காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அருகே பால் நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். அவருடைய மனைவி ஷாலினி. இந்த தம்பதிக்கு பவிஸ்கா என்ற ஒன்றரை வயது குழந்தை இருந்தது.
இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி மாலை பவிஸ்கா பக்கத்துவீட்டில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது, வீட்டில் சுடச்சுடப் பலகாரம் சுட்டு விட்டு தனியாக எடுத்து வைத்திருந்த கொதிக்கும் எண்ணெயில் குழந்தை தவறி விழுந்துள்ளது.
இதில், குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனே குழந்தையை மீட்டு அருகே மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். பின்னர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பவிஸ்கா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் தகவல் அறிந்து விரைந்து சென்ற ஸ்ரீபெரும்புதூர் போலிஸார் குழந்தையின் உடலை உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொதிக்கும் எண்ணெயில் தவறி விழுந்த ஒன்றரை வயதுக் குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.