முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் நெருங்கிய நண்பர் வடவள்ளி சந்திரசேகர். அ.தி.மு.க., எம்.ஜி.ஆர் அணியின் முக்கிய நிர்வாகியாகன இவர், அ.தி.மு.க.-வின் அதிகாரபூர்வ நாளேடான 'நமது அம்மா' நாளிதழின் வெளியிட்டாளரும் கூட.
மேலும் கே.சி.பி என்ற தனியார் நிறுவனத்தின் பங்குதாரரான வடவள்ளி சந்திரசேகர், அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் அதிக அளவில் மாநகராட்சி பணிகள், ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்கு டெண்டர் எடுத்து கோடி கணக்கான ரூபாய் பணத்தில் பணிகளை மேற்கொண்டிருக்கிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேட்டில் நடைபெற்ற சோதனையில், இரண்டு முறை இவரின் வீடு, அலுவலகங்களில் உள்ளிட்ட சொந்தமான இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.
இந்த நிலையில், மீண்டும் நேற்று நடைபெற்ற சோதனையானது நள்ளிரவு 12.45 மணிக்கு முடிந்தன. வடவள்ளி சந்திர சேகர் வீடு, தந்தை வீடு உள்ளிட்ட இடங்களில் நள்ளிரவில் சோதனை முடிந்த நிலையில், ஐடி அதிகாரிகள் தொடர்ந்து இரண்டாம் நாளாக சந்திரசேகர் அலுவலகத்தில் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைபற்றப்பட்டதாக தெரிகிறது.
வடவள்ளி சந்திர சேகர் மீது வரி ஏய்ப்பு மற்றும் டெண்டர் முறைகேடு உள்ளிட்ட புகார்கள் குவிந்திருக்கின்றன. இந்த சோதனையானது, எடப்பாடி மற்றும் வேலுமணி வட்டாரத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.