தமிழ்நாடு

“மேகதாது அணை கட்ட தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது..” : பழனிசாமிக்கு அமைச்சர் துரைமுருகன் பதிலடி!

தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்கவும், விவசாயத்திற்கு தடையின்றி நீர் வழங்க தேவையான எல்லா நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு எடுக்கும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

“மேகதாது அணை கட்ட தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது..” : பழனிசாமிக்கு அமைச்சர் துரைமுருகன் பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர் வழங்குவது மற்றும் மேகதாது அணை பிரச்சனை குறித்து எதிர்கட்சித் தலைவர் பழனிச்சாமி 2-7-2023 அன்று அளித்த செய்திகளுக்கு நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களின் பதில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அமைச்சர் துரைமுருகன் அறிக்கை பின்வருமாறு:-

காவிரி டெல்டா விவசாயிகளின் நலன் கருதி இவ்வாண்டும் ஜுன் 12 அன்று குறுவை சாகுபடிக்காக முதலமைச்சர் அவர்களால் மேட்டூர் அணை திறக்கப்பட்டு, தொடர்ந்து தேவைக்கேற்ப நீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் குறுவை சாகுபடியின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, இவ்வாண்டு ரூ.61.09 கோடி மதிப்பிலான குறுவை தொகுப்புத் திட்டத்தையும் மாண்புமிகு முதல்வர் அறிவித்துள்ளார்கள்.

டெல்டா பாசன விவசாயிகளும் சாகுபடி வேலைகளை முழு வீச்சாக செய்து வருகின்றனர் என்பதை அனைவரும் அறிவோம். விவசாயம் செய்வதற்குத் தேவையான நீர் அனைவருக்கும் சீராகக் கிடைப்பதற்கு ஏதுவாக கால்வாய்கள் முன்கூட்டியே தூர் வாரப்பட்டு நீர்ப்பங்கீடு செய்யப்பட்டு வருகிறது.

மேலும், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி கர்நாடகாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு கிடைக்கப்பெற வேண்டிய காவிரி நீரை பெறுவதற்கு தேவையான முயற்சிகளை அனைத்து மட்டங்களிலும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய நீரினை அளிக்குமாறு கர்நாடகாவிற்கு உத்தரவிடுமாறு காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் அவர்களை தமிழ்நாடு உறுப்பினர் மற்றும் அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர், நீர்வளத்துறை, 16.6.2023 அன்று நடந்த 21-ஆம் கூட்டத்தில் வலியுறுத்தினார். கர்நாடகாவிலிருந்து ஜூன் மாதத்தில் குறைவாக வழங்கப்பட்ட நீர் குறித்தும், ஜூன் 30 அன்று நடைப்பெற்ற காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் கவனத்திற்கு எடுத்துரைக்கப்பட்டது.

“மேகதாது அணை கட்ட தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது..” : பழனிசாமிக்கு அமைச்சர் துரைமுருகன் பதிலடி!

தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர், நீர்வளத்துறை, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் அவர்களுக்கு ஜூலை 3 அன்று எழுதிய கடிதத்தில், குறைபாட்டை நிவர்த்திக்கவும், ஜூலை மாதத்தில் அட்டவணைப்படி கர்நாடகா நீர் அளிக்க அறிவுறுத்தவும் கேட்டுக் கொண்டுள்ளார்கள். இவ்வாறு தமிழக அரசு விவசாயிகளின் பாசனத்திற்கேற்ப நீர் அளிக்க தேவையான எல்லா நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது

கர்நாடக அரசு அவ்வப்போது மேகதாது பிரச்சனையை எழுப்புவதை வழக்கமாக கொண்டுள்ளது. இது அரசியல் நிர்பந்தத்தினாலோ என்னவோ தெரியவில்லை. எவ்வாறு இருப்பினும் தமிழ்நாடு அரசு மேகதாது அணை கட்டுவதற்கு ஒருபோதும் அனுமதிக்காது. கர்நாடக துணை முதல்வர் திரு. சிவகுமார் அவர்கள் பதவி ஏற்றவுடன் மேகதாது அணை கட்டுவது குறித்து பேசிய செய்திக்கு உடனேயே நான் மறுப்புத் தெரிவித்திருந்தேன். அண்மையில் (30.6.2023 அன்று), கர்நாடக துணை முதல்வர் ஒன்றிய அரசின் நீர்வளத்துறை அமைச்சர் அவர்களை நேரில் சந்தித்தபோது மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி குறித்து பேசியுள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது.

இது வருந்தத்தக்கது. கர்நாடக அரசு உத்தேசித்துள்ள மேகதாது அணை திட்டம் உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு முரணானது. இத்திட்டம் குறித்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களை நேரில் சந்தித்தபோது (17.6.2021, 31.3.2022 மற்றும் 26.5.2022) மேகதாது அணை கட்டுவதற்கு ஒன்றிய அரசு ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தியுள்ளார்கள்.

நானும், ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரை சந்திக்கும்போதெல்லாம் (6.7.2021, 16.7.2021 மற்றும் 22.6.2022) இக்கருத்தை வலியுறுத்தியுள்ளேன். ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரும் தமிழ்நாட்டின் இசைவில்லாமல் மேகதாது அணை கட்டுவதற்கு அனுமதி வழங்கப்படாது எனக் கூறியுள்ளார்கள். இதற்கிடையே, தமிழ்நாடு அரசு இப்பிரச்சனை குறித்து தொடர்ந்துள்ள வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. தவிர, மேகதாது அணை திட்டம் குறித்த பொருள் பற்றி காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வலியுறுத்திய போதெல்லாம் தமிழ்நாடு அரசு மறுப்பு தெரிவித்ததை அடுத்து, 10.02.2023, 11.04.2023 மற்றும் 16.06.2023 நாட்களில் நடைபெற்ற ஆணையத்தின் கூட்டங்களில் இப்பொருள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. இத்திட்டம் தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது, வலுவான வாதங்களை முன் வைத்து கர்நாடகாவின் அணை கட்டும் முயற்சிகளை தமிழ்நாடு அரசு முறியடிக்கும்.

இவ்வாறு தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்கவும், காவிரி விவசாயப் பெருங்குடி மக்களின் நலன் கருதியும், இவ்வாண்டு விவசாயத்திற்கு தடையின்றி நீர் வழங்க தேவையான எல்லா நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு எடுக்கும். மேகதாது அணை பிரச்சனை குறித்தும் தக்க நடவடிக்கைகளை இவ்வரசு எடுக்கும் என்பது உறுதி. இப்பிரச்சனையில் நாம் அனைவரும் ஒற்றுமையாக செயல்படுவோம்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories