புதுச்சேரியில் இருந்து கோவை நோக்கி தனியார் சொகுசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 29 பேர் பயணம் செய்துள்ளனர். இந்தப் பேருந்து இன்று அதிகாலை கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே காளசமூத்திரம் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் பேருந்தில் தூங்கிக் கொண்டிருந்த பயணிகள் விபத்தில் சிக்கியுள்ளனர். இதில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் பேருந்தின் வலது புறம் அமர்ந்திருந்த ஒரு பெண் உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல் துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கை,கால் இழந்த 7 பேர் மேல் சிகிச்சைக்காகச் சேலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலையில் சொகுசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.