புதுச்சேரி மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் சிறப்பு மாநாடு கம்பன் கலை அரங்கத்தில் நடைபெற்றது. மாநாட்டில் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்த விழாவில் பேசிய சீத்தாராம் யெச்சூரி, “மத்தியிலும் மாநிலத்திலும் பா.ஜ.க கூட்டணி இருப்பது, இரட்டை ரயில் என்ஜின் போன்றது. பா.ஜ.க உள்ள இடங்களில் எந்த வளர்ச்சியும் ஏற்ப்படவில்லை. இதற்கு உதாரணம் உத்திர பிரதேசம்தான்.
மொழி பிரச்சினையில் இந்திதான் வேண்டும் என ஒன்றிய அரசும், தாய் மொழி தான் வேண்டும் என மாநில அரசு வலியுறுத்துகிறது. இதுவே இரட்டை ரயில் என்ஜினுக்கு உதாரணம். பள்ளி கல்வி என்பது மாநில அரசாங்கத்திற்கு உட்பட்டது. எந்த மாநில அரசாங்கத்தையும் கலந்து ஆலோசிக்காமல் புதிய கல்வி கொள்கையை பா.ஜக அரசு அமல்படுத்த உள்ளது.
இது அவர்களின் பாசிசத்தை காட்டுகிறது. புதிய கல்வி கொள்கையை மார்க்ஸிட் கம்யூனிஸ்ட் தடுத்து நிறுத்தும்” என உறுதிபட சீத்தாராம் யெச்சூரி தெரிவித்தார். இதைத்தொடர்ந்து பேசிய அக்கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், “சென்னை ஆளுநர் மாளிகை தமிழக பா.ஜ.க அலுவலகமாக செயல்படுகிறது. துணை குடியரசுத் தலைவர் ஆகலாம் என கிரன்பேடி செயல்பட்டார்.
ஆனால் அவர் வேலை முடிந்தயுடன் கிள்ளுக்கீரை போல் மோடி மற்றும் அமித்ஷாவால் தூக்கி விசப்பட்டார். தற்போது அவர் இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறார். இதே நிலைமை தான் நாளை தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி, மற்றும் கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் ஆகியோருக்கு ஏற்ப்படும் என பேசினார்.