புதுச்சேரியில் உள்ளுர் தொலைகாட்சி சேனல் ஒன்றில் கடந்த ஜூலை 1-ம் தேதி கம்போடியா நாட்டில் ரூ.1 லட்சம் ஊதியத்தில் டெலிகாலர் வேலைவாய்ப்பு இருப்பதாக முதலியார்பேட்டையைச் சேர்ந்த முருகன் (48) என்ற முகவர் விளம்பரம் செய்திருந்தார்.
இதைப் பார்த்த 25 வயது பெண் ஒருவர், முருகனை அணுகி வேலை கேட்டுள்ளார். இதற்கு சென்னையைச் சேர்ந்த ராஜ்குமார் உதவியுடன் முருகன், விசா மற்றும் கமிஷன் தொகையுடன் ரூ.3.25 லட்சம் தர வேண்டுமென பேரம் பேசியுள்ளார். இதனை நம்பி அப்பெண், முருகனிடம் பணம் கொடுத்துள்ளார். ஆனால் அப்பெண்ணை கம்போடியா நாட்டுக்கு சுற்றுலா விசாவில் அனுப்பி, அங்கு ஒரு நிறுவனத்தில் டெலிகாலர் வேலைக்குப் பதிலாக சட்டவிரோத வேலைகளில் ஈடுபடக் கூறியதாக தெரிகிறது.
இதற்கு அப்பெண் மறுத்ததால், அந்த நிறுவனத்தின் மேலாளர் உட்பட இருவர் சேர்ந்து அப்பெண்ணை விலைகொடுத்து வாங்கியதாகவும், சட்டவிரோத வேலைகளை செய்யாவிடில் பாலியல் தொழில் செய்ய வேறு ஒருவரிடம் விற்றுவிடுவோம் என மிரட்டி, தனி இடத்தில் அடைத்து வைத்து, அடித்தும், எலக்ட்ரிக் ஷாக் கொடுத்தும் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.
வேறொரு இந்தியரின் உதவியால் அப்பெண் அங்கிருந்து தப்பித்து இந்தியா வந்துள்ளார். தொடர்ந்து நடைபெற்று சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண், புதுச்சேரி டி.ஜி.பி-யிடம் புகாரளித்தார். இதன் மீது சி.பி.சி.ஐ.டி போலிஸார் வழக்குப் பதிந்து, முதலியார்பேட்டையைச் சேர்ந்த முகவர் முருகனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் பண மோசடியில் ஈடுபட்ட நபரை கைது செய்து மேலும் யாரேனும் பாதிக்கப்பட்டுள்ளனரா? என சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.