்டில் உள்ள பெண்களது முன்னேற்றத்தைக் கொண்டே அளவிடுவேன்' என்று சொன்ன அண்ணல் அம்பேத்கரின் வழியில், பெண்களின் உயர்கல்வியை உறுதிசெய்ய கொண்டு வரப்பட்ட புதுமைப்பெண் திட்டத்தில், அரசுப் பள்ளியில் பயின்று, கல்லூரியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் என்று, கடந்த நிதி ஆண்டில் மட்டும் சுமார் 2 இலட்சம் இளம்பெண்களுக்கு 100 கோடி ரூபாய் உதவித்தொகை அளிக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் சுமார் 2 லட்சத்து 11 ஆயிரம் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு, சுமார் 350 கோடி ரூபாய் வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

புதுமைப் பெண் திட்டம் செயல்படுத்தப்படுவதால், பெண்கள் பெறுகின்ற கல்வி மூலம், அவர்களின் இல்லத்தில் புதிய ஒளி பரவுவதையும், அந்த ஒளி மாணவியின் பெற்றோரின் முகத்தில், சகோதர-சகோதரிகளின் முகத்தில் பரவி, புன்னகையைப் பூக்கச் செய்வதையும் கண்டு நான் உள்ளம் நெகிழ்கிறேன்.

  • 2021-ஆம் ஆண்டு மே மாதம் 7-ஆம் நாள் நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டு கோட்டைக்கு வந்தபோது போட்ட முதல் கையெழுத்து என்பது மகளிருக்குக் கட்டணமில்லா பேருந்து வசதி செய்து தரும் உத்தரவுதான்.

திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் பெரும்பான்மையை பெற்ற செய்தி வந்து கொண்டிருக்கும் போது, அதிகாரிகள் என்னை வந்து சந்தித்தார்கள். அப்போது, மகளிருக்குக் கட்டணமில்லா பேருந்து வசதியை செய்து தருவதுதான் என் முதல் பணியாகக் கருதுகிறேன், முதல் கையெழுத்து அதற்குத்தான் போடப் போகிறேன் என்று சொன்னேன்.

“ஏற்கனவே போக்குவரத்துத் துறை மிகுந்த நஷ்டத்தில் இருக்கிறது. அந்த நிலையில் மகளிருக்குக் கட்டணமில்லை என்று சொன்னால் இழப்பு அதிகமாகிவிடும்” என்று சில அதிகாரிகள் சொன்னார்கள்.

“விடியல் தரப்போகிறோம்” என்று சொல்லி ஆட்சிக்கு வந்தோம் - விடியல் வந்துவிட்டது என்பதன் அடையாளமாக மகளிருக்குக் கட்டணமில்லை என்பதை அறிவித்தாக வேண்டும் என்று நான் சொன்னேன்.

பல்வேறு தரப்பு மகளிரின் பொருளாதாரச் சுமையை குறைக்கும் வகையில், பேருந்துகளில், அவர்கள் கட்டணம் செலுத்தாமல் பயணிக்கக் கொண்டு வரப்பட்ட இந்தத் திட்டத்தின்கீழ் தினசரி 50 இலட்சம் மகளிர் பயணிக்கின்றனர். இதுவரை இந்தத் திட்டத்தில் சுமார் 314 கோடி முறை பெண்கள் அரசுப் பேருந்துகளில் பாதுகாப்பான பயணம் மேற்கொண்டு பயனடைந்துள்ளனர். இந்தத் திட்டத்தால் ஒவ்வொருவரும் மாதம் ஒன்றுக்கு சராசரியாக 850 ரூபாய்க்கும் மேல் சேமிக்க முடிகிறது.

“வேற்றுமையை விதைக்கும் சக்திகளை வேரோடு சாய்ப்போம்..” : சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் ஆற்றிய முழு உரை!

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியானது, கோடிக்கணக்கான பெண்களுக்குப் பொருளாதார விடியலைக் கொடுத்துள்ளதன் அடையாளமான இந்தத் திட்டமானது, இனி 'விடியல் பயணம்' என்று பெயர் சூட்டப்படுகிறது. மகளிர் வாழ்க்கையில் இனி அவர்கள் பெறப் போகிற அனைத்து விடியலுக்குமான தொடக்கப் பயணமாக இது தொடரும்.

  • இதே போன்ற ஒரு மகத்தான திட்டம்தான் பள்ளி மாணவர்களுக்குத் தரப்படும் காலை உணவுத் திட்டம். முதலமைச்சர் என்ற முறையில் ஒரு பள்ளியில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட போது, ஒரு சில மாணவர்கள் சோர்வாக இருப்பதையும் முகம் வாடி இருப்பதையும் பார்த்தேன். ஏனென்று கேட்டபோது, காலையில் சாப்பிடவில்லை என்று சொன்னார்கள்.

    ஏழைக் குடும்பத்து தாய்மார்கள் அருகில் உள்ள நிறுவனங்களிலோ, அக்கம் பக்கத்து வீடுகளிலோ வேலைக்குச் செல்லக்கூடிய நிலையில், தாங்கள் பெற்ற பிள்ளைகளுக்குக் காலை உணவைக்கூட சரியாகத் தர முடியவில்லையே என்ற கவலையும் தவிப்புமாக அவர்கள் வேலை பார்ப்பதும், சாப்பிடாமல் பள்ளிக்கு வந்த குழந்தைகள், உடல் சோர்வினால் பாடத்தை சரியாக புரிந்துகொள்ள முடியாமல் தடுமாறுவதையும் உணர்ந்து கொண்டேன்.

    திராவிட மாடல் அரசு பிள்ளைகளுக்குத் தாயாக, தாய்மார்களுக்குப் பிள்ளையாக இருந்து செயலாற்றுகிற அரசு. அதனால்தான், கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ஆம் நாள் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் அன்று 1 முதல் 5-ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது.

இந்தத் திட்டம் பற்றி அமைச்சர்கள், அதிகாரிகள், வல்லுநர்கள் ஆகியோரிடம் ஆலோசித்தபோது, இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இதுபோல பள்ளி நாட்களில் காலை நேரத்தில் இதுபோன்ற உணவு வழங்கப்படுவதில்லை எனத் தெரிவித்தார்கள். இந்தியாவுக்கு முன்னோடித் திட்டங்களை வழங்குகின்ற மாநிலம், தமிழ்நாடு என்கிற வரலாறு தொடரட்டும் என்றேன். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் திட்டத்தால் மாணவர்களின் வருகை அதிகரித்து, அவர்கள் தடையின்றிக் கல்வி பெறுதல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  

இதன் தொடர்ச்சியாக, வரும் கல்வியாண்டு முதல் 31 ஆயிரத்து 8 அரசுப் பள்ளிகளில் பயிலும், 15 லட்சத்து 75 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் வரும் ஆகஸ்ட் 25-ஆம் நாள் முதல் மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் விரிவுபடுத்தப்பட உள்ளது. எதிர்கால சிற்பிகளாம் மாணவர்களின் உடல்நலனும், உள்ள வலிமையும் காத்திடும் வகையில் விரிவாகக்கப்படும் காலை உணவு திட்டத்தை, நவீனத் தமிழ்நாட்டின் சிற்பி எனப் போற்றக்கூடிய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பயின்ற திருக்குவளைப் பள்ளியில் தொடங்கி வைக்க இருக்கிறேன். இதற்கென இந்த நிதியாண்டில் 404 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • அரசின் சார்பில் திட்டங்களை அறிவித்தால் மட்டும் போதாது. அது முழுமையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை கவனித்து, நிறைவேற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் இருக்கிறது எனக் கருதுகிற காரணத்தால், மாவட்டங்கள் தோறும் அரசின் திட்டங்களின் நிலவரம் குறித்த ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறேன். அப்படிப்பட்ட ஓர் ஆய்வுப் பணியின் போது, அங்கன்வாடி ஒன்றில் நான் பார்த்த ஒரு குழந்தை மிகவும் மெலிந்திருந்தது. அதற்குக் காரணம் கேட்டபோது, சத்துக் குறைபாடு என்று அங்கன்வாடி பணியாளர்கள் தெரிவித்தார்கள். இதுகுறித்து, சமூக நலத்துறை அமைச்சர் மற்றும் உயர் அலுவலர்களுடன் கலந்தாலோசித்து, அதேபோல் ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ள குழந்தைகள் குறித்த மாநிலம் முழுவதுக்குமான புள்ளிவிவரத்தைக் கேட்டேன்.

எனக்குக் கிடைத்த புள்ளிவிவரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். உடல் வலிமை இருந்தால்தான் உள்ள வலிமையும் இருக்கும். சிறப்பான எதிர்காலமும் அமையும். எனவே ஊட்டச்சத்து வழங்க ஒரு திட்டத்தை உருவாக்கச் சொன்னேன்.

‘ஏற்றமிகு ஏழு திட்டங்கள்’ என கடந்த மார்ச் 1-ஆம் நாள் வந்த நாளிதழ்களில் செய்தியைப் பார்த்திருப்பீர்கள். அந்த ஏழு திட்டங்களில் ஒன்றுதான், ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டம்!

ஆறு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் அது. கடந்த ஓராண்டு காலத்தில் சுமார் 10 இலட்சம் குழந்தைகள் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு, அதில் சுமார் 92 ஆயிரம் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாடுடன் இருப்பதாகக் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த சிறப்பு உணவுப்பொருட்கள் அளிக்கப்பட்டதன் வாயிலாக சுமார் 62 ஆயிரம் குழந்தைகள் தங்களது ஊட்டச்சத்து நிலையில் நல்ல முன்னேற்றத்தை அடைந்துள்ளனர். அதில் சில குழந்தைகளை கோட்டைக்கு அழைத்து வரச் சொல்லி சந்தித்தேன்.

நான்கு வயது வருண் - இரண்டு வயது நுசாய்பா - இரண்டரை வயது சாய்திரன் ஆகியோரை என்னிடம் அழைத்து வந்திருந்தார்கள். மிக மிக ஆரோக்கியமாக இந்த குழந்தைகள் வளர்ந்து வருவதை நான் அறிந்தேன். இவர்களைப் பார்க்கும்போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

இந்தத் திட்டத்தின்கீழ் பிறவியிலேயே குறைபாடுகள் கொண்ட 3,038 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, தற்போது அவர்கள் நலமாக உள்ளனர்.

இதுபோலவே, ஆறு மாதம்வரை உள்ள குழந்தைகளின் பாலூட்டும் தாய்மார்களுக்கெனச் சிறப்பு கூடுதல் சத்துணவு அளிக்கப்பட்டதால், சுமார் 14 ஆயிரம் குழந்தைகள் நல்ல முன்னேற்றத்தை அடைந்துள்ளனர்.  இந்தத் திட்டம் ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் குறித்து இளம் தாய்மார்களுக்கிடையே நல்லதொரு தாக்கத்தை உருவாக்கியுள்ளது.

அடுத்து என்னுடைய கனவுத் திட்டமான, ‘நான் முதல்வன்’ திட்டத்தை நீங்கள் அறிவீர்கள். மக்களாகிய நீங்கள்தான் என்னை முதலமைச்சராக்கினீர்கள். நான் முதல்வராக இருந்தாலும், என்னை முதலமைச்சராக்கிய உங்கள் ஒவ்வொருவருடைய வீட்டிலும் உள்ள பிள்ளைகள் தங்கள் திறனை மேம்படுத்தி, நான் முதல்வன் என்று சொல்லக்கூடிய வகையிலே சிறந்து விளங்க வேண்டும் என்பதுதான் என் எண்ணம்.

இந்தத் திட்டத்தின்கீழ் கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் 13 லட்சம் மாணவர்களுக்கு வெற்றிகரமாக பயிற்சி அளிக்கப்பட்டு அதில் மூன்றரை இலட்சத்திற்கும் மேலான மாணவர்கள் பல்வேறு பணிகளில் அரசின் உதவியுடன் சேர்க்கப்பட்டுள்ளனர். திறன் மிகுந்த ஒரு தலைமுறையை உருவாக்குவதும், அதற்கேற்ற பணி வாய்ப்புகளை அவர்கள் பெறுவதும்தான் எனக்கு முழுமையான மகிழ்ச்சியைச் தருகிறது.

இந்தத் திட்டத்தினை மேலும் விரிவுபடுத்தும் வகையில் இன்னொரு முன்னெடுப்பை இந்த விடுதலை நாளில் அறிவிக்கிறேன். தாய்நாட்டிற்காகத் தங்களுடைய இளம் வயதை நாட்டின் எல்லையில் இராணுவப் பணியில் கழித்து, பணிக்காலம் நிறைவுபெற்று திரும்பும் முன்னாள் ராணுவத்தினர் பயன்பெறும் வகையில், சுமார் ஏழு கோடி ரூபாய் மதிப்பீட்டில் 10 ஆயிரம் நபர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கி, திறனை மேம்படுத்தவும், அவர்கள் உரிய பணியில் அமரும் வரையில் தக்க உதவி செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

“வேற்றுமையை விதைக்கும் சக்திகளை வேரோடு சாய்ப்போம்..” : சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் ஆற்றிய முழு உரை!

சென்னை போன்ற பெருநகரங்களில் தொடங்கி, பல்வேறு நகரங்களிலும் இன்று நாம் அடிக்கடி காணக்கூடிய காட்சி ஒன்று. ஓலா, ஊபர், ஸ்விகி, ஸொமட்டோ போன்ற நிறுவனங்களைச் சார்ந்த வாகனங்கள் விரைவாக சேவை வழங்கும் நோக்கத்துடன் பயணிப்பதைக் காணலாம்.

நேரத்தின் அருமை கருதி பணிபுரியும் இத்தகைய பணியாளர்களின் வாழ்க்கை முக்கியமானது. அவர்களின் ஒட்டுமொத்த நலனைப் பாதுகாக்கும் வகையில், அவர்களுக்கென தனியே நல வாரியம் ஒன்று அமைக்கப்படும் என்பதையும் இன்று அறிவிக்கிறேன்.

ஆட்டோ ஓட்டுநர்களாகப் பணிபுரியும் பெண்கள் புதிதாக ஆட்டோ வாங்குவதற்கென ஒரு லட்சம் ரூபாய் மானியம் வழங்கும் திட்டம் ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டு வருகிறது.  இந்தத் திட்டத்தின்கீழ் 141 பேர் பயனடைந்துள்ள நிலையில், தற்பொழுது மேலும் 500 மகளிர் பயன்பெறும் வகையில் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும். மேலும், ஆட்டோ ஓட்டுநர்களாகப் பணிபுரியும் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இந்தத் திட்டம் விரிவுப்படுத்தப்படும்.

அதுமட்டுமல்ல, சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள செங்காந்தள் பூங்காவிற்கு அருகில் உள்ள 6.09 ஏக்கர் நிலத்தில் 25 கோடி ரூபாய் செலவில் “கலைஞர் நூற்றாண்டு பூங்கா” ஒன்று அமைக்கப்படும் என்பதையும் மிகுந்த மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன்.

திட்டங்கள் இல்லாத நாளே இல்லை என சொல்லக்கூடிய வகையில், அரசு அறிவிக்கும் திட்டங்களை கடைக்கோடி மக்களிடமும் கொண்டு போய் சேர்க்கின்ற பெரும் பொறுப்பை ஏற்றிருப்பவர்கள் அரசு ஊழியர்கள். ஆட்சி சக்கரம் சுழல்வதற்கு அவர்களே காரணமாக இருக்கிறார்கள். அந்த சக்கரம் வேகமாக சுழல்வதும், மெதுவாக சுழல்வதும் அரசு ஊழியர்களின் கைகளில்தான் உள்ளது. அந்தக் கைகள் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும். அப்போதுதான் வேகம் அதிகமாகும் என்பதை எப்போதும் உணர்ந்திருப்பது திராவிட மாடல் அரசு.

எனவே, நடப்பாண்டுகளில் பல்வேறு துறைகளைச் சார்ந்த சுமார் 55 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப இருக்கிறோம் என்ற மகிழ்ச்சியான செய்தியை இந்த விழாவில் அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.  அனைவருக்குமான அரசு என்பதன் அடையாளமாக இதுபோன்ற திட்டங்களைச் சிந்தித்து சிந்தித்து செயல்படுத்தி வருகிறோம்.

எட்டுக் கோடி மக்களும் ஏதாவது ஒரு விதத்தில் பயனடையும் ஆட்சியை நமது அரசு வழங்கி வருகிறது.

கல்வி, பொருளாதாரம், மருத்துவம், வேளாண்மை, ஏற்றுமதி, திறன்மிகு மனித ஆற்றல் ஆகிய அனைத்து வகையிலும் தமிழ்நாடு சிறப்பான பங்களிப்பை இந்திய நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் வழங்கி வருகிறது.

எல்லார்க்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் அரசின் சமூகநீதி நிர்வாக ஆட்சி முறை இந்தியா முழுமைக்குப் பரவுமானால், அதை விட மகிழ்ச்சியான செய்தி எதுவும் இருக்க முடியாது.

கூட்டாட்சி இந்தியாவில் இணைந்திருக்கும் மாநிலங்கள் சுயாட்சி உரிமை கொண்டதாகச் செயல்பட வேண்டும் என்று பேரறிஞர் அண்ணாவும் தலைவர் கலைஞரும் தொடர்ந்து குரல் எழுப்பி வந்தார்கள். மக்களுக்கு நேரடித் தொடர்பு கொண்ட அனைத்தும் மாநிலப்பட்டியலில் இணைக்கப்பட வேண்டும். குறிப்பாக கல்வி, மாநிலப்பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும்.

அதைச் செய்தால்தான் நீட் போன்ற கொடூரமான தேர்வு முறை முற்றிலுமாக அகற்றப்பட முடியும். மாநிலங்கள் ஒருங்கிணைந்த நம் இந்திய நாடு பல்வேறு இனம் - மொழி - மதம் - பண்பாடு கொண்ட மக்கள் அனைவரது வளர்ச்சியையும் கொண்டதாக வளர வேண்டும்.

சமூகநீதி - சமத்துவம் - சகோதரத்துவம் – சமதர்மம் - மதச்சார்பின்மை - ஒடுக்கப்பட்டோர் நலன் ஆகிய மிக உயர்ந்த கோட்பாடுகள் கொண்ட இந்தியாவை அமைப்பதுதான் இந்திய விடுதலைக்காகப் போராடிய தியாகிகளுக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும். அத்தகைய சமத்துவ, சமதர்ம, சமூக நீதி இந்தியாவை அமைப்பதுதான் இந்திய விடுதலைக்காகப் போராடிய தியாகிகளுக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.

ஒற்றுமையால் கிடைத்த விடுதலையை அதே ஒற்றுமையால் காப்போம். வேற்றுமையை விதைக்கும் சக்திகளை வேரோடு சாய்ப்போம். நாம் இந்தியர்கள் என்ற பெருமையுடன் நம் இந்தியாவை நேசிக்கும் அனைவருக்கும் விடுதலை நாள் நல்வாழ்த்துகள்.

தியாகிகள்  புகழ் வாழ்க! தீரர்கள் புகழ் வாழ்க! வாழ்க தமிழ்! வளர்க இந்தியா! நன்றி! வணக்கம்!

banner

Related Stories

Related Stories