தமிழுக்காக ஏராளமான கவிதைகள் கவிதை நூல்கள் உள்ளிட்ட படைப்புகளை படித்துள்ள கவிஞர் வாமு. சேதுராமன் நேற்று வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார். இந்த நிலையில், அவரின் மறைவுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மறைந்த தமிழறிஞரும் கவிஞருமான கலைமாமணி கவிக்கோ திரு.வாமு. சேதுராமன் அவர்கள் 04.07.2025 அன்று அகவை மூப்பின் காரணமாக இயற்கை எய்தியதை அடுத்து, அன்னாரின் உடலுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று (05.07.2025) நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.
ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், நூறுக்கும் மேற்பட்ட கவிதை நூல்கள் உள்ளிட்ட படைப்புகளைத் தமிழுலகிற்கு அளித்துள்ளவர் பெருங்கவிக்கோ திரு.வா.மு. சேதுராமன் அவர்கள். மேலும், அவர் தமிழ்நாடு அரசின் கலைமாமணி, திருவள்ளுவர் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
பெருங்கவிக்கோ என்று அனைவராலும் அறியப்பட்ட மூத்த தமிழறிஞர் கலைமாமணி திரு.வா.மு. சேதுராமன் அவர்களை கௌரவிக்கும் விதமாக தமிழ்நாடு அரசு காவல் துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்திட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்"என்று கூறப்பட்டுள்ளது.