
தமிழர் பண்பாட்டின் தொன்மையையும் சிறப்பையும், உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் முயற்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறது.
அகழாய்வு பணிகள் மூலம் தமிழர் நாகரிகத்தை உலகத்திற்கு எடுத்து சொல்வது மட்டுமல்லாமல், இந்த தலைமுறையும் அதை உணர்ந்து தெளிவு பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அருங்காட்சியகத்தை அமைத்து வருகிறது தமிழ்நாடு அரசு.
மதுரைக்கு பக்கத்தில் கீழடி அகழ்வாய்வு கண்டுபிடிப்புகளைக் கொண்டு கீழடி அருங்காட்சியகத்தை மிகவும் கம்பீரமாக உருவாக்கி தமிழர்களின் கம்பீரத்தை வெளிப்படுத்தியுள்ளார் நமது முதலமைச்சர்.
இதனைத் தொடர்ந்து பொருநை ஆற்றங்கரையின் முக்கியமான இடங்களில் தமிழ்நாடு தொல்லியல் துறை விரிவாக நடத்திய அகழாய்வுகளில், ஏராளமான சான்றுகள் வெளியே கொண்டுவரப்பட்டது.
அதேபோல் ஆதிச்சநல்லூர், சிவகளையில் நடத்தப்பட்ட அகழாய்வுகளில் –வெண்கலம், தங்கம், செம்பு, இரும்பு என்று பல்வேறு உலோகங்களால் செய்யப்பட்ட தொல்பொருட்கள் வெளிக்கொண்டு வரப்பட்டு இருக்கிறது. இதில் குறிப்பாக, இரும்பை உருக்கி கருவிகளை செய்யும் தொழில்நுட்பம் தமிழ்நாட்டில்தான் சிறப்பாக இருந்திருக்கிறது.
கீழடியை தொடர்ந்து, பொருநை அருங்காட்சியகத்தை அண்மையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவந்தார்.
இதனைத் தொடர்ந்து, தென்னிந்தியாவின் பெரும் பகுதிகளை ஆண்ட சோழப் பேரரசின் பங்களிப்பைப் போற்றவும், அக்கால கலைப்பொருட்களைப் பாதுகாக்கும் வகையில் ரூ.51 கோடியில் தஞ்சை மாநகரில் மாபெரும் சோழ அருங்காட்சியகம் அமைக்க தமிழ்நாடு அரசு டெண்டர் வெளியிட்டுள்ளது.
முன்னதாக தஞ்சாவூரில் ஒரு மிகப்பெரிய சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிப்பிக்கப்பட்டது. அதற்கான பணிகளை தற்போது தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது.






