தமிழ்நாடு

“மக்களின் கல்வி, நல்வாழ்வு தேவைகளை செயல்படுத்த எங்களை ஒப்படைத்துள்ளோம்” : முதல்வர் நெகிழ்ச்சி பேச்சு !

இந்தியாவிலேயே நமது மாநிலம்தான் மாற்றுத்திறனாளி மாணவ - மாணவியருக்கு ஏராளமான திட்டங்களைத் தீட்டி வருகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“மக்களின் கல்வி, நல்வாழ்வு தேவைகளை செயல்படுத்த எங்களை ஒப்படைத்துள்ளோம்” : முதல்வர் நெகிழ்ச்சி பேச்சு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

"இல்லம் தேடிக் கல்வி, மக்களைத் தேடி மருத்துவம், நான் முதல்வன், கல்லூரிக் கனவு ஆகிய திட்டங்களின் மூலமாக மக்களின் கல்வி, நல்வாழ்வு ஆகிய தேவைகளை முழுமையாகச் செயல்படுத்த எங்களை ஒப்படைத்துக் கொண்டிருக்கிறோம்" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (25.07.2022) சென்னையில் நடைபெற்ற அமர் சேவா சங்கத்தின் 40ஆவது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு ஆற்றிய உரை பின்வருமாறு :- முதலில் அமர் சேவா சங்கத்தின் நிறுவனத் தலைவராக இருக்கும் நம்முடைய மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய பெரியவர் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு எனது அன்பான வாழ்த்துக்களை மிகுந்த பெருமையோடு, மகிழ்ச்சியோடு உங்கள் அனைவரின் சார்பில் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

மாற்றுத் திறனாளிகளுக்கான மறுவாழ்வுக்காக அவர் ஆற்றி வரும் பணி மிக மகத்தான பணி. அவர் தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்த சோதனைகளை வேறு ஒரு மனிதனாவது சந்தித்திருந்தால், நிச்சயமாக அவர்கள் வீட்டுக்குள்ளே தான் முடங்கியிருந்திருப்பார்கள்.

“மக்களின் கல்வி, நல்வாழ்வு தேவைகளை செயல்படுத்த எங்களை ஒப்படைத்துள்ளோம்” : முதல்வர் நெகிழ்ச்சி பேச்சு !

ஆனால் ராமகிருஷ்ணன் லட்சத்தில் ஒருவராக, கோடியில் ஒருவராக மதிக்கக் கூடிய மனதைரியம் உள்ளவர் என்பதன் காரணத்தால்தான், தனக்கு ஏற்பட்ட சோதனையை சாதனையாக மாற்றிக் காட்டிய பெரியவர் நம்முடைய ராமகிருஷ்ணன் அவர்கள். தன்னைப் போல சோதனைகளை எதிர்கொண்டவர்களையும் வெற்றியாளர்களாக மாற்றிக் காட்டிய பெருமையும் அவருக்கு உண்டு.

உடல்நலனும் உடலுறுதியும் கொண்ட அவர், கடற்படை அதிகாரிக்கான உடற்தேர்வின் போது முதுகுத் தண்டில் அடிபட்டு, கழுத்தில் காயம் ஏற்பட்டு இத்தகைய நிலையை அடைந்தவர் அவர். கழுத்துக்குக் கீழே உணர்வுகள் செயல்படாத தன்மையை எதிர்கொண்டார். மும்பையில் சிகிச்சையும் மேற்கொண்டார். சிகிச்சையோடு தன்னம்பிக்கையையும் உடலுறுதியையும் மன உறுதியையும் பெற்றார்!

1981- ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான பள்ளியை ஆயக்குடியில் தொடங்கி இருக்கிறார் அய்யா ராமகிருஷ்ணன் அவர்கள். அதேபோல் சங்கர்ராமன் அவர்களும் தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர். அவர் இந்த நிறுவனத்துடன் 1992- ல் சேர்ந்தார். இருவரது கவனிப்பில் இன்று ஏராளமான குழந்தைகள் மறுவாழ்வு பெற்று வருகிறார்கள் என்பதை அறியும்போது நான் உள்ளபடியே மகிழ்ச்சி அடைகிறேன். அதற்கு ஈடு இணை எதுவும் இருக்க முடியாது.

ஒரு சிறிய இடத்தில் தொடங்கிய இந்த மையம் இன்று 30 ஏக்கர் நிலத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மாற்றுத் திறனாளிகளுக்கான மையமாக மட்டுமில்லாமல், மனிதாபிமானத்தோடு செயல்படக்கூடிய ஆயக்குடி நிறுவனத்தை இங்கிருந்தபடியே நான் வணங்குகிறேன், மதிக்கிறேன், போற்றுகிறேன். உங்களது தொண்டு சிறக்க வேண்டுகிறேன்.

இன்றைய நாள் இரண்டு மகத்தான முக்கிய நிகழ்வுகளை நான் தொடக்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

* தமிழ்நாடு அரசின் மாற்றுத் திறனாளிகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டமானது, 'அனைவருக்கும் கல்வி இயக்கம்' என்ற திட்டத்துடன் இணைந்து 3 முதல் 18 வயதுக்கு உட்பட்ட அனைத்து மாற்றுத்திறனாளி பிள்ளைகளுக்கும் சேர்ந்து ஒரு திட்டத்தை தொடங்கியிருக்கிறது.

“மக்களின் கல்வி, நல்வாழ்வு தேவைகளை செயல்படுத்த எங்களை ஒப்படைத்துள்ளோம்” : முதல்வர் நெகிழ்ச்சி பேச்சு !

இதனை அமர் சேவா சங்கத்துடன் இணைந்து செயல்படுத்தும் நோக்கில் இந்த நிகழ்ச்சியின் மூலம் நாம் தொடங்கி வைத்திருக்கிறோம்.

தரமான கல்வி - பெண் கல்வி திறன் மேம்பாடு - விளையாட்டுக் கல்வி - உடல் கல்வி - ஆகியவற்றில் மாற்றுத் திறனாளி மாணவ மாணவியரை முழுமையாக ஈடுபடுத்தக்கூடியத் திட்டம் தான் இது.

இந்தியாவிலேயே நமது மாநிலம்தான் மாற்றுத்திறனாளி மாணவ - மாணவியருக்கு ஏராளமான திட்டங்களைத் தீட்டி வருகிறது என்பதை நீங்கள் எல்லாம் நன்கு அறிவீர்கள். அந்த வகையில் இப்போது தொடங்கப்பட்டுள்ள திட்டம் மிகமிக ஒரு முன்னோடித் திட்டம்.

இரண்டாவது நிகழ்வாக, அமர் சேவா சங்கத்தின் நாற்பதாம் ஆண்டை முன்னிட்டு ஆண்டு மலர் வெளியிடும் நிகழ்ச்சி.

மரியாதைக்குரிய ராமகிருஷ்ணன் - சங்கர்ராமன் ஆகியோரால் இன்று வளர்த்தெடுக்கப்பட்டு வரும் இந்த அமர்சேவா சங்கமானது 1981 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இன்று நாற்பது ஆண்டுகளைத் தொட்டுள்ளது.

ஏழை எளிய மக்களின் நலனிற்காக குறிப்பாக, மாற்றுத்திறனாளிகளுக்கு நம்பிக்கை ஒளி பாய்ச்சிடும் ஒரு சிறந்த நிறுவனமாக இது செயல்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளின் வாழ்வினை மேம்படுத்தி அவர்களின் பொருளாதார நிலையில் சுய சார்புடன் இருப்பதற்குத் தேவையான திறன் மேம்பாட்டுடன் கூடிய வேலைவாய்ப்புக் கல்வி அளித்து வருகிறது. அவர்கள் நம்பிக்கையுடன் சமுதாய நீரோட்டத்தில் சமநிலை மற்றும் சமவாய்ப்புடன் இணைந்திடும் வகையில் செயல்புரிந்து வருகிறது. அமர் சேவா சங்கமானது கிட்டத்தட்ட 900 கிராமங்களில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வு மேம்பட கிராமம் சார்ந்த மறுவாழ்வுத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

செயலி மூலம் குழந்தைகளுக்கான ஆரம்பகால குறைபாடுகளைக் கண்டறிந்து பயிற்சி அளிக்கும் திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறீர்கள். இதுபோன்ற புதுமையான, ஆக்கப்பூர்வமான திட்டங்களோடு சுமார் 16,000 மாற்றுத்திறனாளிகளுக்கு திறன் மேம்பாட்டுப்பயிற்சி மற்றும் ஒருங்கிணைந்த கல்வியினை அளித்து நமது சமுதாயத்தில் அவர்களையும் ஒன்றிணைக்கும் வகையிலே ஆற்றல்மிகு செயல்புரிந்து வருவது மிகவும் பாராட்டுதலுக்குரியது.

கிராமப்புறங்களில் வளர்ச்சிக் குறைபாடு உடைய குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களின் இல்லம் தேடிச் சென்று அந்த குழந்தைகளுக்கான ஆரம்பகாலப் பயிற்சியும், பெற்றோருக்கான வழிகாட்டுதல்களையும் அமர் சேவா சங்கம் வழங்கி வருவதை அறிந்து நான் பாராட்டுகிறேன். அந்த வகையில் 3000- க்கும் மேற்பட்டவர்கள் இப்பயிற்சி பெற்றுள்ளதை அறிந்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். உங்களது தொண்டு மேலும் மேலும் தொடரட்டும் என்று நான் வாழ்த்துகிறேன்.

அமர் சேவா சங்கத்தின் இத்தகைய ஆக்கபூர்வமான பணிகளுக்கு நமது அரசு தேவையான உதவிகளை நிச்சயமாக, உறுதியாக செய்யும் என்ற உறுதியை நான் தருகிறேன்.

அமர் சேவா சங்கம் நமது அரசின் வழிகாட்டுதலோடும், துணையோடும் தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய நான்கு மாவட்டங்களில் மாற்றுத்திறனாளிகளுடைய மேம்பாட்டிற்காகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

தமிழகத்தை, எல்லாத் துறைகளிலும் வழிகாட்டிடும் இந்தியாவில் முதன்மை மாநிலமாகச் செய்திட நமது அரசு பல நல்ல திட்டங்களைத் தீட்டி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

“மக்களின் கல்வி, நல்வாழ்வு தேவைகளை செயல்படுத்த எங்களை ஒப்படைத்துள்ளோம்” : முதல்வர் நெகிழ்ச்சி பேச்சு !

இதில் முக்கிய அங்கமாக குழந்தைகள் மற்றும் மாணவ மாணவியர்களின் முழுமையான வளர்ச்சியினைக் கருத்தில் கொண்டு நல்ல தரமான கல்வி அளிப்பது மட்டுமல்லாமல் பொறுப்புள்ள குடிமக்களாகவும் ஆக்கக்கூடிய வகையில், சிறப்பான சூழ்நிலைகளை உருவாக்கி அவற்றைச் செயல்படுத்துவதில் முழுக்கவனத்தைச் செலுத்தி வருகிறது.

அந்த வகையில் மாற்றுத்திறனாளிகளை குழந்தைப் பருவம் முதற்கொண்டு கண்டறிந்து, அவர்களின் மேம்பாட்டிற்கான கட்டமைப்பு வசதிகளை உறுதிப்படுத்தி, அவர்களுக்கு சமநிலை, சமவாய்ப்பு எனும் சமுதாய சமூகநீதியினை நிலைநாட்டிட, நமது அரசு முழுமூச்சுடனும் முனைப்புடனும் செயலாற்றி வருகின்றது.

• இல்லம் தேடிக் கல்வி • மக்களைத் தேடி மருத்துவம் • நான் முதல்வன் • கல்லூரிக் கனவு ஆகிய திட்டங்களின் மூலமாக மக்களின் கல்வி, நல்வாழ்வு ஆகிய தேவைகளை முழுமையாகச் செயல்படுத்த எங்களை நாங்கள் ஒப்படைத்துக் கொண்டிருக்கிறோம்.

அரசின் இந்த ஆக்கப்பூர்வமான திட்டங்களுக்கு நீங்களும் உதவி செய்யுங்கள். உங்களைப் போன்ற நிறுவனங்களுக்கு நாங்களும் இயன்ற உதவிகளை உறுதியாகச் செய்வோம்.

தமிழ்நாட்டில் நான்கு மாவட்டங்களில் செயல்பட்டு வருகின்ற அமர் சேவா சங்கம், மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக தனது திட்டங்களை தமிழ்நாடு முழுவதும் விரிவாக்கம் செய்திட வேண்டும் என்கின்ற என்னுடைய விருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

மீண்டும் ஒருமுறை மரியாதைக்குரிய ராமகிருஷ்ணன் அவர்களை வணங்கி விடை பெறுகிறேன். மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.

அனைத்துவிதமான வெற்றிகளையும் நீங்கள் அடைய வேண்டும். உங்களது அனைத்து கனவுகளும் நிறைவேற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories