தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (17.11.2022) வலது கால் அகற்றப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கால்பந்தாட்ட வீராங்கனை செல்வி பிரியாவின் இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ரவிக்குமார் – உஷா ராணி ஆகியோரது மகளான செல்வி பிரியா, சென்னை இராணிமேரிக் கல்லூரியில் முதலாமாண்டு உடற்கல்வி இளங்கலைப் பட்டப்படிப்பு படித்து வந்தார். இவருக்கு மூட்டு ஜவ்வு பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை அன்று உயிரிழந்தார்.
முதலமைச்சர் இன்று, அம்மாணவியின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது பெற்றோருக்கும், குடும்பத்தாருக்கும் ஆறுதல் தெரிவித்து, நிவாரண தொகையாக ரூபாய் 10 லட்சத்திற்கான காசோலையினை வழங்கினார். அம்மாணவியின் பெற்றோரிடம் உங்களுக்கு ஆதரவாக என்றும் நாங்கள் இருப்போம் என்றும், உங்களின் தேவைகள் குறித்து எப்போது வேண்டுமானாலும் என்னிடம் தெரிவிக்கலாம் என்று ஆறுதல் கூறினார்.
மேலும், அம்மாணவியின் சகோதரருக்கு தேசிய நலவாழ்வு குழுமத்தில் டேட்டா எண்ட்ரி ஆப்ரேட்டர் (Data Entry Operator) பணிக்கான ஆணையினையும், அவர்கள் குடியிருக்க தமிழ்நாடு நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் கௌதமபுரம் திட்டப்பகுதியில் குடியிருப்பிற்கான ஆணையினையும் முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.
மேலும் இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “கால்பந்தாட்ட வீராங்கனை ப்ரியாவின் மரணம் தாங்க முடியாத துயரம்! ஏற்றமிகு உயரத்தை எட்டவிருந்த திறமைசாலியான அவரது இழப்பு, அவரது குடும்பத்துக்கும் - நம் மாநில விளையாட்டுத்துறைக்கும் ஏற்பட்ட மாபெரும் இழப்பு!
அவரை இழந்து வாடும் குடும்பத்தினர்க்கு அரசு அனைத்து வழிகளிலும் உதவியாய் நிற்கும். இவை அனைத்தும் ப்ரியாவின் உயிர்க்கு ஈடாகாது.” எனத் தெரிவித்துள்ளார்.