கோவை மாவட்டம், சூலூர் அடுத்த பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் யோகேஸ்வரன். கல்லூரி மாணவரான இவர் இருசக்கர வாகனம் வாங்கத் திட்டமிட்டுள்ளார். இதற்காக, ஆன்லைனில் கடன் வழங்கும் அப்ளிகேஷன் ஆப்பை பதிவிரங்கம் செய்து அதில், ரூ. 20 ஆயிரம் பணம் பெற்றுள்ளார். பிறகு அந்த கடன் நிறுவனம் மூன்று தவணையாகப் பணத்தைக் கட்டி விடவேண்டும் என கூறியுள்ளது.
இதையடுத்து யோகேஸ்வரன்,தனது பான் கார்டு, ஆதார் கார்டு, வங்கி கணக்கு உள்ளிட்ட விவரங்களை அந்த அப்ளிகேஷனுக்கு அனுப்பி வைத்துள்ளார். பிறகு முதல் தவணையாக 3500 ரூபாய் பணத்தையும் அப்ளிகேஷன் கொடுத்துள்ள வங்கி முகவரிக்கு அனுப்பி உள்ளார்.
இந்நிலையில், கடன் கொடுத்த ஆன்லைன் அப்ளிகேஷன் தரப்பிலிருந்து யோகேஸ்வரனை வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்டு பணம் குறிப்பிட்ட தேதியில் செலுத்தப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.
இதைகேட்டு அதிர்ச்சியடைந்த அவர் பணத்தைச் செலுத்தி விட்டதாகவும், அதற்கான ஆதாரத்தையும் வாட்ஸ் மூலம் அனுப்பியுள்ளார். இருப்பினும் அவர்கள் இதை ஏற்க மறுத்து பணத்தை கட்டவில்லை என திரும்ப திரும்ப கூறியுள்ளது.
மேலும், யோகேஸ்வரனின் செல்போனில் இருக்கும் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் எண்களை ஹேக் செய்து, அவர்களுக்குத் தவறான செய்திகளைக் கடன் செயலி அப்ளிகேஷன் தரப்பிலிருந்து அனுப்பியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய நண்பர்கள் இதுகுறித்து யோகேஸ்வரனிடம் தெரிவித்துள்ளனர்.
பின்னர், உடனே கடன் கொடுத்த செயலியைத் தொடர்புகொண்டு யோகேஸ்வரன் கேட்ட போது பணத்தை உடனடியாக செலுத்த வேண்டும் இல்லையென்றால் இதுபோன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவோம் என மிரட்டியுள்ளனர்.
இதையடுத்து, யோகேஸ்வரன் நடந்த விவரத்தை சைபர் கிரைம் போலிஸாரிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.