தமிழ்நாடு

“2024 தேர்தல் சமூக நீதிக்கான, சனாதனத்திற்கு எதிரான சமர்க்களம் ஆகும்” : சூளுரைத்த ஆசிரியர் கி.வீரமணி!

2024 மக்களவைத் தேர்தல் என்பது சமூகநீதிக்கான சனாதனத்தை எதிர்த்தொழிக்க வேண்டிய ஒன்று என திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

“2024 தேர்தல் சமூக நீதிக்கான, சனாதனத்திற்கு எதிரான சமர்க்களம் ஆகும்” : சூளுரைத்த ஆசிரியர் கி.வீரமணி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

30 நாள் தொடர் பிரச்சாரத்தில் பங்கு கொண்டு பரப்புரை மேற்கொண்ட திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி பயணம் வெற்றிக்கு ஒத்துழைப்பு தந்தவர்களுக்கு நன்றி தெரிவித்தும், 2024 மக்களவைத் தேர்தல் என்பது சமூகநீதிக்கான சனாதனத்தை எதிர்த்தொழிக்க வேண்டிய ஒன்று என்றும், அதற்காகக் கடுமையாக உழைப்போம் என்றும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து ஆசிரியர் கி. வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்ற பிப்ரவரி 3ஆம் தேதி (2023) அறிஞர் அண்ணா நினைவு நாளில் நமது அறிவு ஆசான் தந்தை பெரியார் பிறந்த மண்ணான ஈரோட்டில் நமது கொள்கைப் பயணப் பிரச்சாரம் - ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல் வேட்பாளர் நண்பர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரை மழையோடு துவங்கியது.

அதனைத் தொடர்ந்து 30 நாள்கள் - ஒவ்வொரு நாளிலும் இரண்டு கூட்டங்கள் - ஒன்று பெரு நகரம் - மற்றொன்று மய்ய பெரு கிராமம் போன்ற ஊர்களில் தொடர் பரப்புரைப் பயணமாக மிக வெற்றிகரமாக நடைபெற்றது. அவ்வெற்றிக்கு நமது திராவிடர் கழகப் பொறுப்பாளர் களின் குறையாத உழைப்பும், குன்றாத ஊக்கமும், மகிழ்ச்சி மங்காத மகத்தான வரவேற்புமே முக்கிய காரணம்.

அத்துடன் தி.மு.க. தலைமையிலே அமைந்துள்ள மதச்சார்பற்ற அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் தோழமைக் கட்சியினர், கட்சிகளுக்கு அப்பாற்பட்ட பகுத்தறிவாளர்கள், தமிழ் இன உணர்வாளர்கள், பெரியார் பற்றாளர்கள் எனப் பலரும் ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு நாளிலும் ஆர்வத்தோடும், ஆசையோடும் தங்குமிடத்தில் வந்து நம்மை சந்தித்து வாழ்த்துத் தெரிவித்து, உடல் நலம் பற்றிய கவலை யையும், விழைவையும் தெரிவித்து உற்சாகப்படுத்தி, பயணக் களைப்பைக் காணாமற் போகச் செய்து, ஒவ்வொரு நாளிலும் புத்துணர்வை ஏற்படுத்தி வயதை விரட்டிய புத்தாக்க புதுமுறுக்கை எனக்குத் தந்தனர்!

நீண்ட தொடர் பயணம் புறப்படும் முன்பே, சமூகநீதிக்கான சரித்திர நாயகர் நமது மானமிகு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், நாமே சற்றும் எதிர்பாராது எம் பயணத்தை வாழ்த்தி, உளமாற, உடல் நிலையிலும் கவனம் இருக்கட்டும் என்ற ஆக்கப்பூர்வ அறிவுரையை அவர்கள் விடுத்து, இந்த ‘திராவிட மாடல்’ சாதனை விளக்க சமூக நீதிப் பயணம் வெற்றி பெற வாழ்த்துகளைத் தெரிவித்து பாசத்துடன் அன்பைப் பொழிந்தார்!

நம் மக்கள் - கட்சி வேறுபாடின்றி நமக்கு அளித்த பேராதரவு, பெருந்திரள் கூட்டம் மூலம் வெளிப்பட்டது. நாளும் இரண்டு கூட்டங்கள் - அதுவும் பல கிலோ மீட்டர் இடைவெளியில் - சாலைகள் பல ஊர்களில் செப்பனிடப்பட்டு வருவதால் ஆங்காங்கே வேகத் தடைகள் (வேண்டிய பணிதான் என்றாலும்) நம் பயண வேகத்தைக் குறைக்கவில்லை.

முதல் கூட்டம் மாலை 4.30 மணி முதல் 5 மணிக்குத் தொடங்கி, ஒரு முக்கிய பேச்சாளர் பேசிடும் வரை மேடைக்குச் சென்றவுடன், பொது மக்கள் கூட்டம் பெரும் அளவில் மேடையை முற்றுகையிட்டு, நேரம் ஆக ஆக பல நூற்றுக்கணக்கில் - பல ஊர்களில் ஆயிரக்கணக்கில் கூடிக் கொண்டே சென்றதால், நாமும் நம்மை மறந்து ஒவ்வொரு கூட்டத்திலும் சராசரியாக 40 - 45 மணித் துளிகளுக்குக் குறையாமல் சொற்பொழிவு ஆற்றியும், 2 மணி நேரத்திற்குக் குறையாமல் மேடையில் உட்கார்ந்து, மாலை, சால்வை, பொன்னாடை, புத்தகங்களை எழுந்து எழுந்து வாங்கியும் ஒருவகை உடற்பயிற்சி செய்ததுபோல ஆயிற்று!

25 நிமிடங்கள் ஆனவுடன் எனக்கு ‘சீட்டு‘ எழுதிக் குறிப்பால் நேரம் ஆகிவிட்டது என்பதை நினைவூட்டுவார்கள்! நான் அதில் தோழர்களுடன் “ஒத்துழையாமை”யையே கடைப்பிடித்து, காட்டாறுப் போல் பாய்ந்து வந்த பேச்சினை - மக்கள் வெள்ளத்தின் மகத்தான வரவேற்பு அலையினைக் கட்டுப்படுத்த மெத்தச் சிரமப்பட்டு, “பிரேக்கில்‘ காலை வைத்து வண்டியை நிறுத்தி,

“மற்றொரு முறை தனியே ஒரு தேதி கொடுத்து உங்கள் ஊரில் வந்து பேசுவேன்” என்று தேர்தல் விதியின் உத்தரவாதம் போல் வழங்கிவிட்டு, மேடையிலிருந்து மக்கள் கடலில் நீந்தி வந்து வேனில் சென்று அமர்ந்து பயணம் தொடர்வேன். பயணம் முடிந்துவிட்ட பிறகு, ‘அப்பாடி’ என்று பெருமூச்சடைய, அடுத்தப் பயணம் எப்போது என்ற ஆர்வம் இசைபாடும் நிலையில் நாங்கள் அனைவரும் சோர்வற்றவர்களாக மாறிடுவோம்!

உடன் வந்த உற்ற தோழர்கள் காவல்துறையின் பாதுகாப்பு போற்றத்தக்கது அனைவருக்கும் நன்றி! உடன் வந்த 25 தோழர்கள் அனைவருக்கும் சிறப்பான விருந்தோம்பல் - கழகப்பொறுப்பாளர்களால் தரப்பட்டது! காரணம் நமது கொள்கை உறவு, குருதி உறவைவிட மிக கெட்டியானது அல்லவா! காவல்துறையினரின் பாதுகாப்புக் கடமை பாராட்டத்தக்கது. (ஒரு சில ஊர்களில் ‘காவி மனப்பான்மை’ தலை நீட்டியதும் உண்டு).

6,478 கி.மீ. பயணம் பரப்புரை

சுமார் 6,478 கிலோ மீட்டர் சாலைப் பயணத்தில் ஈரோட்டுப் பாதை மேலும் செப்பனிடப்பட்டு, முதல் அமைச்சர் மாண்பமை மு.க.ஸ்டாலின் அவர்களது ‘திராவிட மாடல்’ ஆட்சியின் சாதனைகளை திக்கெட்டும் பரப்பி நம் மக்களிடையே ஏற்படுத்திய விழிப்புணர்வு. முகிலைக்கிழித்த முழு மதிப் பணியாக நம் முன்னே நாளையும் இருக்கிறது; காரணம் நாம் சந்திக்கும் சனாதனக் காவி கொள்கை எதிரிகள் - கொடிய விஷம் போன்ற செடிகள்.

2024 மக்களவைத் தேர்தல் எத்தகையது?

2024இல் நடைபெற இருப்பது வெறும் தேர்தல் அல்ல - அது ஒரு சமூக நீதிக்கான - சனாதனத்திற்கு எதிரான - சமர்க்களம் என்பது மிகையல்ல. அதற்கு முன்னோட்டமே - அச்சாரப்பயணமே எம் பயணம். 6,478 கி.மீ. பயணம் பரப்புரை. பிரச்சாரப் புத்தகங்கள் மூலம் வரவு 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய்! - மக்கள் ஆதரவுக்கான அடையாளம்!

ஆதரவு தந்து, உடன் உழைத்தவர்கள் உள்பட அனைவருக்கும் நமது தலைதாழ்ந்த, உளப்பூர்வ உறுதிமிக்க வணக்கமும் - நன்றியும்.... மேலும் உழைப்போம், ஆயத்தமாவீர்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories