தமிழ்நாடு

கோவையில் திறக்கப்பட்டிருக்கும் புதிய மேம்பாலம்.. போக்குவரத்து நெரிசல் பிரச்சனைக்கு முதல் கட்ட தீர்வு!

கோயம்புத்தூர் நகரில் சுங்கம் முக்கிய சந்திப்புகளில் கட்டப்பட்டுள்ள மேம்பாலம் மற்றும் கவுண்டம்பாளையம் சந்திப்பில் கட்டப்பட்டுள்ள மேம்பாலம் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

கோவையில் திறக்கப்பட்டிருக்கும் புதிய மேம்பாலம்.. போக்குவரத்து நெரிசல் பிரச்சனைக்கு முதல் கட்ட தீர்வு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கோயமுத்தூர் என்றாலே சமீப காலத்தில் நினைவுக்கு வருவது போக்குவரத்து நெரிசல். மூன்று ஆண்டுகளுக்கு முன் அ.தி..முக ஆட்சியில் தெளிவான திட்டமிடல் இல்லாததால், திருச்சி சாலை, அவிநாசி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, பொள்ளாச்சி மற்றும் சத்தியமங்கலம் சாலைகள் கடும் போக்குவரத்து நெரிசலாலே ஸ்ம்பித்தன.

குறிப்பாக அவிநாசி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, திருச்சி சாலையில் பத்து நிமிடத்தில் இயல்பாக கடக்க வேண்டிய சாலையில் ஒரு மணி நேரம் வரை வாகனம் ஆமை வேகத்திலேயே மெல்ல ஊர்ந்து பயணிக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகினர்.

ஆம்புலன்ஸ் , அத்யாவசிய தேவைக்காக பயணிப்பவர்களுக்கு கோயமுத்தூர் சாலைகள் சவாலானதாகவே இருந்து வந்திருக்கின்றன. இந்த நிலையில் மந்தமான மேம்பால பணிகள் தி.மு.க ஆட்சி பொறுப்பேற்றவுடன் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு விரைந்து முடிக்கப்பட்டது.

மூன்று கிலோ மீட்டர் தொலைவில் ராமநாதபுரம் - சுங்கம் மேம்பாலம் 238 கோடி செலவில் நான்கு வழிச்சாலையாக கட்டி முடித்திருக்கின்றனர். இது உக்கடம் புறவழி, பெரிய ஆஸ்பத்திரி சாலையை இருபுறங்களிலும், திருச்சி, மதுரை, நெல்லை தென்மாவட்டங்களுக்கான பிரதான சாலையை இணைக்கும் விதமாக கட்டியிருக்கின்றனர். இதே போன்று கவுண்டம்பாளையத்தில் மேட்டுப்பாளையம், உதகை நோக்கி பயணிக்கும் வாகனங்கள் போக்குவதத்துக்காக ஒரு கிலோ மீட்டர் தொலைவில் 60 கோடி மதிப்பீட்டில் பாலம் கட்டிமுடிக்கப்பட்டிருக்கின்றன.

கோவையில் திறக்கப்பட்டிருக்கும் புதிய மேம்பாலம்.. போக்குவரத்து நெரிசல் பிரச்சனைக்கு முதல் கட்ட தீர்வு!

இந்நிலையில், இன்று (11.6.2022) தலைமைச் செயலகத்தில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் கோயம்புத்தூர் நகரில் ரூ.230 கோடி செலவில் இராமநாதபுரம் மற்றும் சுங்கம் முக்கிய சந்திப்புகளில் தே.நெ.எண். 67-ல் கட்டப்பட்டுள்ள மேம்பாலம் மற்றும் அதே தேசிய நெடுஞ்சாலையில் ரூ.60 கோடி செலவில் கவுண்டம்பாளையம் சந்திப்பில் கட்டப்பட்டுள்ள மேம்பாலம் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இந்நிலையில் இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொருளாதாரத்தின் அங்கங்களான விவசாயம், தொழில், வணிகம், சுற்றுலா, போன்ற துறைகளின் மேம்பாட்டிற்கு சாலை உட்கட்டமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளை பராமரிப்பதும், மேம்பாடு செய்வதும் மற்றும் கிராமப்புறங்களுக்கு இணைப்புச் சாலை அமைப்பதும் நெடுஞ்சாலைத் துறையின் முக்கிய பணிகளாகும். தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத் துறை வாயிலாக தரமான மற்றும் பாதுகாப்பான சாலை கட்டமைப்பினை சிறந்த முறையில் உருவாக்கி, பராமரித்து வருகிறது.

அந்த வகையில், இராமநாதபுரம் மற்றும் சுங்கம் சந்திப்பில் ரூ.230 கோடி செலவில் 3.15 கி.மீ. நீளத்திற்கு கட்டப்பட்டுள்ள 4 வழித்தட மேம்பாலத்தை மக்களின் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார்.

இப்பாலம் திறக்கப்படுவதால், இராமநாதபுரம், ஓலம்பஸ் மற்றும் சுங்கம் ஆகிய மூன்று முக்கிய சந்திப்புகள் மற்றும் அல்வேனியா பள்ளி சந்திப்பு, சவுரிபாளையம் சந்திப்பு, புளியகுளம் பிரிவு சாலை சந்திப்பு, வானொலி நிலையம் சந்திப்பு, பந்தய சாலை சந்திப்பு, வாலாங்குளம் சாலை சந்திப்பு ஆகிய ஆறு இதர சந்திப்புகளிடையே உள்ள போக்குவரத்து நெரிசல் குறைவதோடு, சிக்னல் மற்றும் சந்திப்புகளில் வாகனங்கள் நின்று செல்வதால் ஏற்படும் காலதாமதமும் தவிர்க்கப்படும். அத்துடன் விபத்துக்களை தவிர்ப்பதற்கும் இது உதவும். மேலும், சிங்காநல்லூரிலிருந்து அரசு மருத்துவமனை, இரயில் நிலையம், நகர்மண்டபம், உக்கடம் ஆகிய பகுதிகளுக்கு மக்களால் போக்குவரத்து நெரிசலின்றி எளிதாக செல்ல முடியும். இதன்மூலம் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன்பெறுவர்.

கோவையில் திறக்கப்பட்டிருக்கும் புதிய மேம்பாலம்.. போக்குவரத்து நெரிசல் பிரச்சனைக்கு முதல் கட்ட தீர்வு!

மேலும், கோயம்புத்தூர் நகரில், கவுண்டம்பாளையம் சந்திப்பில் ரூ.60 கோடி செலவில் 1.17 கி.மீ. நீளத்திற்கு கட்டப்பட்டுள்ள 4 வழித்தட மேம்பாலத்தை மக்களின் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார். இப்பாலம் திறக்கப்படுவதால், கவுண்டம்பாளையம் மற்றும் நல்லாம்பாளையம் சாலை சந்திப்புகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறையும். இதன்மூலம் கோவையிலிருந்து மேட்டுப்பாளையம், குன்னூர், ஊட்டி, கூடலூர் மற்றும் மைசூர் செல்லும் வாகனங்கள் எளிதாக செல் முடியும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட நாட்களாக வாகன ஓட்டிகள் பாலம் எப்போது திறக்கப்படும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் இன்று பாலம் திறக்கப்பட்டதனால்பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் பயணித்தனர். தொழில் வளம் நிறைந்த கோயமுத்தூருக்கு சாலை போன்ற உட்கட்டமைப்புகள் அவசியமான ஒன்றாகி விட்டது. என்றும், தமிழ்நாட்டின் முதல்வர் தொடர்ந்து கோயமுத்தூருக்கு வரலாற்று சிறப்பு மிக்க திட்டங்களை தருவாரென அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் பேட்டியின்போது தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories