தமிழ்நாடு

தொல்.திருமாவளவன் குறித்து சமூகவலைதளத்தில் அவதூறு பதிவு.. நாம் தமிழர் கட்சி நிர்வாகி கைது!

வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் குறித்து சமூகவலைதளத்தில் தொடர்ந்து அவதூறு கருத்துக்களைப் பதிவிட்டு வந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகியை போலிஸார் கைது செய்துள்ளனர்.

தொல்.திருமாவளவன் குறித்து சமூகவலைதளத்தில் அவதூறு பதிவு.. நாம் தமிழர் கட்சி நிர்வாகி கைது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை அடுத்த புழல் மாதனாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் லெனின் அன்பரசு. இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் முன்னாள் மாவட்ட துணை அமைப்பாளராக இருந்துள்ளார்.

இந்நிலையில், விடுதலைச் சிறுத்தை கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் குறித்துத் தொடர்ந்து அவதூறு கருத்துக்களை ஒருவர் சமூகவலைதளத்தில் பதிவிட்டு வருவதாகக் கொளத்தூர் மாவட்ட துணை ஆணையர் சக்திவேலிடம் புகார் அளித்துள்ளார்.

தொல்.திருமாவளவன் குறித்து சமூகவலைதளத்தில் அவதூறு பதிவு.. நாம் தமிழர் கட்சி நிர்வாகி கைது!

இந்த புகார் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் புழல் அடுத்த லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர்தான் தொல். திருமாவளவன் குறித்து அவதூறு கருத்துக்களைப் பதிவிட்டு வந்தது உறுதியானது. மேலும் இவர் மாதவரம் தெற்கு பகுதி நாம் தமிழர் கட்சி செயலாளராக உள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

இதனை அடுத்து போலிஸார் பன்னீர் செல்வத்தைக் கைது செய்தனர். பின்னர் மாதவரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். அவதூறு வழக்கில் நாம் தமிழர் கட்சி செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories